பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

163

"நாடகம் ஆடினது போதும்டீ? கேஷ் பணத்திலே கையாடி நூறு நூறாப் பைக்குள்ளே வச்சு வீட்டுக்குக் கொண்டு போறதைத்தான் கேட்கிறேன்...”

சித்ரா திகைத்துப் போனாள். ஊழல் பேர்வழியான அந்த சர்வர் மெல்ல நழுவினான். அன்று வாங்கிய சொத்தச் சம்பளத்தை எண்ணிக் கைப்பைக்குள் போட்டதை முத்தக்காளுக்கு விளக்கினாள் சித்ரா. முத்தக்காள் அதை நம்பவே தயாராயில்லை. ஏற்கவும் தயாராயில்லை. “உன் சம்பளப் பணத்தை இங்கே வந்து எண்ணிப் பைக்குள்ளே போடறத்துக்கு என்னடீ அவசியம்? சும்மாப் புளுகாதே!... நான் கண்ணால் பார்க்கறப்பவே பொய் சொன்னா எப்பிடி?”

சித்ராவுக்கு ஆத்திரம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம். கண்களில் நீர் மல்கிவிட்டது. பனை மரத்தின் கீழே நின்று பாலைக் குடிப்பது கூட ஆபத்தான அபவாதத்தை உண்டாக்கி விட முடியும் என்று இப்போது புரிந்திருந்தது அவளுக்கு. சத்தத்தையும், கூப்பாட்டையும் கேட்டுப் பூமி ஓடி வந்தான்.

“நீங்க முதல்லே உள்ள போங்கம்மா? சித்ரா விஷயம் என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கடுமையான குரலில் அதட்டி முத்தக்காளை அவன் உள்ளே அனுப்பினான். சித்ரா விஷயத்தை, அவனிடம் விவரித்தாள். அந்த சர்வரைக் கூப்பிட்டு உடனே விசாரித்தான் பூமி. பூமிக்குப் பயந்து சற்றுமுன் தான் முத்தக்காளிடம் சித்ராவைப் பற்றிக் கோள் சொல்லியதாக ஒப்புக் கொண்டான். அவன்.

“நீ மறுபடி கேஷ் டேபிளில் உட்கார்” என்று சித்ராவை அதட்டி உட்காரச் சொன்னான் பூமி. சித்ரா தயங்கினாள் உட்காரப் பயப்பட்டாள்.

“நம்மிடம் தவறில்லாதபோது நாம் கூசுவதும் தயங்குவதும் போல் கோழைத்தனம் வேறில்லை! நீ இப்போது கேஷ் டேபிளில் உட்காரப் போகிறாயா இல்லையா?” என்று பூமி சித்ராவை நோக்கி உரத்த குரலில் அதட்டினான்.