பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வகைக் காய்கறிகள் இருந்தன. "ஆடு, ஆடு!" என்று கதறிக்கொண்டே ஓடினாள். பின்னாலே நவாபின் ஆடு துரத்திக்கொண்டு வந்தது. தொண்டைமானுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சட்டென்று ஆட்டுக்கு முன் போய் நின்றான். அது பிரமித்து நின்றது. அவனை முட்ட வந்தது. அவன் தன் ஊரில் மாட்டையும் ஆட்டையும் அடக்கிய திறலாளன். ஆதலால் நெளிவு அறிந்து அதை மடக்கிவிட்டான். அந்த ஆடு அவனை ஒன்றும் செய்ய முடியாமல் வந்த வழியே போய்விட்டது. காய்கறி வைத்திருந்த பெண்மணி பெற்றேன் பிழைத்தேன் என ஓடிப்போனாள்.

தொண்டைமான் அந்த முரட்டுக் கடாவை அடக்கியதைக் கண்ட ஊர் மக்கள் வியந்தார்கள். அவனுடைய வீரத்தைப் பாராட்டினார்கள். சிலர், 'நவாபின் காதில் விழுந்தால் இவனை என்ன செய்வாரோ?' என்று அஞ்சினார்கள். தொண்டைமான் அவர்கள் வார்த்தை ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளாவிட்டாலும், அந்த ஆடு நவாபின் மகன் வளர்க்கும் செல்ல ஆடு என்ற செய்தியைத் தெரிந்து கொண்டான். அப்போது அவனுக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றியது.

மறு நாள் அந்த ஆடு வரும் வழியையே பார்த்துக் கொண்டு தெருவில் நின்றிருந்தான் தொண்டைமான். ஆடு வந்தது. அதை வீரன் பற்றினான். அது திமிறியது. அதனை அடக்கியதோடு தன் கையில் இருந்த கூரிய அரிவாளால் அதன் காதுகள் இரண்டின் நுனியையும் அறுத்துவிட்டான். இதுவரையில் எதிர்ப்பின்றி மனம் போலத் திரிந்த அந்த ஆட்டுக்குச் சினம் பொங்கியது. ஆனாலும், தொண்டைமான் இடம் தெரிந்து தட்டிய தட்டுகளால் அது சோர்வடைந்து போய்விட்டது.