அலை ஓசை/புயல்/பேச்சு யுத்தம்

விக்கிமூலம் இலிருந்து

வீட்டு வாசலிலே நின்ற ராகவனுக்கும் வீட்டுக்குள்ளே வந்த ராகவனுக்கும் மிக்க வித்தியாசம் காணப்பட்டது. ராட்சத சுபாவம் எங்கேயோ போய்விட்டது. முகத்திலும் பேச்சிலும் இனிமை ததும்பியது. இந்த மாறுதலைப் பார்த்துச் சீதா சந்தோஷம் அடைந்தாள். கோபமோ தாபமோ நம்மிடம் எது இருந்தாலும் மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளாமல் நடந்து கொள்கிறாரே என்று சந்தோஷப்பட்டாள்.

முதலில் தாமாவையும் பாமாவையும் வரவேற்று ராகவன், குதூகலமாகப் பேசினான். பிறகு தாரிணியைப் பார்த்து "ஏது ஏது? உங்களைப் பார்ப்பது மூன்றாம் பிறை பார்ப்பது போலாகி விட்டதே!" என்றான்.

"பூரண சந்திரன் சில சமயம் பிறையாக மாறுவது இயல்பு தானே!" என்றாள் தாரிணி.

"பூரண சந்திரன் எப்போதும் பூரண சந்திரன் தான்! நம்முடைய பார்வைக்குச் சில சமயம் பூரண சந்திரனாகத் தோன்றுகிறது; சில சமயம் பிறையாகத் தோன்றுகிறது!" என்றான் ராகவன்.

தாரிணி பதில் சொல்லுவதற்குள்ளே, "ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; சூரியனோடு சேர்ந்தால் சந்திரன் அடியோடு மறைந்து தான் போகும்!" என்று சொல்லிவிட்டுச் சூரியாவைப் பார்த்தான். "நீ எப்போது அப்பா, வந்தாய்?" என்று கேட்டான்.

சூரியனையும் சந்திரனையும் பற்றி ராகவன் சிலேடையாகப் பேசியது கேட்டுச் சூரியாவினுடைய முகம் சிவந்து போயிருந்தது. தன்னுடைய மனக் குழப்பத்தைக் காட்டிக் கொள்ளாமல், "வந்து அரை மணி நேரம் ஆயிற்று, மாப்பிள்ளை ஸார்! நானும் தாரிணி தேவியும் சேர்ந்து தான் வந்தோம்?" என்றான்.

தாமாவும் பாமாவும் இப்போது பேச்சில் குறுக்கிட்டு, ராகவன் அன்றிரவு சாலையில் கிடந்த உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றது பற்றி அவனைப் பாராட்டிப் பேசினார்கள். அதற்கு ராகவன், "இது என்ன பிரமாத விஷயம்? யாரும் செய்ய வேண்டிய கடமைதானே? வேறு விஷயம் பேசுங்கள்!" என்றான்.

தாமா, "உங்களுக்குப் பிரமாதமில்லை எங்களுக்கெல்லாம் பிரமாதமாகத்தான் தோன்றுகிறது. பாவம், அன்றைக்கு உங்கள் மனைவி ரொம்பக் கலவரமடைந்திருக்க வேண்டுமே!" என்றாள்.

"ஆமாம்; அன்றைக்கு அப்புறம் இவளைத் தனியாக வீட்டில் விட்டுப் போகவே முடியவில்லை. அதற்காகத்தான் என் தாயாருக்கு உடனே கடிதம் எழுதி வரவழைத்தேன்."

"உங்கள் தாயார் ரொம்ப 'ஸ்வீட் லேடி' என்று கேள்வி. சீதா சொல்லியிருக்கிறாள். எங்களுக்கு அவரை நீங்கள் அறிமுகம் செய்து வைக்கப் போவதில்லையா?"

"இப்போதுதானே இரண்டு நாள் ரயில் பிரயாணம் செய்து விட்டு வந்திருக்கிறாள்? என் தாயார் கொஞ்சம் கர்நாடகம், வழியில் சாப்பிடவே இல்லையாம். ஸ்நான பானம் எல்லாம் செய்து முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும்" என்றான் ராகவன்.

"எப்படியும் உங்கள் தாயாரைப் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் போகப் போகிறோம்!" என்று தாமாவும் பாமாவும் ஒரே மூச்சில் சொன்னார்கள்.

"அம்மா! உங்களைப் பார்த்துவிட்டுத்தான் அவர்கள் போகப் போகிறார்களாம்!" என்று உள்ளே போய்ச் சொன்னாள் சீதா.

"ஏண்டி, பெண்ணே! இந்தப் பிசாசுகள் எல்லாம் இங்கே எதற்காக வருகின்றன? நீயும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கிறாயே? இப்படித் துப்புக் கெட்டவளை நான் பார்த்ததேயில்லை!" என்றாள் காமாட்சி அம்மாள்.

"அம்மா! இவர்கள் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்கிறார்களே தவிர உண்மையில் ரொம்ப நல்லவர்கள்!" என்றாள் சீதா.

"நல்லவர்களாவது, பொல்லாதவர்களாவது? இவர்களையெல்லாம் வீட்டுக்குள்ளே வரவிடக் கூடாது! நான் ரொம்பக் களைப்பாயிருக்கிறேன். இன்னொரு நாளைக்குப் பார்க்கிறேன் என்று சொல்லிவிடு!" என்றாள் காமாட்சி அம்மாள்.

சீதா டிராயிங் அறைக்குத் திரும்பிச் சென்று, "அம்மாவுக்குத் தலைவலியாயிருக்கிறதாம், இன்னொரு நாளைக்கு எல்லாரையும் சாவகாசமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதாகச் சொல்லுகிறார்" என்றாள்.

இந்தச் சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது. ராகவன் போய் ரிஸீவரை எடுத்துப் பேசினான்.

"என்ன? ஓஹோ! மதோங்கர் விஷயமா? குற்றவாளியைப் பிடித்து விட்டார்களா? - யார் அது? அடடே! என்ன துணிச்சல்? ரொம்ப சரி! - எனக்குத் தெரிந்ததைச் சாட்சி சொல்ல நான் எப்போதும் தயார்!... இல்லை. எங்கும் போக வில்லை! - ஊரிலேதான் இருப்பேன்! ரைட் ஓ!"

தாரிணியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவருடைய கண்களிலும் கவலைக் குறியும் பயமும் தென்பட்டன.

ராகவன் டெலிபோன் பேசிவிட்டுத் திரும்பி வந்ததும், "என்ன? என்ன?" என்று ஒரே மூச்சாக எல்லோரும் கேட்டார்கள்.

"மாதோங்கரைக் கொன்ற குற்றவாளியைப் போலீஸார் கண்டுபிடித்து விட்டார்களாம். மதோங்கரிடம் வெகு காலமாக வேலை பார்த்து வந்த வேலைக்காரன் தான் கொலை செய்தானாம். அவனே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டானாம்..." என்று ராகவன் சொல்லி வந்தபோது, சீதா குறுகிட்டு, "அது எப்படி இருக்க முடியும்?" என்றாள்.

அப்போது "சீதா!" என்று தாரிணியின் குரல் கேட்டது. சீதா அவள் முகத்தைப் பார்த்தாள். தாரிணியின் கண்களில் தோன்றிய எச்சரிக்கையை உணர்ந்து கொண்டாள்.

"சீதா! நீ எதற்காக இதில் தலையிட்டு அபிப்பிராயம் சொல்கிறாய்? பெண் பிள்ளைகளாகிய நமக்குப் போலீஸ் விஷயமெல்லாம் என்ன தெரியும்?" என்றாள் தாரிணி.

"சீதாவுக்குத் தெரியாத விஷயத்தில் அபிப்பிராயம் சொல்வதில் ஒரு திருப்தி" என்றான் ராகவன்.

சீதா மெதுவாகச் சுதாரித்துக் கொண்டு, "ஆமாம்; எனக்கென்ன தெரியும் அதைப் பற்றி? ஏதோ வார்த்தைக்குச் சொன்னேன். சாட்சி, சம்மன் என்று ஏதோ சொன்னீர்களே? அது என்ன?" என்றாள்.

"சாட்சி என்றால், சாட்சி என்று அர்த்தம்!" என்றான் ராகவன்.

"நீங்கள் எதற்குச் சாட்சி சொல்ல வேண்டும்?"

"தெருவிலே கிடந்த உடலைக் கண்டுபிடித்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதற்குச் சாட்சி..."

"அப்படியானால் சூரியாவும் சாட்சி சொல்ல வேண்டும் அல்லவா?"

"ஆமாம்; அவனுக்கும் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் வரும்."

"அதுதான் கேட்டேன். லாகூருக்குப் பயணம் வைத்திருக்கிறான். போக வேண்டாமென்று நீங்கள் சொல்லுங்கள்" என்றாள் சீதா.

"ஓகோ! லாகூருக்குப் பயணமா? வேண்டாமென்று நாம் எதற்காகச் சொல்ல வேண்டும்! சொன்னாலும் அவன் கேட்கப் போவதில்லை. மேலும், கேஸ் விசாரணை நாளைக்கே ஆரம்பித்து விடாது! ரொம்ப நாள் பிடிக்கும்!" என்றான் ராகவன்.

உடனே புது ஞாபகம் ஏதோ வந்தவனாக, "சூரியா மட்டும் போகப் போகிறானா? வேறு யாராவது துணை உண்டா?" என்று கேட்டான்.

"தாரிணி அக்காவும் கூடப் போகிறார்களாம்!" என்றாள் சீதா.

"தாரிணி! இது உண்மையா? லாகூரில் இப்போது என்ன விசேஷம்?" என்று ராகவன் கவலை நிறைந்த குரலில் கேட்டான்.


"அதைப்பற்றித்தான் இவ்வளவு நேரம் நாங்கள் விவாதம் செய்து கொண்டிருந்தோம். நீங்களே கேளுங்கள், மிஸ்டர் ராகவன். இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமாம்! சுதந்திரம் அடைந்ததும் சுதேச ராஜாக்கள், ராணிகள், திவான்கள், திவான்களுடைய பெண்கள் எல்லாரையும் ஒரேயடியாகத் துவம்ஸம் செய்துவிட வேண்டுமாம்! பெரிய உத்தியோகங்களையெல்லாம் தொலைத்துவிட வேண்டுமாம்... அதற்காக இவர்கள் லாகூர் போகிறார்களாம்! எப்படியிருக்கிறது கதை?" என்று சொல்லிவிட்டுத் தாமா இடி இடி என்று சிரித்தாள். பாமாவும் கூடச் சேர்ந்து சிரித்தாள்.

"சரி! ஆனால் லாகூருக்கு எதற்காகப் போக வேண்டும்? இந்தியாவின் சுதந்திரத்தை லாகூரிலே யாராவது ஒளித்து வைத்திருக்கிறார்களா?" என்று ராகவன் கேட்டதும், மறுபடியும் ஒரு பெரும் சிரிப்பு எழுந்தது.

"விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமலே 'ஓஹோ' என்று சிரிக்கிறீர்கள். அதில் என்ன பிரயோஜனம்? வெற்றுச் சிரிப்புச் சிரித்து விட்டால் எல்லாம் சரியாய்ப் போய்விட்டதா!" என்றான் சூரியா.

"எல்லோரும் கொஞ்சம் பேசாமலிருங்கள். சிரிக்கவே கூடாது. கப்சிப்!... விஷயம் இன்னதென்று மிஸ்டர் சூரியா விளக்கமாகச் சொல்லட்டும். அப்படியும் நம்முடைய மூளையில் விஷயம் ஏறாவிட்டால் குதுப்மினார் உச்சியில் ஏறித் தலைகீழாக விழுந்து உயிரை விடுவோம்!" என்றாள் பாமா.

"இனிமேல் யாராவது சிரித்தால் சூரியா கையில் அகப்பட்டதை எடுத்து எறிந்து மண்டையை உடைத்து விடுவார்! ஜாக்கிரதை" என்றாள் தாமா.

தாஜ்மகாலில் அவன் பொம்மையை எடுத்தெறிந்து தாரிணியைக் காயப்படுத்தியது பற்றியே இவ்விதம் தாமா குறிப்பிட்டாள்.

சூரியா அதனால் தனக்கு ஏற்பட்ட அவமான உணர்ச்சியை அடக்கிக் கொண்டு மேலே சொன்னான்: "ஆமாம்! சில சமயம் அவ்வாறு கோபம் வரத்தான் செய்கிறது; ஜனங்கள் இப்படிக் கொஞ்சங்கூடச் சிந்தனா சக்தி இல்லாமலிருக்கிறார்களே என்று. இங்கிலீஷ் கல்வி முறை அப்படி நம்முடைய மூளையைக் கெடுத்திருக்கிறது. இரண்டாவது ஹென்றி விவாகம் செய்து கொண்ட தேதியும், ஏழாவது ஹென்றி விவாகரத்து செய்து கொண்ட தேதியும், முதலாவது சார்லஸ் பட்டமிழந்த தேதியும், மூன்றாவது ஜார்ஜுக்குப் பைத்தியம் பிடித்த தேதியும் - இப்படிப்பட்ட விஷயங்களையே மூளையில் போட்டுத் திணித்து விட்டால், சிந்தனை செய்யும் சக்தி நமக்கு எப்படி இருக்கும்? 'லாகூரில் யாராவது சுதந்திரத்தை ஒளித்து வைத்திருக்கிறார்களா?' என்று ராகவன் கேட்டார். எங்கேயும் யாரும் சுதந்திரத்தை ஒளித்து வைக்கவில்லை. அது தம் கண் முன்னே ஜோதிமயமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. நாம் தான் பார்க்கும் சக்தியில்லாத குருடர்களாகப் போய் விட்டோ ம். இந்தியாவின் சுதந்திரத்துக்கு இப்போது முக்கிய தடையாயிருப்பது இந்து - முஸ்லிம் பிளவு. நாளுக்கு நாள் இந்தப் பிளவு அதிகமாகி வருகிறது. பஞ்சாபிலே சிலர், 'முஸ்லிம்களுக்குத் தனி ராஜ்யம் வேண்டும்' என்று கூடக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவை எல்லாம் பிரிட்டிஷாரின் ராஜ தந்திர சூழ்ச்சி. இந்தச் சூழ்ச்சிக்குப் பதில் சூழ்ச்சி கண்டுபிடிக்கத்தான் லாகூரில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடை பெறுகிறது. இந்து முஸ்லிம் பிளவு பிரசாரத்துக்கு விதை பஞ்சாபிலே தான் போட்டிருக்கிறார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனி இனம் என்று பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஆதலால் நாங்களும் அங்கே போய்க் கூட்டம் போட்டு யோசனை செய்யப் போகிறோம்..."

"ஓகோ! இனிமேல் தான் யோசிக்கப் போகிறீர்களோ!" என்று ஏளனக் குரலில் கூறினான் ராகவன்.

"யோசனையெல்லாம் தயாராயிருக்கிறது. அதைக் காரியத்தில் நிறைவேற்றத் திட்டம் போட வேண்டியது தான் பாக்கி. இந்து - முஸ்லிம் பிளவை இப்போது வளர்த்து வருகிறவர்கள், பதவி மோகம் கொண்ட அரசியல்வாதிகளும், அதிகார மோகம் கொண்ட சர்க்கார் உத்தியோகஸ்தர்களுந்தான்..."

"உத்தியோகஸ்தர்களைப் பற்றி ஏதாவது குறை சொல்லாவிட்டால், அன்றைக்கு உனக்கு இராத் தூக்கம் வராது போலிருக்கிறது!" என்றான் சௌந்தரராகவன்.

"சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் தான் இந்தியாவிலேயே படிப்புள்ள அறிவாளிகள். அவர்கள் அன்னிய ஆட்சியை இங்கே நிலை நாட்டுவதில் தங்களுடைய படிப்பையும் அறிவையும் செலவழித்து வருகிறார்கள். அவர்களைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது?"

"நன்றாகக் குற்றம் சொல், வேண்டாம் என்று சொல்லவில்லை. உன்னுடைய குற்றச்சாட்டுக்களையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியும்!... உன்னுடைய அபாரமான யோசனை என்னவென்று சொல்!"

"சமூக வேற்றுமையும் துவேஷமும் மேல் வகுப்பாரிடையே தான் உற்பத்தியாகின்றன. அவர்களுடைய பிரசாரத்தினால் பாமர ஜனங்களும் கெட்டுப் போகிறார்கள். பாட்டாளி மக்கள், கிராமத்துக் குடியானவர்கள் முதலியவர்களிடையில் துவேஷம் இன்னும் பரவவில்லை. துவேஷத்துக்குக் காரணமும் கிடையாது. ஏழை முஸ்லிமும் ஏழை இந்துவும் ஓர் இனம்; பாட்டாளி முஸ்லிமும் பாட்டாளி இந்துவும் ஒரே சாதி; அம்மாதிரியே முதலாளி முஸ்லிமும், முதலாளி இந்துவும் ஒரே சாதி; இதை எடுத்துக் காட்டி முஸ்லிம் பாமர மக்களிடையே தீவிரப் பிரசாரம் செய்யப் போகிறோம்..."

"கொக்கின் தலையிலே வெண்ணெய் வைத்துப் பிடிக்கிற கதைத் தான். சண்டை என்று வரும்போது ஏழை முஸ்லிமும் பணக்கார முஸ்லிமும், தொழிலாளி முஸ்லிமும், முதலாளி முஸ்லிமும் சப்ராஸி முஸ்லிமும் ஐ.சி.எஸ். முஸ்லிமும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். ஒருநாளும் ஏழை முஸ்லிம்கள் ஏழை இந்துக்களுடன் சேரமாட்டார்கள். ஆகையால் நீயும் உன்னுடைய சகாக்களும் சுதந்திரத்தைப் பிடிப்பதற்கு இந்த வழியை மட்டும் நம்பியிருக்கும் வரையில், எங்கள் உத்தியோகங்களுக்கு ஆபத்தில்லை... உங்கள் அப்பாவின் திவான் வேலைக்கும் ஆபத்தில்லை!" என்று தாமா பாமாவைப் பார்த்துச் சொன்னான் ராகவன்.

அப்போது சூரியா, "நீங்கள் சொல்வது சரியென்றே வைத்துக் கொள்வோம்! ஆனால் அந்த ஒரு வழியை மட்டும் நாங்கள் நம்பியிருக்கவில்லை. இவையெல்லாம் உபகாரணங்கள் தான். ஆனாலும் இந்திய தேசம் வெகு சீக்கிரத்தில் சுதந்திரம் அடையப் போவது என்னமோ நிச்சயம். அதற்கு அருமையான சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரப்போகிறது. ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் ஏமாந்துவிடக் கூடாது. நல்ல வேளையாகத் தீர்க்க திருஷ்டியுடன் நமக்கு வழி காட்டக்கூடிய தலைவர் ஒருவர் கிடைத்திருக்கிறார். இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப் போகும் தலைவர் ஸ்ரீசுபாஸ் சந்திர போஸ் தான். ஹரிபுரா காங்கிரஸில் எங்களைப் போன்ற இளைஞர்களையெல்லாம் தனியாகக் கூட்டி அவர் பேசினார். ஜெர்மனியிலும் இத்தாலியிலும் அவர் நேரிலே பார்த்துவிட்டு வந்த விஷயங்களை எடுத்துக் கூறினார். 'வெகு சீக்கிரத்தில் உலக யுத்தம் வரப்போவது நிச்சயம்; அப்போது தான் இந்தியாவின் சந்தர்ப்பம், என்று சொன்னார். அதற்கு இப்போதிருந்தே நாம் தயாராக வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறினார்.

"ஒருநாளும் உலக யுத்தம் வரப்போவதில்லை. நானும் தான் ஐரோப்பாவுக்குப் போய்விட்டு வந்திருக்கிறேன். இங்கிலாந்தில் பிரிட்டிஷார் யுத்தத்திற்குத் தயாராயில்லை ஆகையால் யுத்தம் வராது. ஹிட்லரும் முஸோலினியும் வெறும் மிரட்டலினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்குத் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டு போவார்கள்!" என்று சொன்னான் சௌந்தர ராகவன்.

இந்தச் சமயத்தில் தாரிணி சீதாவின் கையைப் பிடித்துக் கொண்டு, "இவர்களுடைய பேச்சு யுத்தம் இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது. சீதா உன்னிடம் எனக்கு ஒரு காரியம் இருக்கிறது, வா!" என்று சொல்லி வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போனாள்.