பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

வேண்டும் விடுதலை

உரிமைகள் பெறுவதில் மூன்று நிலைகள்!
ஒன்று, கொடுக்கப்பெறும் உரிமைகள்!
இரண்டு, கேட்கப்பெறும் உரிமைகள்!
மூன்று, மீட்கப் பெறும் உரிமைகள்!
முன்னது, பிஞ்சு! துவர்ப்பது! - பசியற்ற ஒருவனுக்கு
இடப்பெறும் நல்விருந்து போன்றது! பருவமில்லாத
ஒருவனுக்குச் செய்து வைத்த திருமணம், அது!

அடுத்தது, காய்! புளிப்பது! - பசிக்கின்ற ஒருவனுக்குக்
கொடுக்கப் பெறும் பற்றாத பழங்கஞ்சி போன்றது!
இளைஞன் கைக்கு எட்டாமல்
நிற்கின்ற எழிலார்ந்த கன்னிப்பெண், அது,!

மூன்றாவது, பழம்! - பட்டினி கிடப்பவன் பறித்து
உண்ணும் பாலமிழ்து போன்றது: பாய்ச்சல் கொண்ட
புலியை வெற்றிகொண்டு, தன் தாயை அதன்
பிடியிலிருந்து மீட்கும் வீர விளையாட்டு, அது!

முதலது, ஆங்கிலேயர் தில்லிக்கு வழங்கிய குடியரசுரிமை!
பின்னது தில்லி, தமிழர்க்கு வழங்கிய வாழ்வுரிமை!
இறுதியது, தமிழர்கள் தமக்குள்ள தாய் நிலத்தைத் தாமே
மீட்டுக்கொள்ளப் போராடும் விடுதலை உரிமை!

ஆம்! உரிமை நாட்டியம் ஒடுக்கப்பெற்று, நெருக்கடி
நிலைகள் தாண்டவமாடும் இந்நேரத்தில்தான்,
தென்மொழி தொடங்கிய உரிமைப் போரின் மூன்றாவது
போராட்டக்களம் அமைக்கப் பெற்றுள்ளது.

அமைக்கப் பெற்றுள்ள இடம் சென்னை! நாள் சூலை :13
உரிமைத்தடை கோழைகளுக்கு அச்சமூட்டும் அரிமா முழக்கம்!
ஆனால், அதுவே மறவர்களுக்கு வீரமூட்டும் யானைப்பிளிறல்
விடுதலைப் போராட்ட மறவர்களின் வீர முழக்கங்கள்

சென்னைத் தெருக்களில் முழங்கும் நாள் அது!
வீறு கொண்ட வேங்கைகள் வெற்றி கொள்ளப்
புறப்படும் உரிமைப் போர் வரலாற்றின் உணர்ச்சி வரிகளைச்
சமைக்கப் போகும் நாள் அது!

விடுதலையணிகள் பல இணைந்து தலைகொடுக்கப்
புறப்பட்டுள்ளன!