அலை ஓசை/பூகம்பம்/இடி விழுந்தது!

விக்கிமூலம் இலிருந்து

கிட்டாவய்யர் வீட்டு வாசலில் போட்டிருந்த கோடைப் பந்தலில் ராஜம்பேட்டைத் திண்ணை மகாசபை கூடியிருந்தது. சிலர் பந்தலின் கீழே பெஞ்சிகளிலும் சிலர் திண்ணை விளிம்பிலும் உட்கார்ந்திருந்தார்கள். உள்ளேயிருந்து வந்த கிட்டாவய்யரைப் பார்த்துப் பஞ்சு அய்யர், கேட்டீர்களா! ஐயர்வாள்! உங்களுடைய பையன் சூரியா ஒரே போடாய்ப் போடுகிறானே. நாலு நாள் கல்யாணம் நடத்துகிறதும் கல்யாணத்துக்காக ஏகப்பட்ட ரூபாய் செலவு பண்ணுகிறதும் ரொம்பப் பிசகாம். வரதட்சணை கேட்கிறது, வாங்குகிறது எல்லாம் வெறும் மூடத்தனமாம்!" என்றார். "அவன் சொல்வதில் என்ன அதிசயம்? இந்தக் காலத்திலே எல்லாருந்தான் அப்படிச் சொல்கிறார்கள். ஏழைகள் கஷ்டப்படுகிறபோது வீண் ஆடம்பரத்திலே பணம் செலவழிக்கிறது நியாயமல்லவென்று பேசுகிறார்கள்!" என்று கிட்டாவய்யர் தம்முடைய குமாரனைத் தாங்கிப் பேசினார். "அதோடு நிறுத்தினால் பரவாயில்லையே? பணத்தை வீணாகச் செலவழிக்கக் கூடாது, செட்டாயிருக்க வேண்டும் என்று சொன்னால் சொல்லட்டும்! அப்பாபாடு பிள்ளைபாடு என்று விட்டு விடலாம். சூரியா பெரிய சோஷலிஸ்ட் மாதிரின்னா பேசறான்? குடியானவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடுகிறார்களாம். அவர்கள் உழைப்பினால் வருகிற பணத்தை நாம் ஆடம்பரத்திலே செலவழிக்கிறோமாம். 'இதெல்லாம் ரொம்ப நாள் நடக்காது!' என்று எச்சரிக்கை வேறே பண்ணுகிறான்!"

"பின்னே என்னங்காணும்! இப்படியே சதகோடி வருஷம் நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீரா? உலகம் போகிற போக்கு உமக்குத் தெரியவில்லை. 'உழுகிறவனுக்குத்தான் நிலம்' என்ற பிரசாரம் நடந்து வருகிறது. நீங்கள் கிணற்றுத் தவளைகளாய் இருக்கிறீர்கள்!" என்றார் சீமாச்சுவய்யர். "அப்பா! சீமாச்சு! நீயும் அவன் கட்சியில் சேர்ந்து விட்டாயா? இன்றைக்கு, 'உழுகிறவனுக்கு நிலம்' என்பார்கள். நாளைக்கு 'அறுக்கிறவனுக்கு நெல்லு!' என்பார்கள். அப்புறம் 'கொத்தனுக்கு வீடு!' 'வண்ணானுக்கு வேஷ்டி' 'டிரைவருக்கு மோட்டார்' 'டாக்டருக்கு மருந்து' 'போர்ட்டருக்கு ரயில் வண்டி' என்றெல்லாம் ஏற்படும். 'சமைக்கிறவனுக்கு சாதம்' என்று சொன்னாலும் சொல்வார்கள். விநாசகாலே விபரீத புத்தி!" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "பட்டாமணியத்துக்கு வரிப்பணம் என்றும் ஏற்பட்டு விட்டால் எனக்கு ரொம்ப சௌகரியமாயிருக்கும், சாஸ்திரிகளே! இதிலேயெல்லாம் ஆத்திரப்பட்டு என்ன பிரயோசனம்? எது எது எப்போது நடக்க வேண்டுமோ அது அது நடந்துதானே தீரும்? காலத்திற்குத் தகுந்தாற்போல நாமும் மாறிக்கொள்ள வேண்டியதுதானே!" என்றார் கிட்டாவய்யர். "மாறிக்கொள்கிறோம், ஐயர்வாள்! மாறிக் கொள்கிறோம்! சரியான காரியமாயிருந்தால் காலத்தை யொட்டி மாற வேண்டியதுதான். முன்னேயெல்லாம் சிரார்த்தம் என்றால் மத்தியானம் மணி மூன்று ஆகும். இப்போது மணி பத்துக்கெல்லாம் பிராமணாளுக்கு இலை போடவேணும் என்கிறார்கள், அதை ஆட்சேபிக்கிறோமோ? காப்பி சாப்பிட்டு விட்டுத்தான் சிரார்த்தம் பண்ணுவேன் என்கிறான் கிரகஸ்தன். காலத்திற்கேற்ப இந்த மாறுதலையெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் ஆனால் 'உழுகிறவனுக்குத்தான் நிலம்' என்கிற கொள்கை உமக்கு ஏற்கச் சரியாயிருக்கிறதா என்று கேட்கிறேன்" என்றார் சாஸ்திரிகள்.

"சரியோ இல்லையோ, உலகம் ஒப்புக்கொண்டால் நாம் மட்டும் தடைசெய்து என்ன பிரயோஜனம்!" என்றார் கிட்டாவய்யர். "உலகந்தான் ஒப்புக் கொள்ளட்டும்; பிரம்மதேவனே ஒப்புக்கொள்ளட்டும். சரியில்லாததை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? காந்திமகாத்மா இதைத்தானே படித்துப் படித்துச் சொல்கிறார்? 'நீ ஒருத்தனாயிருந்தாலும் உனக்குச் சரியென்று தோன்றுகிறதைச் செய்!' என்கிறார். ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சுயபுத்தியை உபயோகிக்க வேண்டாம். யாரோ எவனோ சொல்கிறதை அப்படியே ஒப்புக்கொள்ளு என்கிறீர்கள்." "உங்களை யார் ஒப்புக்கொள்ளச் சொல்கிறார்கள்?" "யார் சொல்கிறார்கள்? இப்போது சூரியாதான் சொன்னான், நமக்குத்தானே அவன் பிரசங்கம் செய்தான்?" "எல்லாம் இப்போது அப்படித்தான் சொல்லுவான் காணும்! கிட்டி முட்டி வரும்போது வேறு விதமாய்ச் சொல்வான். எங்கே? கிட்டாவய்யர் நிலத்தில் சூரியாவுக்கு உள்ள பங்கை உழுகிறவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுவானா, கேளுங்கள்!" என்றார் சீமாச்சுவய்யர். "சீமாச்சு மாமா! எழுதிக் கொடுத்தாலும் கொடுப்பேன். அல்லது நானே வயலில் இறங்கி உழுவேன். அப்போது நிலம் என்னுடையதாயிருக்கும்" என்றான் சூரியா. "அப்படிச் சொல்லுடா தும்மட்டிக்கா பட்டா என்றானாம். நீ மட்டுந்தான் உழுவாய் என்று நினைத்தாயோ? அத்தகைய காலம் வந்தால் நாங்கள் எல்லோரும் இடுப்பிலே துணியை வரிந்து கட்டிக் கொண்டு வயலில் இறங்கி விட மாட்டோ மா?" என்றார் பஞ்சுவய்யர்.

"அது வரையில் காத்திருப்பானேன், இப்போதிருந்தே நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ளலாமே என்று சொன்னேன். நாமே உழுது பயிரிடுவது என்று ஏற்பட்டால் இப்படியெல்லாம் நாலு நாள் கல்யாணத்துக்கு ஆடம்பரச் செலவு செய்ய முடியுமா?" என்றான் சூரியா. "ஆகக்கூடி, சூரியாவின் பாயிண்ட் என்னவென்று இப்போது தெரிகிறது. லலிதாவின் கலியாணத்துக்கு அதிகமாகச் செலவு செய்துவிடக்கூடாது என்று அப்பாவுக்குப் புத்திமதி சொல்கிறான் அவ்வளவுதானே, சூரியா" என்றார் சீமாச்சுவய்யர். "இல்லவே இல்லை, அப்பாவிடத்தில் அப்படியெல்லாம் தான் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேச மாட்டேன்!" என்றான் சூரியா. "அப்படியே சூரியா சொன்னாலும் நான் அதைக் கேட்க மாட்டேன். குடும்பத்தின் சொத்தில் புருஷர் குழந்தைகளைப் போல் பெண் குழந்தைகளுக்கும் சமபாகம் கொடுக்க வேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் பேசுகிறார்களே! லலிதாவுக்குச் சொத்தில் என்ன பாகம் உண்டோ , அதைத்தான் கலியாணத்துக்குச் செலவழிக்கப் போகிறேன்" என்றார் கிட்டாவய்யர். "ஒரு விஷயம், அப்பா! லலிதாவுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்; என்னுடைய கட்சியும் அதுதான். ஆனால் லலிதா சொத்தின் பாகத்தை நம் இஷ்டப்படி செலவழிக்க நமக்கு என்ன பாத்தியதை இருக்கிறது? அதை அவளுக்கே எழுதி வைத்து விடுவதாயிருந்தால் எனக்குப் பூரண சம்மதம். வீண் ஆடம்பரக் கலியாணச் செலவுகளிலும் வரதட்சணையிலும் செலவு செய்வதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன்?" என்றான் சூரியா.

"நீ ஆட்சேபித்தால் ஆட்சேபிக்க வேண்டியதுதான். ஊருக்கெல்லாம் ஒரு வழி, நமக்கு ஒரு வழி என்றால் நடக்கிற காரியமா?" "அது இருக்கட்டும், ஐயர்வாள்! எனக்கு ஒரு சந்தேகம். அதை ஒருவரும் தீர்த்து வைக்கிற வழியாக இல்லை. 'உழுகிறவனுக்கு நிலம்' என்று சொல்கிறார்களே? உண்மையிலேயே உழுகிறது யார்? மாடு அல்லவா கலப்பையை இழுத்துப் போய் உழுகிறது? அப்படியானால் உழுகிற மாட்டுக்குத்தான் நிலம் சொந்தம் என்றல்லவா ஏற்படுகிறது?" என்றார் பக்கத்து வேளாளர் தெருவிலிருந்து வந்திருந்த கர்ணம் வேலாயுத முதலியார். "கணக்குப்பிள்ளை! நல்ல போடு போட்டீர்! ஏண்டா சூரியா, இதற்கு என்னடா பதில் சொல்கிறாய்?" என்றார் சீமாச்சுவய்யர். சூரியா சிறிது திகைத்துத்தான் போனான் பிறகு "இது விளையாட்டுக் கேள்வி, நிலம் மாட்டுக்குச் சொந்தமாயிருக்க முடியாது. மாட்டை ஓட்டுகிற உழவனுக்குத்தான் சொந்தமாயிருக்க முடியும்" என்றான். "நீ சொல்கிறதற்குச் சரி என்றே வைத்துக்கொள்வோம். சீமையிலேயெல்லாம் உழுகிறதற்கு டிராக்டர் என்று ஒரு மெஷின் வந்திருக்கிறதாம். 'ஒரு டிராக்டரைக் கொண்டு ஐந்நூறு ஏக்கரா நிலம் உழலாமாம். அவ்விதம் டிராக்டரைக் கொண்டு ஐந்நூறு ஏக்கரா உழுகிறானே, அவனுக்கு அந்த ஐந்நூறு ஏக்கராவும் சொந்தம் என்று ஏற்படுமா? அப்படியானால் சொல்லு! நான் எப்படியாவது ஒரு டிராக்டர் வாங்கி விடுகிறேன். அதை ஓட்டவும் கற்றுக்கொண்டு விடுகிறேன்!" என்றார் வேலாயுத முதலியார்.

சூரியா சிறிது நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்:"நான் கூறியது ஒரு விதத்தில் தப்புத்தான். 'உழுகிறவனுக்கு நிலம்' என்று சொல்வது அவ்வளவு சரியல்ல. நிலம் உண்மையில் சர்க்காருடையது." "நல்ல காரியம்! நிலமெல்லாம் வெள்ளைக்காரனுக்குச் சொந்தம் என்கிறாயா? ஏற்கெனவே அவன் வசூலிக்கும் வரிப்பளு தாங்க முடியவில்லை!" "இப்போது வெள்ளைக்கார சர்க்காராயிருக் கிறபடியால் இப்படிச் சொல்கிறீர்கள். இந்தியாவில் கூடிய சீக்கிரம் சுயராஜ்ய சர்க்கார் ஏற்பட்டே தீரும். அப்போது நிலமெல்லாம் சர்க்காருக்குப் பொதுவாயிருந்தால் தேச மக்களின் பொதுச் சொத்து என்று ஏற்படும். ஆபீஸ் குமாஸ்தாவும் பள்ளிக்கூட உபாத்தியாயரும் சர்க்கார் சம்பளம் பெறுவதுபோல் உழவர்களும் சம்பளம் பெறுவார்கள். கலப்பையில் மாட்டைக் கட்டி உழுதாலும் சரிதான்; டிராக்டரை ஓட்டி உழுதாலும் சரிதான்." "அப்பொழுது நம்மைப் போன்ற மிராசுதாரர்கள் எல்லாம் என்ன செய்வதாம்? வாயிலே விரலை வைத்துக் கொண்டு நிற்பதோ?" என்று பஞ்சுவய்யர் கொஞ்சம் ஆத்திரமாய்க் கேட்டார். "உங்களுக்கு - பிராமணாளுக்கு,- பரவாயில்லை. ஐயர்வாள்! எங்கேயாவது போய் எந்த உத்தியோகமாவது பண்ணிப் பிழைத்துக் கொள்வீர்கள்! ஒன்றுமில்லாவிட்டால் ஹோட்டலாவது வைத்து விடுவீர்கள்! எங்கள் பாடுதான் ஆபத்தாய்ப் போய்விடும்! என்றார் வேலாயுத முதலியார்.

மேற்கண்டவாறு திண்ணைப் பார்லிமெண்ட் சபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சீமாச்சுவய்யரின் தர்மபத்தினி அன்னம்மாள் விடுவிடுவென்று நடந்து வந்து கிட்டாவய்யரின் வீட்டுக்குள் நுழைந்தாள். அவள் நுழைந்த சிறிது நேரத்துக்கெல்லாம் வீட்டுக்குள்ளே ஒரு பயங்கர பூகம்பம் ஏற்பட்டு விட்டதாகத் தோன்றியது. ஆத்திரம் நிறைந்த குரல்களில் ஒரே கூச்சல். யாரோ விம்மி விம்மி அழுகிற குரலும் கேட்டது. இவ்வளவு சத்தங்களுக்கிடையில் சரஸ்வதியின் தாயார், "இந்தக் குடி கேடிகளை வரச் சொல்ல வேண்டாமென்று சொன்னேனே, கேட்டாயா? பெண் பார்க்க வருகிறதற்கு முன்னாலே மெனக்கெட்டு உன்னைத் தனியாக அழைத்துப் போய்ச் சொன்னேனே அதையாவது கேட்டாயா? 'கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய் விடாது' என்று சொன்னாயே! இப்போது கொண்டு போய் விட்டதேடீ? என்ன செய்யப் போகிறாய்? எல்லாரும் என்னை அசடு, பைத்தியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! நான் அசடுமில்லை பைத்தியமும் இல்லை. நீதான் சுத்த நிர்மூடம்! இல்லாவிட்டால் பூனைக்குட்டியை மடியிலேயே கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பாயா?" என்று பிரசங்கமாரி பொழிந்த சத்தம் கேட்டது. அதற்குச் சரஸ்வதி அம்மாள், 'இந்த மாதிரி அநியாயம் நடக்கும் என்று யார் அம்மா கண்டது?.... அடே சுண்டு! உங்க அப்பாவைக் கூப்பிடு. இங்கே வீடு பற்றி எரிகிறது, அங்கே என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? கூப்பிடடா உடனே" என்றாள். இதுவும் அங்கிருந்த எல்லாருடைய காதிலும் விழுந்தது. கிட்டாவய்யர் அவசரமாகவும் கோபமாகவும் எழுந்து வீட்டுக்குள்ளே போனார்.

"என்னடி இங்கே ரகளை? இடி யார் தலையிலே விழுந்து விட்டது?" என்று கேட்டார். "ஆமாம்; இடிதான் விழுந்து விட்டது?" என் தலையிலே, உங்கள் தலையிலே, குழந்தை லலிதாவின் தலையிலே, எல்லாருடைய தலையிலும் விழுந்து விட்டது. சீமாச்சு மாமாவாத்து மாமி என்ன சொல்லுகிறாள் என்று கேளுங்கள்! அழகான மனுஷாளைச் சென்னைப் பட்டினத்திலிருந்து வரவழைத்தேளே, அவர்களுடைய காரியத்தைக் கேளுங்கள். பம்பாயிலிருந்து அருமைத் தமக்கையைச் சீராட்டக் கூப்பிட்டுக் கொண்டு வந்தீர்களே! அதன் பலன் என்ன ஆயிற்று என்று கேளுங்கள்!"- இவ்விதம் சரஸ்வதி அம்மாள் கூச்சல் போட்டாள். "ஆகட்டும் எல்லாம் கேட்கிறேன். நீ மட்டும் கொஞ்சம் மெதுவாய்ப் பேசு! யாருக்கோ பிராணன் போய்விட்ட மாதிரி சத்தம் போடாதே!" என்றார் கிட்டாவய்யர்.