திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் - பாட்டு)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
"என் காதலரே, வாரும்; வயல்வெளிக்குப் போவோம்;" - இனிமைமிகு பாடல் 7:11.

இனிமைமிகு பாடல் (Song of Songs)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை


அதிகாரம் 7[தொகு]


1 அரசிள மகளே!
காலணி அணிந்த உன் மெல்லடிகள்
எத்துணை அழகு!
உன் தொடைகளின் வளைவுகள்
அணிகலனுக்கு இணை!
கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!


2 உன் கொப்பூழ் வட்டவடிவக் கலம்;
அதில் மதுக் கலவைக்குக் குறைவே இல்லை;
உன் வயிறு கோதுமை மணியின் குவியல்;
லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.


3 உன் முலைகள் இரண்டும்
இரு மான் குட்டிகள் போன்றவை;
கலைமானின் இரட்டைக் குட்டிகள் போன்றவை.


4 உன் கழுத்து தந்தத்தாலான கொத்தளம் போன்றது;
உன் கண்கள் எஸ்போனின் குளங்கள் போன்றவை;
பத்ரபீம் வாயிலருகே உள்ள குளங்கள் போன்றவை;
உன் மூக்கு லெபனோனின் கோபுரத்திற்கு இணை;
தமஸ்கு நகர் நோக்கியுள்ள கோபுரத்திற்கு இணை.


5 உன் தலை கர்மேல் மலைபோல் நிமிர்ந்துள்ளது;
உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது;
அதன் சுருள்களுள் அரசனும் சிறைப்படுவான்.


பாடல் 22: தலைவன் கூற்று[தொகு]


6 அன்பே! இன்பத்தின் மகளே!
நீ எத்துணை அழகு! எத்துணைக் கவர்ச்சி!


7 இந்த உன் வளர்த்தி பேரீச்சைக்கு நிகராகும்;
உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாகும்.


8 ஆம், பேரீச்சையின்மேல் நான் ஏறுவேன்;
அதன் பழக்குலைகளைப் பற்றிடுவேன்" என்றேன்;
உன் முலைகள் திராட்சைக் குலைகள்போல் ஆகுக!
உன் மூச்சு கிச்சிலிபோல் மணம் கமழ்க!


9 இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே மென்மையுடன் இறங்கும்
இனிமைமிகு திராட்சை இரசம் போன்றவை உன் முத்தங்கள்!


பாடல் 23: தலைவி கூற்று[தொகு]


10 நான் என் காதலர்க்குரியள்;
அவர் நாட்டம் என்மேலே!


11 என் காதலரே, வாரும்;
வயல்வெளிக்குப் போவோம்;
மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம்.


12 வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்;
திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா,
அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா,
மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம்.
அங்கே உம்மேல் என் காதலைப் பொழிவேன்.


13 காதற்கனிகளின் மணம் கமழுகின்றது;
இனியது அனைத்தும் நம் கதவருகில் உளது;
புதிதாய்ப் பறித்தனவும் பலநாள் காத்தனவுமான பழங்களை
என் காதலரே, உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.


அதிகாரம் 8[தொகு]

பாடல் 24: தலைவி கூற்று[தொகு]


1 நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா!
என் அன்னையிடம் பால் குடித்தவராய் இருக்கலாகாதா!
தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே!
அப்போது எவருமே என்னை இகழமாட்டார்.


2 உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்;
எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்;
மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்;
என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன்.


3 இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்;
வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.


4 எருசலேம் மங்கையரே,
ஆணையிட்டுக் கேட்கின்றேன்;
காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?


5 "யார் இவள்!
பாலைவெளியினின்று எழுந்து வருபவள்;
தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்?"


பாடல் 25[தொகு]


கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்;
அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள்;
அங்கேதான் உம்மைப் பெற்றவள் பேறுகால வேதனையுற்றாள்.


6 உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக;
இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக;
ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது;
அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது;
அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி;
அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.


7 பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது;
வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது;
அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம்
வாரியிறைக்கலாம்;
ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.


பாடல் 26: தமையர் - தலைவி உரையாடல்[தொகு]


8 நம்முடைய தங்கை சிறியவள்;
அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை;
அவளைப் பெண்பேச வரும்நாளில்
நம் தங்கைக்காக என் செய்வோம்?


9 அவள் ஒரு மதிலானால்
அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்;
அவள் ஒரு கதவானால்
அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம்.


10 நான் மதில்தான்;
என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன;
அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.


பாடல் 27: தலைவன் கூற்று[தொகு]


11 பாகால்-ஆமோன் என்னுமிடத்தில்
சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம்;
திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்;
அதன் கனிகளுக்காக எவரும்
ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.


12 எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உளது;
சாலமோனே,
அந்த ஆயிரம் வெள்ளிக்காசு உம்மிடமே இருக்கட்டும்;
இருநூறு காசும் பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.


பாடல் 28: தலைவன் - தலைவி உரையாடல்[தொகு]


13 "தோட்டங்களில் வாழ்பவளே!
தோழர் கூர்ந்து கேட்கின்றனர்;
உன் குரலை யான் கேட்கலாகாதோ!"


14 "என் காதலரே! விரைந்து ஓடிடுக;
கலைமான் அல்லது மரைமான் குட்டிபோல
நறுமணம் நிறைந்த மலைகளுக்கு விரைந்திடுக!"

(இனிமைமிகு பாடல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை