பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சாயங்கால மேகங்கள்

மெஸ் வாயிலில் இரும்புத் தொப்பிப் போலீஸ்காரர்கள் இருவர் தென்பட்டனர்: சாவு வீடு போல் அப்பகுதி களை இழந்து காணப்பட்டது. அருகே உள்ள வெற்றிலை பாக்குக் கடைகூட மூடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கல்லெறியும், சோடாபாட்டில் வீச்சும் நடந்திருப்பதற்கான அடையாளமாக தெருவிலும், பிளாட்பாரத்திலும் கற்கள், கண்ணாடி உடைசல்கள் நிரம்பிக் கிடந்தன. மெஸ் மட்டுமின்றி அக்கம் பக்கத்துக் கடைகள் உட்பட விளம்பரப் பலகைகளும், இரவில் அது தெரிவதற்காகப் போடப்பட்டிருந்த குழல் விளக்குகளும், பல்புகளும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

கலகலப்பாக இருக்க வேண்டிய பகுதி வெறிச்சோடிக் கிடந்தது. இரவு அரசியல் தூண்டுதலின் பேரில் நடந்த போலீஸ் ரெய்டுக்குப் பிறகு அதிகாலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்கும் நடுவே இந்தத் தாக்குதல் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. மெஸ்ஸுக்குள் நுழையும் பிரதான வாயிற்கதவுகள் கூட உடைக்கப்பட்டிருந்தன.

உள்ளே நுழைய முயன்ற அவளைப் போலீஸ்காரர்கள் ஏதோ சொல்லித் தடுக்க முயன்றனர். ‘மெஸ் நடத்துகிற அம்மாளுக்குத் தான் மிகவும் வேண்டியவள்’ என்று அவள் பதில் சொல்லியவுடன் அவர்கள் வேண்டா வெறுப்பாக அவளைத் தடுப்பதை நிறுத்திக்கொண்டனர்.

உள்ளே நுழைந்தால் அங்கேயும் பயங்கரமான சேதங்கள் தென்பட்டன. பாத்திரம் பண்டங்கள், மேஜை நாற்காலிகள், டவரா டம்ளர்கள் எல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு அங்கங்கே கிடந்தன, பால் தயிர் கொட்டப்பட்டிருந்தது. காய் கறிகள் முழுசாகவும் சமையலுக்கென்று நறுக்கப்பட்டவையுமாகச் சிதறிக் கிடந்தன. அடுப்பும், அடுப்பு மேடையும் இடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

அரிசி, பருப்பு, புளி என்று ஸ்டோர் ரூமில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த சாமான்கள் சூறையாடப்பட்டிருந்தன.