அலை ஓசை/பூகம்பம்/கண்கள் பேசின

விக்கிமூலம் இலிருந்து

வீட்டு ரேழியில் திடுதிடுவென்று மனிதர்கள் வரும் சத்தம் கேட்கவே பெண்கள் எல்லாரும் காமரா உள்ளுக்கும் சமையல் உள்ளுக்கும் விரைந்து போய் மறைந்து கொண்டார்கள். சற்றுப் பொறுத்துச் சரஸ்வதி அம்மாள் மட்டும் வெளியே வந்து, சம்பந்தி அம்மாளாகப் போகிற காமாட்சி அம்மாளை நெருங்கி, "வாருங்கள்!" என்று அழைத்தாள். தயாராகப் போட்டிருந்த நாற்காலிகளில் வந்து புருஷர்கள் எல்லாரும் உட்கார்ந்தார்கள். சற்று நேரம்வரை மௌனம் குடிகொண் டிருந்தது. "என்ன ஓய்! குழந்தையை வரச் சொல்லுகிறதுதானே!" என்றார் சீமாச்சுவய்யர். "நீர்தான் சொல்லுமே, ஓய்", என்றார் கிட்டாவய்யர். சீமாச்சுவய்யர் சடசடவென்று காமரா அறைப் பக்கம் சென்று, "குழந்தையை வரச்சொல்லுங்கள்! கையிலே வெற்றிலை பாக்குத் தட்டை எடுத்து வரச் சொல்லுங்கள்! ஐந்தரை மணி முதல் ஆறு மணி வரையில் நல்ல வேளை. மணி ஐந்தேமுக்கால் ஆகிவிட்டது சீக்கிரம் வரட்டும்!" என்று இரைந்தார். காமரா உள்ளில் ஏதோ வாதப் பிரதிவாதம் நடந்ததாகத் தோன்றியது. சீமாச்சுவய்யர் மறுபடியும், "அதனால் என்ன? சீதாவும் வரட்டுமே? நீங்களும் வாருங்களேன்! எல்லோரும் வரவேண்டியதுதான். மாப்பிள்ளையும் பெண்ணும் இன்றைக்கே இரகசியம் பேசப்போகிறார்களா? அதற்கெல்லாம் பிற்பாடு நாள் இருக்கிறது!" என்றார்.

இதன் பேரில் லலிதாவும் சீதாவும் அறையிலிருந்து வெளிப்பட்டார்கள். லலிதா கையில் வெற்றிலைத் தட்டுடன் குனிந்த தலை நிமிராமல் நடந்தாள். சீதா அவளுடைய ஒரு கையைத் தன்னுடைய கையில் கோத்துக்கொண்டு ஓரளவு அவளைத் தள்ளிக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. சீதா தலையைக் குனிந்து கொண்டு நடக்கவில்லை. வந்திருந்தவர் களைத் தைரியமாக ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டு வந்தாள். அந்தக் கண்ணோட்டத்தில் மாப்பிள்ளையின் முகத்தையும் பார்த்தாள். தான் எதிர்பார்த்ததுபோல் அவன் லலிதாவைப் பார்க்காமல் தன்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு ரோமாஞ்சனத்தை உண்டாக்கியது. கனவிலே நடப்பதுபோல் நடந்து வந்த லலிதா, வந்திருந்தவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தை அடைந்ததும் அவர்கள் எதிரில் இருந்த முக்காலிப் பலகையில் வெற்றிலைத் தட்டை வைத்தாள், பிறகு நமஸ்காரம் செய்தாள். லலிதா நமஸ்கரித்தபோது மறுபடியும் மாப்பிள்ளை என்ன செய்கிறான் என்று சீதா பார்த்தாள். மாப்பிள்ளை லலிதாவைப் பார்ப்பதற்குப் பதிலாகத் தன்னைப் பார்ப்பதைக் கண்டாள். வெறுமனே பார்த்ததோடு இல்லை; புன்னகையும் புரிந்தான்! வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பொலபொலவென்று உதிர்ந்து உலகை ஜோதிமயமாக்கின! - சீதாவின் இதயமாகிய உலகத்தைத்தான்!

லலிதா நமஸ்கரித்துவிட்டு எழுந்த போது அவளுக்கும் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்ற அடங்காத ஆசை உண்டாயிற்று. மடங்கியிருந்த கண்ணிமைகளைச் சிரமப்பட்டுத் தூக்கிக் கொண்டு பார்த்தாள். அவளுடைய பார்வையில் பத்மலோசன சாஸ்திரி தட்டுப்பட்டார். "ஐயோ! இவரா!" என்ற பீதி ஒரு கணம் உண்டாயிற்று. "சீ! இவராயிராது; இவர் மாப்பிள்ளையின் தகப்பனார் போலிருக்கிறது" எனத் தெளிந்து பக்கத்தில் பார்வையைச் செலுத்தினாள். இந்தத் தடவை அவள் பார்த்தது சௌந்தரராகவனைத்தான். ஆனால் சௌந்தரராகவன் அச்சமயம் இதழ்களில் புன்னகையுடன் வேறு எங்கேயோ அவளுடைய தோளுக்கு மேலாகப் பார்த்துக் கொண்டிருந்தான். லலிதா மறுபடியும் முன்போல் தலையைக் குனிந்து கொண்டாள். "எந்தக் குழந்தையை இப்போது பார்ப்பதற்காக வந்திருக்கிறோம்? தலையிலே சடைவில்லையும் திருகுப்பூவும் வைத்துப் பின்னிக் கொண்டிருக்கிறாளே, அந்தக் குழந்தைதானே?" என்று பத்மலோசன சாஸ்திரி தமது கம்மலான கன சரீரத்தில் கேட்டார். அது யமதர்ம ராஜனின் குரலைப்போல் லலிதாவின் காதில் விழுந்தது. அவள் பார்த்திருந்த சத்தியவான் - சாவித்திரி நாடகத்தில் யமதர்ம ராஜன் அத்தகைய குரலில்தான் பேசினான்!

சாஸ்திரியின் சம்சாரம் காமாட்சி அம்மாள், "அழகாய்த்தானிருக்கிறது உங்கள் கேள்வி! பார்த்தால் எந்தப் பெண் என்று தெரியவில்லையா? நமஸ்காரம் செய்ததிலிருந்துகூடத் தெரியாமலா போச்சு!" என்றாள். "இல்லேடி! தெரியத்தான் தெரிகிறது! இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமிருக்கக்கூடாதே என்று கேட்டேன். இருக்கட்டும் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியுமோ? எதுவரை படித்திருக்கிறாள்?" "நன்றாய்க் கேட்டேளே ஒரு கேள்வி? எழுதப் படிக்கத் தெரியுமாவா? அப்பாவின் பட்டாமணியம் வேலையில் பாதி அவள் தானே பார்க்கிறாள்? அவள் படிக்காத கதைப் புத்தகம், நாவல் பாக்கி இல்லை. இங்கிலீஷ் சக்கைப் போடாகப் பேசுவாள். நாளைக்கு மாப்பிள்ளை பேசிப் பார்த்தால் தெரிந்து போய் விடுகிறது!" என்றார் சீமாச்சுவய்யர். இதைக் கேட்ட சாக்ஷாத் மாப்பிள்ளை சௌந்தரராகவன், "நாளைக்கு என்று ஏன் ஒத்தி வைக்க வேண்டும்? இன்றைக்கே பேசிப் பார்த்துவிட்டால் போகிறது!" என்றான். "அப்படிப் போடுங்க ஒரு போடு, மாப்பிள்ளை! ஆனாலும் நாங்கள் எல்லாரும் பட்டிக்காட்டு மனுஷாள்தானே? அவ்வளவு நாகரிகம் இன்னும் இங்கேயெல்லாம் பரவவில்லை. கலியாணம் ஆகிப் பெண்ணை அழைத்துக்கொண்டு போனால் பத்து நாளில் எல்லா நாகரிகமும் பழகிக் கொள்கிறாள். என்ன ஓய்! கிட்டாவய்யரே! நான் சொல்றது என்ன?"

அப்போது சப் ஜட்ஜ் சாஸ்திரி "கிட்டாவய்யரைக் கேட்பானேன்? நானே சொல்கிறேன். எனக்கும் இந்தக் காலத்து நாகரிகம் அவ்வளவாகப் பிடிக்காது. என் சம்சாரம் என்னை விடக் கர்நாடகம், மாட்டுப்பெண் இங்கிலீஷ் படித்துப் பாஸ் பண்ணி உத்தியோகம் பார்க்க வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படவில்லை. இருந்தாலும் பிள்ளையாண்டான் இந்தக் காலத்துப் பையன் பாருங்கோ! படித்த பெண்ணாயிருக்க வேண்டுமென்று ஆசைப்படுவது இயல்புதானே! போகட்டும் குழந்தைக்குப் பாடத் தெரியுமா, சிட்சை கிட்சை உண்டா?" என்றார். "என்ன ஓய், கிட்டாவய்யரே! பதில் சொல்லுமே ஓய்! எல்லாவற்றுக்கும் நான்தானா பதில் சொல்ல வேண்டும்?" கிட்டாவய்யர் உடனே "குழந்தைக்குச் சங்கீத சிட்சையில்லை; கிராமாந்திரத்தில் அதற்கு வசதி கிடையாது. ஆனால் நன்றாகப் பாடுவாள். நானே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் சங்கீத ஞானம் உண்டு!" என்றார். "ஓகோகோ! அப்படி வாருங்காணூம் வெளியிலே! நீரே பாட்டுச் சொல்லிக் கொடுத்திருக்கிறீரா? தீக்ஷிதர் கிருதி ஏதாவது தெரியுமா?" "பேஷாகத் தெரியும்!... லலிதா! 'மாமவ பட்டாபிராமா' பாடு" என்றார் கிட்டாவய்யர்.

இத்தனை நேரமும் லலிதா தலைகுனிந்தபடியே இருந்தாள், இப்போது அப்பாவின் குரல் வந்த திசையை நோக்கி இரக்கம் ததும்பிய முகத்துடன் பார்த்துவிட்டு மறுபடியும் தலையைக் குனிந்து கொண்டாள். "தீக்ஷிதர் கிருதி தெரியாவிட்டால் வேண்டாம். சியாமா சாஸ்திரி கிருதி தெரிந்தால் பாடட்டும்." "ஆகா! சியாமா சாஸ்திரிக் கிருதியும் குழந்தைக்குத் தெரியும், 'ஸரோஜ தளநேத்ரி' பாடு அம்மா!" லலிதா அதற்கும் மௌனமாகவே இருந்தாள். "இல்லை பட்டணம் சுப்பிரமணிய அய்யர் கீர்த்தனம், தியாகராஜ கீர்த்தனம் எது தெரிந்தாலும் பாடட்டும்." "அதுதான்னா சரி! தீக்ஷிதர் கிருதி என்றால் அது சேலம் ஜில்லா தாம்பக் கயிறு மாதிரி நீண்டு கொண்டே இருக்கும். உனக்குச் சங்கல்பமே டீதோ மனஸா' தெரியுமோ, அதைப் பாடு! இல்லாவிட்டால் 'மருகேலரா' கீர்த்தனம் பாடு!" என்றார் சீமாச்சுவய்யர். "இல்லாவிட்டால் தியாகராஜ கிருதியில் பல்லவியும் தீக்ஷிதர் கிருதியில் அநுபல்லவியும் சியாமா சாஸ்திரி கிருதியில் சரணமும் பாடட்டுமே!" என்றான் சௌந்தரராகவன். புருஷர்கள் கோஷ்டியில் சிறு சிரிப்பின் சத்தம் உண்டாயிற்று. ஸ்திரீகளிடையே கசமுச என்ற பேச்சின் ஓசை ஏற்பட்டது. சூரியாவின் கண்ணில் தீப்பொறி பறந்தது.

ஒன்றுக்கும் லலிதா மசிகிற வழியாக இல்லை. சீதா இரகசியம் பேசுகிற குரலில், "ஏண்டி இப்படிப் பேசாமல் இருக்கிறாய்! ஒரு பாட்டுப் பாடடி!" என்று தூண்டினாள். அப்படித் தூண்டியும் பயனில்லாமற் போகவே மாப்பிள்ளைப் பையனைப் பார்த்தாள். அவனும் அதே சமயத்தில் அவளைப் பார்த்தான். அவர்களுடைய மனத்தில் இருந்ததை பரஸ்பரம் அவர்களுடைய கண்களின் பேச்சினால் தெரிந்து கொண்டார்கள். "இந்தப் பட்டிக்காட்டுச் சங்கோசப் பிராணியைக் கலியாணம் செய்துகொண்டு நான் என்னத்தைச் செய்வது?" என்று சௌந்தரராகவனின் கண்கள் கூறின. பதிலுக்கு, "ஆமாம்! உங்களுடைய நிலைமை கஷ்டமானதுதான்! என்னுடைய மனப்பூர்வமான அநுதாபம்" என்று சீதாவின் கண்கள் தெரியப்படுத்தின. "சீதா! நீயும் லலிதாவோடு சேர்ந்து ஒரு பாட்டுப் பாடேன்! குழந்தை தனியாகப் பாடக் கூச்சப்படுகிறாள்!" என்றார் சுப்பய்யர். "ஆமாம்; சீதா! நீயும் சேர்ந்து பாடு!" என்று சரஸ்வதி அம்மாள் பக்கத்தில் வந்து நின்று கூறினாள். சீதா பளிச்சென்று, "எங்கள் இரண்டு பேருக்கும் தெரிந்த பாட்டு ஒன்றும் இல்லையே!" என்றாள்.

"அப்படியானால் நீயேதான் ஒன்று பாடேன். அவள் தைரியப்படுத்திக் கொண்டு அப்புறம் பாடட்டும்?" என்றார் பத்மலோசன சாஸ்திரிகள். "யோசித்துப் பார்க்கிறேன்- ஏன் லலிதா! 'நகுமோ கனலேனி' உனக்குத் தெரியுமல்லவா? இரண்டு பேரும் சேர்ந்து பாடுவோம்! என்ன! பேசாமலிருந்து விடாதே!" என்று சொல்லி விட்டுச் சீதா கணீரென்ற குரலில் பாட ஆரம்பித்தாள். லலிதா பல்லவியில் பாதியில் சேர்ந்து கொண்டாள். ஆனால் அவளுடைய குரல் எடுபடவில்லை. சீதாவின் குரல்தான் மேலோங்கி நின்றது. சீதா அனுபல்லவியை எடுத்து மேலே ஜம்மென்று போனபோது லலிதாவும் கூடப் பாட முயன்றாள். ஆனால் குரல் 'கிறீச்' என்று அபஸ்வரமாகக் கேட்டது. சட்டென்று நிறுத்திவிட்டுச் சீதாவின் கையை உதறி விடுவித்துக் கொண்டு விடுவிடு என்று காமரா உள்ளே நோக்கிச் சென்றாள் லலிதா. எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. கிட்டாவய்யர் கோபக்குரலில், "இது என்ன லலிதா?" என்று அதட்டினார். சரஸ்வதி அம்மாள் லலிதாவின் கையைப் பிடித்து நிறுத்தி "அசட்டுப் பெண்ணே! தினம் கச்சேரி செய்வது போல் மூன்று மணி நேரம் பாடுவாயே? இன்றைக்கு என்ன வந்தது?" என்றாள். லலிதா தாயாரின் கைகளையும் உதறிவிட்டு உள்ளே சென்றாள். சீதா, பாவம், ஒரு நிமிஷம் இன்னது செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றாள். பிறகு மாப்பிள்ளைப் பையனை ஒரு தடவை கண்ணைச் சுழற்றிப் பார்த்துவிட்டுத் தானும் உள்ளே போய்விட்டாள்.

எழுந்திருந்த கிட்டாவய்யரைப் பத்மலோசன சாஸ்திரிகள் உட்காரச் செய்தார். "பரவாயில்லை; குழந்தையைத் தொந்தரவு படுத்த வேண்டாம். குரல் கேட்டு விட்டது, வெகு இனிமையாயிருக்கிறது, போதும். இன்னொரு நாள் சாவகாசமாகக் கேட்டுக் கொள்ளலாம்!" என்றார். "பெண் ஊமையில்லை என்று தெரிந்துவிட்டது அல்லவா? அதுவே போதுமானது!" என்று 'கிருதக்'காகச் சொன்னான் சௌந்தரராகவன். "அப்படியெல்லாம் சொல்லாதே, அப்பா" என்று காமாட்சி அம்மாள் கண்டித்துவிட்டு எழுந்து உள்ளே போனாள். பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் தனித்தனியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு சம்பந்திகள் தங்கள் ஜாகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.