40
‘வாழையடி வாழை’
இந்தக் கல்வி விளங்க வேண்டுமானால் மக்கள் வயிறார உண்பதற்கு உணவு வேண்டும். இதையும் பாரதியார் பாடுகின்றார்:
'வயிற்றுக்குச் சோறிட வேண்டும்—இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து—இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.’
—பாரதி: முரசு: 30
'பாரதியார் தேச பத்தர் மட்டுமல்லர்; சிறந்த தெய்வபத்தரும் ஆவார்’ என்பர், திரு. பரலி சு. நெல்லையப்பர்; 'முன்னவனே முன்னின்றால் முடியாப் பொருளுளதோ?’ என்பது தமிழ் உரை. பாப்பாப் பாட்டில், பாரதியார்,
'தெய்வம் நமக்குத் துணை பாப்பா!—ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!’
என்றும,
'துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு—துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!’
என்றும் தெய்வ பத்தியினை வலியுறுத்திக் கூறியிருப்பதோடு, வாழும் முறையினைக் குறிப்பிடுகின்ற போதும், வேண்டிய மூன்று பண்புகளுள் ஒன்றாகத் தெய்வ நம்பிக்கையினை வற்புறுத்தியுள்ளார்:
'உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்;—தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்!
வயிர முடைய நெஞ்சு வேணும்;—இது
வாழும் முறைமையடி பாப்பா!’
—பாப்பா பாட்டு: 16
தெய்வபத்தி சுடர்விட்டு எரிகிறது பாரதியாரின் உள்ளத்திலே! தொந்திக் கணபதியை முந்தி வணங்கி