பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

223

கூறிக்கொள்ளும் இயங்கத்தான். இத்தமிழினத்திற்கு ஏதாவது பயனுள்ள செயல்களைத் திட்டமிட்டுச் செய்கின்றதா எனில், ஐயகோ பெரியார் தொடங்கிய அப் பெரும்பயன் இயக்கமும் வெறுஞ் செயல்களிலும் வீணான விளம்பரங்களிலுமன்றோ தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தலை தடுமாறி பண வாணிக முதலாளி போல் வருவாயைப் பெருக்கிக் கொண்டு வறிதான முயற்சிகளில் ஈடுபட்டுக் கால அழிவு செய்து கொண்டு வருகிறது.

பகுத்தறிவு என்பதை இனமுயற்சியாக அவ் வியக்கம் அறிவிப்பதையும் 'கடவுள் இல்லை' என்பதை அதன் கொள்கையாகப் பரப்பவதையுமே அது செய்து கொண்டுள்ளது பெரிதும் வருந்தத்தக்கது. பகுத்தறிவு என்பது மாந்த இனத்திற்கே பொதுவான ஓர் அறிவு முயற்சி. தமிழின முன்னேற்றத்துக்கான தனி முயற்சியன்று அது. அது போலவே கடவுள் இல்லை என்பதும் அல்லது இருக்கின்றது என்பதும் ஓர் அறிவுக் கொள்கையாகவும் இருக்கலாம்; அல்லது மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம். அதற்கும் ஓர் இனத்தின் அடிமை நீக்கத்திற்கும், அல்லது உரிமை மீட்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உலக உரிமை மீட்பு வரலாறுகளில் விடுதலை உணர்வுதான் செயல்பட்டு, அடிமைப்பட்ட இன முன்னேற்ற முயற்சிகளுக்குப் பயன்பட்டிருக்கின்றதே தவிர, பகுத்தறிவுணர்வோ இறைமறுப்புக் கொள்கையோ அல்ல. இக்காலும் உலகத் தேசிய இனங்கள் அத்தகைய கருத்துகளில் கவனம் செலுத்தாமல், உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களையும் கருத்துகளை மக்களிடையில் பரப்புவதையுமே தம் இன முன்னேற்ற முயற்சிகளாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இனி கடந்த காலத்தில் உருசியாவில் மார்க்சீயக் கொள்கையை முன் வைத்துப் பெரும் புரட்சிப் போராட்டங்களை நடத்தி, நாட்டை மீட்டுத் தேசிய இனமுன்னேற்றத்திற்கு அடிப்படையான பொதுவுடைமைச் சமநிலைக் குடியரசை அமைத்துக் கொடுத்த இலெனின், ஏங்கல்சு போன்ற மேதைகளும், பகுத்தறிவையோ, இறைமறுப்புக் கொள்கையையோ தங்களின் இன மீட்புக்கும் அரசியல் அதிகார மீட்புக்குமான உத்திகளாகப் பயன்படுத்தவில்லை.

மேலும், தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு, முற்ற முடிந்த முடியாகத் தமிழக விடுதலையே முதற் கொள்கையாகும். தமிழகம் விடுதலை பெற்றால்தான், தமிழினத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வாய்ப்பிருக்க முடியும். இவ் விடுதலை உணர்வை, இனவுணர்வாலேயே தட்டியெழுப்ப முடியும். இவ்வினவுணர்வையும், மொழியுணர்வாலேயே கட்டியமைக்க இயலும். வேறு நாடுகள் சிலவற்றில், ஒரே