19. அவதானக் கலை
நாகர்கோயில் திரு. ஆறுமுகம் பிள்ளை அவர்கள் தசாவதானிகளுள் தலையாயவர். இன்று தமிழகத்தில் வாழும் பலரும் அட்டாவதானம், தசாவதானம், சோடசாவதானம், சதாவதானம், ஆகிய பெயர்களை அறிவார்களே தவிர இவற்றைச் செய்கின்றவர்களைப் பலரும் பார்த்திருக்க முடியாது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏறத்தாழ நூற்றுவர் இவ்வவதானக்கலையில் சிறந்து விளங்கினர். எனினும் இது பற்றிய அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் எதுவும் செய்யப் பெறவில்லை.
இத்தகைய அவதானங்கள் செய்கின்றவர்கள் ருசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தம் திறமைகளைக் காட்ட வாய்ப்புப் பெற்றிருப்பின் முன் குறிப்பிட்டவாறு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கும்.
அவதானம் என்பதனைக் கவனம் என்றும் அவதானிகளைக் கவனிகள் என்றும் கூறும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆழ்ந்து சிந்திப்போமானால் இச் சொல் பொருத்தமானதா என்பது ஆய்வுக்குரியதாகும்