பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

வேண்டும் விடுதலை

இக்கொடுமைகள் நிகழ்ந்தன என்று கர்நாடக முன்னாள் முதல்வர் இராமகிருட்டிண கெக்டே கூறுவது மிகமிக உண்மையானதாகும்.

ஆட்சியில் ஊழலும் கட்சியில் எதிர்ப்பும் பங்காரப்பா தேடிக் கொண்ட இழிவுகளாகும். இவற்றைத் திசைதிருப்பவே இவர் இக்கலவரங்களைத் தூண்டி விட்டார் என்று கெக்டே கூறியுள்ளார்.

1983-இல் இலங்கையில் தமிழர்களைச் சிங்களவர் கொடுமைப்படுத்தியதைப் போல், இங்கும் தமிழர்கள் கொடுமைக்கும் அழிவுக்கும் உள்ளாக வேண்டியுள்ளது பற்றித் தமிழ் நலம், தமிழர் நலம் கருதும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

இத்தனை கொலை, கொள்ளை, தீவைப்பு, மாந்தர் இழிவு, பொருள் சேதங்கள் நடந்தும் நடுவணரசு, அதன் தலைமையமைச்சர் நரசிம்மராவ். அவரின் அமைச்சர்கள், இந்திரா கட்சித் தலைவர்கள் எனப்படுவோர் ஒரு கண்டனம், சிறு வருத்தம், கண்டிப்பு - எதுவும் சொல்லவில்லையே..!

அதுதான் இந்தியா. அதுதான் பார்ப்பனிய ஆட்சி..!

தமிழினம் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் நடுவணரசின் கோட்பாடு. கொள்கை. மறைமுக ஏற்பாடு. எல்லாம்..!

ஒற்றுமையும் ஒருமைப்பாடும் வெறும் பேச்சளவில்தான்.!

இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுகையில், அது அயல்நாட்டுச் சிக்கல், நாம் தலையிடுவது கூடாது என்று ஞாயம் பேசினர், இங்குள்ள அரசியல் தலைவர்கள்...!

ஆனால், இங்கேயே ஒரு மாநிலத்து மக்கள் இன்னொரு மாநிலத்து மக்களை அழித்து ஒழிக்கிறார்களே - அதை என்னவென்று கூறி அமைதி சொல்வார்கள்..?

எல்லாவற்றுக்கும் விடை ஒன்றுதான். காவிரி நீர்ச்சிக்கலை இனச் சிக்கலாக மாற்றி விட்டார் பங்காரப்பா!

இனி, தமிழினம் தமிழர்கள் . தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டியது தான். அதன் நோக்கம் (இலட்சியம்). இனி, தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால்தான் தமிழர்கள் வாழமுடியும் என்ற நிலைக்குப் போவதுதான் என்றால் அதைக் காலமே இத்தகைய சூழல்களை உருவாக்கட்டும்.!

— தமிழ்நிலம், இதழ் எண். 151, பிப்பிரவரி, 1992