10 புதிய கோணம்
இதனையடுத்துக் கோவலன் வெட்டுண்ட பின்னர்ப் பாண்டியன் அவைக்களத்தை நோக்கிச் செல்லும் பொழுது,
“முறையில் அரசன்தன் ஊர் இருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்" (சிலம்பு : 193)
என்று விளித்துப் பேசுவதும்,
“கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டு கொல்" (சிலம்பு : 9, 52)
என்றும்,
“சான்றோரும் உண்டு கொல்" (சிலம்பு : 19, 54)
என்றும் விளித்துப் பேசுவதும் கொஞ்சம் வியப்பை அளிக்கின்றன! பண்பாடே வடிவமாகக் காட்சி அளித்த கண்ணகியா இங்ஙனம் பேசுகின்றார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவரே கூறுகின்ற படி, “பட்டேன் படாததொரு துயரம்" என்றே வைத்துக் கொண்டாலும், தனிப்பட்ட தனக்கு நேர்ந்த அவலம் காரணமாக, ஒரு நாட்டையே, மக்களையே இழித்துப்
பேசுவது முறையோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. தனிப்பட்ட தன் துயரத்தை மிகப் பெரிதாகக் கொண்டு அதனால் உலகம் முழுவதையும் தவறுடையதாகக் கருதும் ஒர் அவல மன நிலையையே இங்குக் காண்கிறோம்.