பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12

இன்றைய கவிதைகள் வெறும் காகிதங்களில் எழுதப்படுவதில்லை. அவை வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் கண்ணீரிலும் வரதட்சணைக் கொடுமையால் மணமாகாது தவிக்கும் யுவதிகளின் தவிப்பிலும் உழைப்பவர்களின் வறுமையிலும் எழுதப்படுகின்றன.


முத்தக்காளுக்குத் தன் மேல் கோபமாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சாதாரணமாகப் போயிருக்க வேண்டிய விஷயத்தைப் பெரிய சண்டையாக்கி மெஸ்ஸில் இவ்வளவு சேதமும் விளையத் தான் காரணமாக இருந்து விட்டதாக அவளுக்குத் தோன்றுமோ என்று பூமிக்குத் தயக்கமாக இருந்தது. அதிகம் படிப்பறிவில்லாத ஒரு சிறு வயது விதவைக்கு அத்தகைய மன நிலைதான் இருக்குமென்று அவனால் மிகவும் சுலபமாகவே அநுமானிக்க முடிந்தது. அளவு கடந்த தைரியத்தாலும், தன்மானத்தினாலும் வருகிற நிரந்தரப் பெருமையைவிடச் சுமாரான பணவினாலும் பயத்தினாலும் கிடைக்கிற தற்காலிக லாபமே போதுமென்றுதான் சராசரியானவர்கள் நினைப்பார்கள். ஒருவேளை முத்தக்காளும் அப்படிச் சராசரியமானவளாகவே இருக்கக்கூடும்.

அங்கே அநியாயமாகப் வசூலுக்கு வந்தவர்கள் மேல் தான் கொண்ட கோபம், எதிர்ப்பு, நியாயவாதப் பேச்சுக்கள் முடிவான அடிதடி சண்டை எல்லாமே இப்போது இவ்வளவு தூரம் நஷ்டப்பட்டுவிட்ட பின் முத்தக்காளுக்கு எரிச்சலூட்டியிருக்கலாம்.