பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருளை விரைந்து உணர்ந்து பற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாமல் இந்தக் கலைகளில் எதிலும் வெற்றி பெறமுடியாது என்பது உறுதியாகத் தெரிந்தது அவர்களுக்கு.

உடனே உணர்தல், உடனே தீர்மானித்தல், உடனே செயல்படுதல் என்ற தன்மைகளே இந்தக் கலையில் திறமையை நிர்ணயிக்கின்றன என்பதையும் அறிய முடிந்தது. அறிவுடனும் மதிநுட்பத்துடனும் சம்மந்தப்படாது தோன்றியபடி வலிமை யைப் பயன்படுத்தும் வேறு யுத்தக் கலைகள் பல இருக்கின்றன. கராத்தேயோ, குங்ஃபூவோ அப்படி இல்லை என்பதை அதன் துரிதகதியே உணர்த்தியது. வலிமையும் மதிநுட்பமும் கலந்தால்தான் இதில் வெற்றி என்ற அளவில் இவை இருந்தன. மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது மிகவும் மந்த உணர்வுடன் இருந்த மாணவனிடம் பூமியே இப்படிச் சொல்லிக் கண்டித்ததை அவர்கள் கேட்டார்கள்.

உள்ளே போய்ப் பயிற்சி மாணவர்களை அனுப்பிவிட்டுக் கராத்தே உடைகளை மாற்றி வழக்கமான உடைகளை அணிந்து வந்தான் பூமி. பேச வேண்டியதை வெளியே போய்ப் பேசலாம் என்பது போல் அவர்களையும் உடனழைத்துக் கொண்டு அங்கிருந்து பூமி வெளியேறினான்.

அந்த இடத்திற்கு மிக அருகிலிருந்த கார்ப்பரேஷன் பூங்கா ஒன்றில் போய் அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். முத்தக்காளை மட்டும் தனியே விட்டுவிட்டு வந்திருப்பதால் பூமி உடனே மெஸ் பக்கம் போயாக வேண்டுமென்று அவசரப்பட்டான். தேவகியை அவனுக்கு விவரங்களைச் சொல்லுமாறு அவசரப்படுத்தினாள் சித்ரா. தேவகி சொல்லத் தொடங்கினாள்:

எங்க வீட்டுப் பக்கத்திலே ஒரு ஸ்டோர்லே எனக்கு ரொம்பவும் வேண்டிய ஏழைக் குடும்பம் ஒண்ணு ஒண்டுக்குடித்தனம் இருக்கு. வீட்டிலே ஆண் பிள்ளைத் துணை கிடையாது. விதவையான அம்மா வேலைபார்த்துப் பெண்ணைப் படிக்க வைக்கிறாள். நடுத்தர வயதிலே கணவனை இழந்து ஒரே ஒரு பெண்ணுடன் அநாதரவாக வாழும்