பக்கம்:வைணமும் தமிழும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த நூல் எழுதுமாறு 13-2-1981 லேயே கேட்டுக் கொண்டார்கள், கழக அதிபர் திரு.இரா. முத்துக்குமாரசாமி அவர்கள். அப்போது அடியேன் வேறு திருப்பணியில் ஈடுபட்டிருப்பதால் எழுத முடியவில்லை. அதற்குப் பின்னரும் பல பொறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தமையால் இதில் நாட்டம் செலுத்த முடியவில்லை. சென்ற ஆண்டு (1997) சற்று ஒய்வு கிடைத்தமையால் ஒரே மூச்சில் இந்த நூலை எழுதி முடித்தேன். .

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் என அரிய நண்பரும் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாசாமி வழிவந்தவரும் தற்சமயம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வைணவத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவருமான டாக்டர் எம்.ஏ. வேங்கடகிருட்டிணன் அவர்கள். அவருக்கு என் நெஞ்சம் கலந்த நன்றி. அணிந்துரையில் சில கருத்துவேறுபாடுகளைக் காட்டியுள்ளமை பற்றி வாசகர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. இவர் தென்கலை வைணவர் . இதற்கு வடகலை வைணவர் ஒருவர் அணிந்துரை வழங்கினால் அது இதற்கு நேர்-மாறான கருத்து வேறுபாடுகட்கு இடம் அளிப்பதாக அமையும். இந்த நூலை அச்சிடுங்கால் பார்வைப் படிவங்களைச் சரி பார்த்த என் அபிமான புத்திரி டாக்டர் M. B. சியாமளா தேவிக்கு என் உளங் கலந்த நன்றி உரியது.

சைவ சமயத்தைச் சார்ந்த அடியேன் கடந்த நாற்பதாண்டுகளாக வைணவ சமயத்திலும் வைணவ இலக்கியங்களிலும் ஆழங்கால்பட்டு அநுபவித்து வருபவன். அடியேனின் டாக்டர் (பிஎச்டி) பட்ட ஆய்வேடு நம்மாழ்வார் தத்துவம்பற்றியது; ஆங்கிலத்தில் ஆயிரம் பக்கம் கொண்டது. திருவேங்கடவன் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளது. அடியேனின் பார்வை விருப்பு வெறுப்பற்ற நோக்குடையது.

xiii