பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

39

கொண்டிருக்கவில்லை. நம் தனிப்பட்ட இயக்கங்களை நாம் உண்ணுவது, உறங்குவது உடுத்துவது மனைவி மக்களுடன் உறவாடுவது போன்றவற்றின் ஈடுபாடுகளை அவன் தடைசெய்து வைத்திருந்தான் என்பதிலும் பொருளில்லை. மாறாக இவைபோன்ற எல்லா வகையான இன்பநுகர்ச்சிகளுக்கும் அவன் ஆட்சிக்காலத்தில் பெரிதும் நல்ல வாய்ப்புகளையே ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். நம் கல்விக் கண்களையும் திறந்து நம்மைப்பற்றியிருந்த அறியாமை இருளையும் ஓட்டுதற்கு அவன் பெரிதும் உதவியிருந்திருக்கின்றான். அப்படிப்பட்ட நிலையில்- அவன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான் என்று சொல்வதற்கே தனிபட்ட ஒருவனைப் பொறுத்தமட்டில் எந்த ஒர் அடையாளமும் இல்லாத நிலையில் அவனுக்கு நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்று ஏன் சொல்லிக் கொண்டிருந்தோம்? .

அவன் நமக்கு- தனிப்பட்ட நம் ஒருவருக்கு என்ன வகையான நன்மை செய்திருந்தாலும். நம் எல்லாருக்கும் வேண்டாதவனாக இருந்தான் என்பதைக் கருதியே அவன் நம்மை அடிமைப்படுத்தியிருந்தான் என்று கூற வேண்டியிருந்தது. நாம் எல்லாரும் சேர்ந்து அவனை ஒன்றும் கேட்க முடியாது. நம் எல்லாரைப் பற்றியும் நாமே எண்ணி முடிவுகட்டிக் கொள்ள முடியாது. அவன் உதவியின்றி நம் எல்லாராலும் எங்கும் செல்ல முடியாது. நம் எல்லாருக்கும் சொந்தமான இந்நிலப்பகுதியில் ஒரு துண்டு நிலத்தை வெட்டியெடுத்துக் கப்பலில் போட்டு இங்கிலாந்துக்குக் கொண்டு போனாலும் நாம் அவனைப் போய் ஏன் அப்படிச் செய்கிறாய் என்று கேட்க முடியாது. இங்கிருந்த பொன்னையும் பொருளையும் வாரிக் கொண்டு போய் அவன் நாட்டில் குவித்துக் கொண்டாலும் அவன் பார்த்து ஏதாவது கொடுப்பதை - நாம் பெற்றுக் கொண்டாலொழிய நாமாகப் போய் அவன் கொண்டு போனவற்றைப் பிடுங்கிக் கொண்டு வர முடியாது. நம்மை முன்னேற்றிக் கொள்ளக்கூடிய எண்ணங்கள் நம் மனத்தில் தோன்றினாலும் நாம் அவற்றை மற்றவர்களுக்குச் சொல்ல முடியாது. அவற்றைச் செய்தித்தாளில் எழுதிப்பரப்பிவிட முடியாது. நாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும்.அவன் ஒப்புக்கொண்டால்தான் ஆயிற்று இல்லையென்றால் நாம் எழுதாமலும் பேசாமலும் ஊமை நாடகந்தான் போட்டுக் காட்டிக் கொண்டிருக்க முடியும். ஆனால் இத்தனைத் தடைகள் இருந்தாலும் அவன் நமக்குச் சோறு போட்டான். இங்கிலாந்திலிருந்து நம் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களைக்