பாவலரேறு பெருஞ்சித்திரனார்
59
இனி, தமிழர் தமிழ்மொழி சிறந்தது, உயர்ந்தது என்று பாராட்டிப் புகழ்ந்து எழுதுவதைப் போல், பாரதியாரும் ஆரிய மொழியையும் ஆரிய இனத்தையும் அவ்வாறு எழுதியிருக்கக் கூடாதா என்று சிலர் கேட்கலாம். பாரதியார் அவர் இனத்தையும் மொழியையும் எவ்வளவு உயர்வுக்கேனும் தூக்கட்டும். அதைப்பற்றி எவருக்கும் கவலையில்லை. ஆனால் அதை வரலாறாக்கக் கூடாது. அவர் தூக்கிப் பேசுகின்ற தன்மை இன்னொரு மெய்ப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பேசப் பெறுகையில்தான் வரலாறு சிதைக்கப் பெறுகின்றது. இந்திய வரலாற்றுச் சிதைவுக்கு ஆரியரின் இந்தக் குழப்ப நிலைகளே கரணியங்கள். அவர்களின் தொன்மங்களிலும், தொல் கதைகளிலும் உள்ள அரசர் பெயர்களில் சிலவும், நிகழ்ச்சிகளில் சிலவும் உண்மையே! ஆனால் அவ்வுண்மையைச் சார்ந்தவாறு பொய்ம்மைகளும் புளுகுகளும் நிரம்பப் படைக்கப் பெற்று அவற்றுள் இணைக்கப் பெற்றுவிட்டன. எனவே உண்மை எது பொய்யெது என உணரமாட்டாமல் வரலாற்று மயக்கங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு, மக்களைப் பல்வேறு உணர்ச்சிகளுக்கு உள்ளாக்குகின்றன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இந்நிலைகள் மிகுதி. அதற்குக் கரணியம் ஆரியப் பூசல்களே !
பாரதியாருக்கு ஆரியவுணர்ச்சி அளவிறந்து இருந்ததுடன் வேதங்களே இந்திய நாட்டின் உயர்வுக்கு அடிப்படையானவை என்னும் மூடக் கொள்கையும் மிகுதியாகவிருந்தது. வேதங்களைப் பழிப்பவர்களை வெளித்திசை மிலேச்சர் என்று இழித்தும் அயன்மைப்படுத்தியும் கூறுகின்றார். மற்றும்,
- "தெள்ளிய அந்தணர் வேதம்” - என்றும்,
- “ஒதுமினோ வேதங்கள்
- ஓங்குமினோ! ஓங்குமினோ!” - என்றும்,
- “பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே
- பார்மிசை யேதொரு நூல்.இது போலே?” - என்றும்,
- "நாவினில் வேத முடையவள் கையில்
- நலந்திகழ் வாளுளடை யாள்” - என்றும்,
- “அவள்; வேதங்கள் பாடுவாள் காணீர் - உண்மை
- வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்" - என்றும்,
- “வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை -
- மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே!” - என்றும்,
- “மீட்டுமுனக் குரைத்திடுவேன் ஆதிசக்தி
- வேதத்தின் முடியினிலோ விளங்கும் சக்தி!” - என்றும்,