பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ஓர் இயல்பு. தன்னைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் கொடுப்பது ஒரு வகை இயல்பு. தனக்குச் சம்பந்தம் இல்லாதவர்களுக்கும் கொடுப்பது மற்றோர் இயல்பு. இப்படி நான்கு விதமான இயல்புகள் உண்டு.

இந்த நான்கு விதமான தன்மைகளில் தானே மற்றவர்களுடையவற்றையும் பெற்று வாழ வேண்டும் என்று இருப்பவன் மனிதர்களுள் மிகவும் மட்டமானவன். தன்னுடைய பொருளைத் தானே அநுபவிக்க வேண்டுமென்று இருப்பவன் அவனைவிடச் சிறிது உயர்ந்தவன். தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் நல்லவர்களில் கொஞ்சம் மட்டம். எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் நல்லவர்களில் உத்தமமானவன்.

பிறரிடத்திலுள்ள பொருள்கள் எல்லாம் தனக்கு வேண்டுமென்று கை நீட்டுகிறானே, அவனுடைய குணத்திற்கு அவா என்று பெயர். தன்னுடைய பொருளைத் தானே அனுபவிக்க வேண்டுமென்று விரும்புபவன் பற்று உள்ளவன். தன்னுடைய பொருளைத் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் அன்பு உள்ளவன். தன்னிடமுள்ள பொருளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் அருள் உள்ளவன். அவா முதல் அருள் வரையில் உள்ள நான்கு இயல்புகளும் மனத்தில் எழுவனவே. அவா உள்ளவன் கடுமையான இருள் உலகத்தில் இருக்கிறான். பற்று உள்ளவன் மங்கிய இருள் உலகத்திற்குள் வருகிறான். அன்பு உள்ளவன் மங்கிய ஒளி உலகத்திற்கு வருகிறான். அருள் உள்ளவன் நல்ல ஒளி உலகத்தில் மிளிர்கிறான்.

ஒளி உலகக் கோடு அன்பிலே தோன்றுகிறது. இருள் உலகக் கோடு பற்றிலே தோன்றுகிறது. அவா நிலையிலிருந்து பற்று நிலைக்கு உயர வேண்டும்; பற்றிலிருந்து அன்பு நிலைக்கு உயர வேண்டும்; அன்பு நிலையிலிருந்து அருள் நிலைக்கு உயர வேண்டும்.

அருணகிரி நாதர் அருள் நிலைக்கு உயர்ந்தவர். நம்மைப் போலவே அவர் அவா நிலையிலே வாழ்ந்தவர் என்றாலும், அவா நிலையிலிருந்து பற்று நிலையிலே வாழ்ந்து, பற்று

18