பக்கம்:கண்ணகி தேவி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி தேவி

43


" கோவா மலையாரம் கோத்த கடலாரம்
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே ;
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக்குருந்தொசித்தான் என்பரால்.”

என உள் வரி வாழ்த்தாகவும்,

"மடத்தாழு நெஞ்சத்துக் கஞ்சணார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே !
நாராய ணாவென்னா நாவென்ன நாவே!"

எனப் படர்க்கைப் பரவலாகவும் பாடி, "நமது ஆவினம் பிணி நீங்க ! பாண்டியன் முரசம் பகைவரை வென்று முழங்க !" என வாழ்த்திக் குரவைக்கூத்தை ஆடி முடித்தனர்.

கண்ணகி துன்பம் :

குரவை நாடகம் ஆடி முடிந்த பின்னர் மாதரி நீராடித் திருமால் அடியைப் பூசிப்பதற்கு வையை யாற்றிற்குச் சென்றாள். அப்போது உள் நகரத்தில் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்ட இடைச்சி ஒருத்தி, அதனைத் தெரிவிக்க விரைந்து வந்தாள் ; வந்தவள், கண்ணகியின் அழகையும் இளமையையுங் கண்டு அவளிடம் தன் வாக்கால் அதனைத் தெரிவிக்க நாவெழாது, குரவை ஆடிமுடித்து நீராடிவந்த ஆயர் மகளிரிடம் இரகசியமாய்க் கூறி, அவர்களுடன் விம்மி நின்றாள். கண்ணகி இதனைக் கண்டு, அருகில் நின்ற ஐயையை அழைத்து, " தோழி, என் காதலர் இன்னும் வரக் காணேன் , அதனால் என்னெஞ்சம் வருந்தி மயங்குகின்றது; இம்மாதிரி யாவரும் மறைவாகப் பேசிக்கொள்வது யாதோ! தெரிந்திலேன் !" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/51&oldid=1410979" இலிருந்து மீள்விக்கப்பட்டது