பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

79

ஒரு தேசத்தில் ஒழுங்கும் ஜனநாயகமுமே நோய்வாய்ப்பட்டு விட்டால் யாரால் திருத்த முடியும்?

நள்ளிரவில் கைது செய்யப்பட்ட பூமி’ ஜாமீனில் விடுதலையாகி வந்தான். அவனைச் சுற்றிலும் பெருங் கூட்டமாக டிரைவர்களும், நண்பர்களும், சூழ்ந்திருந்ததால், சித்ரா அருகில் நெருங்கிச் சென்று பேச முடியவில்லை.

அத்தனை கூட்டத்திலும் ஞாபகமாக அவனே அவள் பக்கம் தேடி வந்து, “நான். இப்போது இவர்களோடு கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கிறது. வக்கீலைப் பார்க்க வேண்டும். முத்தக்காள் மெஸ்ஸில் போய் இருந்தால் அங்கே வந்து பார்க்கிறேன். எப்படியும் சீக்கிரமாக வந்துவிடப் பார்க்கிறேன்” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டுப் போனான்.

சித்ரா தானாகவே மெஸ்ஸுக்குப் போக வேண்டுமென்றுதான் இருந்தாள்: போலீஸ் நிலைய வாயிலில் முத்தக்காள் மெஸ்ஸும் பழிவாங்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்ட போதே அவள் அங்கு போய்ப் பார்க்க வேண்டுமென்று தான் நினைத்திருந்தாள்.

தங்கள் அளவில் ஒரு வம்புக்கும் போகாமல் ஒதுங்கி வாழ்பவர்களைக்கூட அரசியல்வாதிகள் சீண்டிவிட்டு வம்புக்கு இழுத்து நஷ்டப்படுத்துவதைப் பார்த்து மிகவும் வருத்தமாய் இருந்தது!.

வாரிசு இல்லாத ஏழை நடுத்தர வயது விதவை ஒருத்தி காலஞ் சென்ற கணவனின் தொழிலில் அவனோடு அன்று தோழமை கொண்டு பழகியவர்களின் இன்றைய அநுதாபத்தோடு ஒரு மெஸ் நடத்திப் பிழைத்தால் அதற்கும் இடையூறு வருகிறது.

போலீஸ் நிலையத்திலிருந்து நேரே மெஸ்ஸுக்குத்தான் போனாள் சித்ரா. பூமி தன்னை அங்கே போகச் சொல்லியதில் ஏதோ குறிப்பு இருக்க வேண்டும் என்று. அவளுக்குத் தோன்றியது.