பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த நாள்ளே வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை. மு. கோதை நாயகி அம்மாள் எல்லாம் எழுதினாங்களே, அது மாதிரி விறுவிறுன்னு ஓடற நாவல்ஸ் வேணும் சார்.”

“வடுவூர் அய்யங்கார் மாதிரி எழுதறவங்க யாராவது இந்தக் காலத்திலேயும் இருப்பாங்க! தமிழ் மாகஸீன்ஸிலே தேடிப் பாருங்க. இங்கே மாகஸீன்ஸ் லெண்ட் பண்றதில்லே சமூக நலனுக்கும் இலக்கியத் தரத்துக்கும் எட்டுகிற மாதிரி உள்ள தமிழ், இங்கிலிஷ் புக்ஸ் மட்டும்தான் லெண்ட் பண்றோம்” என்று கூறியபடி அவருடைய சந்தா ஐந்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான் பாமசிவம்.

“இவ்வளவு ரஃபா பிஹேவ் பண்ணினா உங்க பிஸினஸ் என்ன ஆவும்? கொஞ்சம் கஸ்டமர்ஸைத் தட்டிக் குடுத்து அநுசரிச்சிப் போகணும் சார்!”

“தட்டிக் குடுக்கறதுக்கு எங்கியாவது ‘பார்க்’ பக்கமா ‘பாடி மஸாஜ்’ பண்றவன் காத்துக்கிட்டு இருப்பான். அவங்கிட்ட போய்க் கேளுங்க. தட்டிக் குடுத்து மஸாஜ், மாலிஷ் எல்லாமே பண்ணுவான்; இதமாக இருக்கும்.

“ரொம்பத் திமிராப் பேசறீங்களே?”

“சுயமரியாதைக்கு முட்டாள்கள் தருகிற புதுப் பெயர் திமிர் என்பது.”

இதைக் கேட்டுக்கொண்டு நின்ற பூமி ‘சபாஷ்’ என்று பரமசிவத்துக்கு ஆதரவாகக் கரகோஷமே செய்துவிட்டான். இந்தத் தலைமுறை இளைஞர்களில் கொள்கைத் தெரிவுள்ளவர்களுக்கே உரிய கம்பீரம் கோபம் எல்லாம் பரமசிவத்தினிடம் இருப்பதைப் பூமி இரசித்தான்.

இதற்குப் பிறகு பரமசிவத்திடம் பழகப் பழக மேலேயிருந்து கரும்பு தின்பது போல அந்நட்பில் ருசி நீடிக்கக் கண்டான் பூமி.

இரண்டு மூன்று நாள் அஞ்ஞாத வாசத்துக்குப்பின் தாயின் நெகடிவ்வை ஸ்டுடியோவில் பிரிண்ட் போடக்-