சிவகாமிக்கு அவளது கணவனைப் பிடிக்கவில்லை.
எப்படிப் பிடிக்கும் ?
அவள் பெண். வயது பதினெட்டு ஆகிறது. போன வருஷம் தான் திருமணம் நடைபெற்றது.
ஜோதிட சிகாமணி ஜாதகம் பார்த்து, பொருத்தங்கள் எல்லாம் ரொம்ப அருமையாக அமைந்திருக்கின்றன என்று உறுதி கூறி, ஐந்து ரூபாய் வாங்கிப் போன பிறகு அவள் தந்தைக்கு உற்சாகம் தாங்க முடிய வில்லை.
புரோகிதருக்கும் உவகையாகத் தானிருக்கும். ‘ஆயிரம் பொய் சொல்லியானாலும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை’ என்ற தர்மத்தின்படி கடந்ததற்காக அல்ல. இப்போ கிடைத்தது, இனி கல்யாணத்தின் போது அகப்படப்போகிற லாபத்துக்கு அச்சாரம் போட்டிருப்பது போல என்ற ஆசை நினைப்பு மகிழ்வைத் தூண்டியது.
சிவகாமியின் தந்தை ரொம்ப சந்தோஷமாக வீட்டுள் நுழைந்தார், அவருக்கு திருப்தி இராதா பின்னே!
‘சிவகாமி, உன் அதிர்ஷ்டம் தானம்மா. நல்ல சம்பந்தம். அவருக்கு சொத்து ரொம்ப இருக்கு!’ என்று இறுமாந்து போனார்.
பதினேழு வயசு நிரம்பாத பாவையின் மனம் ‘அவர் எப்படி இருப்பார்? வயசு என்ன இருக்கும்?’ என்று கேட்கத் துடித்தது, அவர்யார் என்று அறியத்