பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சாயங்கால மேகங்கள்

விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் தரமான புத்தகங்களைத் தேடிப் படிக்கிறவன் என்பதுதான் அதிகம் நினைவிருப்பதாகத் தெரிகிறது.

அவளுடைய நினைப்பில் தான் எப்படி எந்த ஆழத்தில் பதிந்து ஊன்றியிருக்கிறோம் என்பது புரிந்த போது பூமிக்குப் பெருமிதமாக இருந்தது. பூரிப்பாகவும் இருந்தது.

மாலையில் சித்ராவும் யாரென்று தெரியாத வேறு ஓர் இளைஞனும் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரியிலிருந்து சேர்ந்து புறப்பட்டுத் திரும்பிச் சென்றதைக் கண்டு ஏற்பட்டிருந்த எரிச்சல்கூட இப்போது அவனுள் கொஞ்சம் தணிந்து போய் அடங்கியிருந்தது.

பூமி வீட்டுக்குத் திரும்பிச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் கன்னையன் அவனைத் தேடி வந்து சேர்ந்தான். குமாருடைய வண்டி ரிப்பேர் வேலைகள் முடிந்து ஒர்க் ஷாப்பிலி ருந்து ‘சுகமடைந்து’ திரும்பிவிட்டதாம். அதனால் அவன் சொந்த வண்டியை ஓட்டப் போகவேண்டியிருக்கும் என்றும், பூமி தன் வண்டியை மறுநாள் முதல் தானே எடுக்க முடியுமா என்று கன்னையன் கேட்டான். பூமியும் அதற்கு இசைந்தான்.

வழக்கமான வேலையைச் செய்யாமலும், மனிதர்களைச் சந்திக்காமலும் ஓரிடத்தில் அடைந்து கிடப்பதன் மூலம் துயரத்தையோ சோகத்தையோ மறந்துவிட முடியுமென்பதில் - அவனுக்கு நம்பிக்கையில்லை.

ஓர் இயந்திரம் துருப் பிடிப்பதற்கும் பழுதடைவதற்கும் எப்படி அதன் இயக்கமின்மையும், சும்மா கிடப்பதும் காரணமாகின்றனவோ, அதுபோல் மனம் துருப்பிடிப்பதற்கும் பழுதடைவதற்கும் கூட இயக்கமின்மையும் முடங்கிக் கிடப்பதும் காரணமாகலாம் என்ற கருத்துடையவன் பூமிநாதன்.

ஏற்கெனவே கன்னையனும் பேட்டை நண்பர்களும் வற்புறுத்தியதனால்தான் இந்தச் சில நாட்களாகத் தான்