பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

153

"நம்மை விட வேகமாகப் போகிறவர்கள் செய்கிற தவறுகளுக்கும் சேர்த்து நாம்தான் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும் போலிருக்கிறது.”

“சாலைப் போக்குவரத்திற்கு மட்டுமில்லாமல் இன்றைய நமது வாழ்க்கைப் பிரச்னைகளுக்கும் கூட இதுதான் பொருந்தும். நம்மை விட வேகமாகப் போகிறவர்கள் நம்மேல் மோதி அழித்து விடாமல் நாம்தான் விழிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கவேண்டியிருக்கிறது--”

“வழியில் தங்களுக்கு முன்னே போய்க் கொண்டிருப்பவர்களை மிதித்தோ மோதியோ கீழே தள்ளி விட்டாவது மேலே போய் லாபமும் பயனும் அடைய வேண்டுமென்ற அசாத்திய அவசரம் அதிகரித்திருக்கிற காலம்தான் இது!”

“சத்திய அவசரமோ சத்திய அவசியமோதான் இன்று எங்குமே அதிகமாகத் தென்படுவதில்லை.”

“உங்களைப் போன்ற சிலரிடமாவது அது இருக்கிறதே என்பதில் எனக்கு மகிழ்ச்சி, நீங்கள் மட்டுமாவது இப்படி விழிப்புடன் இருக்கிறீர்களே! உங்களுடைய ஜாக்கிரதை உணர்ச்சியால்தான் இன்று நான் உயிர் பிழைத்தேன்.”

“சாலைகளையும் தாறுமாறாக விரையும் அபாயகரமான வாகனங்களையும் பார்க்கும்போது ஒவ்வொருவரும் வீட்டை விட்டுத் தெருவில் இறங்காதவரை பத்திரமாகத்தான் இருக்கிறார்கள். தெருக்களிலும் சாலைகளிலும் நேரக்கூடிய விபத்துகளிலிருந்து விடுபட வைப்பதால்தான் வீடு என்று குடியிருக்கும் இடத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதாகவே புதுவிளக்கம் கூறி விடலாம்.”

“நகரங்களில் நடக்கும் விபத்துக்களைப் பார்த்தால், நீங்கள் கூறுகிற விளக்கம் பொருத்தமாகத் தான் இருக்கிறது.”

“நடக்கிறவர்களின் தவறுகளால் சில விபத்துகளும், வாகனங்களின் தவறுகளால் சில விபத்துக்களும், சாலைகளின் நெருக்கடியால் சில விபத்துக்களும், மனிதர்களின் அசுரவேகத்-