'பாட்டுக்கொரு புலவன் பாரதி' 37
என்று சொல்லிச் சமுதாயத்தின் வீரக்குரலை வேட்கை வெறியுடன் வெளிப்படுத்துகின்றார்.
பாரதியார் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய பணி அளவிடற்கரியது! நாட்டுப் பற்றுக்கொண்ட நல்ல தொண்டராய் அவர் தொடக்கம் முதல் இறுதிவரை விளங்கினார். புதுவை வாழ்வு அவரது அரசியல் வாழ்வின் பரிசுதானே!
'என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னை கை விலங்குகள் போகும்
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்!,
—சுதந்திர தாகம் : 2
என்று கொதித்தெழுந்து, நாட்டின் விடுதலையாம் வேள்வித் தீயில் தம்மையே மனை வாழ்வினைத் துறந்து நிறைவாழ்வு பெற்றுப் பழி மிகுந்த இழிவு வந்துற்றாலும் சுதந்திர தேவியினைத் தொழுதிடல் மறக்கிலாத தூய சிந்தையர் பாரதியார். 'தொண்டு செய்யும் அடிமை!—உனக்குச் சுதந்திர நினைவோடா?' என்று ஆங்கிலேயர் கேட்க, 'நாங்கள் முப்பதுகோடி ஜனங்களும் நாய்களோ?—பன்றிச் சேய்களோ? நீங்கள் மட்டும் மனிதர்களோ?' என்று எதிர் வினா எழுப்பி,
'நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம்!—இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்!—இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்!—பரி
பூரணனுக் கேயடிமை செய்துவாழ்வோம்!'
—சுதந்திரப் பள்ளு: 5
என்ற நம்பிக்கையைக் கொடிகட்டிப்பிடித்து, 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று அன்றே ஆனந்தப் பள்ளுப் பாடினார் பாரதியார்.