அலை ஓசை/புயல்/சாலை முனையில்

விக்கிமூலம் இலிருந்து

உலாவச் சென்று திரும்பி வந்த அன்றிரவு சீதா வெகு நேரம் தூங்கவில்லை. புதுடில்லியில் புதுக் குடித்தனம் போட்ட பிறகு முதன் முதலாகத் தன் பிரிய நாயகன் தன்னை உலாவ அழைத்துச் சென்ற தினத்தில், தான் அசட்டுத்தனமாக நடந்து கொண்டு அவனுக்கு எரிச்சல் உண்டாக்கியதை நினைத்து நினைத்து வருந்தினாள். இருந்தாலும் அவர் எதற்காக, 'அவள் யார் என்பதைச் சொல்ல மறுக்க வேண்டும் என்ற எண்ணம் ஊசியினால் நெஞ்சைக் குத்துவதுபோல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. சென்னை பத்மாபுரத்தில் மாமனார் வீட்டில் வசித்த போது, சில கோள் - சொல்லிப் பெண்கள் ராகவனுடைய பழைய காதலைப் பற்றி ஊரில் ஏற்பட்டிருந்த வதந்தியை அவளிடம் பிரஸ்தாபித்தார்கள். அப்போது அவள் அதை நம்பவில்லை. பொறாமையினால் சொல்கிறார்கள் என்றே எண்ணினாள். அந்த வம்புப் பேச்சு இப்போது ஞாபகத்துக்கு வந்தது. 'ரயிலில் பார்த்த பெண் அவள்தானோ, என்னமோ? தினம் தினம் ஆபீஸுக்குப் போகிறதாகச் சொல்லி விட்டுப் போகிறாரே, அவளைப் பார்க்கத்தான் போகிறாரோ என்னமோ?' என்று தோன்றியது. "என்ன மூடத்தனம்? அவள்தான் எங்கேயோ போய்விட்டாளே?

மேலும், ரயிலில் அவளைப் பார்த்துவிட்டு இவர் அதிசயப்பட்டதிலிருந்து அவ்வளவு பழக்கப்பட்டவளாகவே தோன்றவில்லை. அப்படி இருக்க நாமாக மனத்தை ஏன் புண்படுத்திக் கொள்கிறோம்? 'பெண் புத்தி பேதைமை' என்று சொல்லுவது வாஸ்தவந்தான்!" என்று தன்னைத் தானே கண்டித்துக் கொண்டாள். "லலிதாவைப் பார்க்க வந்த இடத்தில் அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லி என்னை வலியக் காதலித்து மணந்து கொண்டாரே; அப்படி என்னை ஆட்கொள்ள வந்த உத்தம புருஷரைப் பற்றி வீண் சந்தேகம் கொள்வது எவ்வளவு பிசகு? கூடவே கூடாது!" என்று தனக்குதானே புத்தி சொல்லிக் கொண்டாள். இனிமேல் அன்று சாயங்காலம் நடந்தது போல் நடப்பதற்கே இடங்கொடுக்கக் கூடாது என்றும், அவருக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றிக் கேட்கவே கூடாது என்றும் சங்கல்பம் செய்து கொண்டாள். இவ்வளவு திடமான தீர்மானத்துக்கு வந்த பிறகும், "ஏதோ நான் தெரியாத்தனமாகக் கேட்டு விட்டதாகவே இருக்கட்டும்; 'அவள் யார்' என்று சொல்லியிருந்தால் என்ன? எதற்காக மறுக்க வேண்டும்?" என்ற நினைவு தோன்றி வேதனை செய்தது.

இந்த வேதனை நிறைந்த சிந்தனையெல்லாம் மறுநாள் பொழுது விடிந்ததும், தூக்கத்தில் கண்ட துர்சொப்பனம் விழித் தெழுந்ததும் மங்கி மறைவது போல், சீதாவின் மனத்திலிருந்து மறையத் தொடங்கியது. ராகவனுக்குக் காலை காப்பி கொண்டு கொடுத்த போது அவன் அவளைப் பார்த்துச் செய்த புன்னகையில் அடியோடு மறைந்துவிட்டது. வழக்கம்போல் ராகவன் ஆபீஸுக்கு புறப்பட்டபோது சீதா வஸந்தியைத் தூக்கிக்கொண்டு வந்தாள். ராகவன் அவளைக் கையில் வாங்கிக் கொண்டு கொஞ்சினான். தோளில் சாத்திக் கொண்டு தட்டிக் கொடுத்தான்; கன்னத்தை மெதுவாகக் கிள்ளினான். "வஸந்தி! என்னோடு நீ ஆபீஸுக்கு வருகிறாயா?" என்று கேட்டான். "வதேன் அப்பா! இப்பவே வதேன்!" என்றாள் வஸந்தி. "சரிதான்; உன்னை அழைத்துக் கொண்டு போனால் நான் வேலை செய்தாற் போலத்தான்!" என்றான். சமையல் அறையிலிருந்து வந்த காமாட்சி அம்மாள், "வஸந்திக்கும் வயதாகும்போது உன்னைத் தோற்கடித்து விடுவாள், பார்! உன்னைவிடப் பெரிய உத்தியோகம் பார்ப்பாள்!" என்றாள். "அதைப் பற்றிச் சந்தேகம் என்ன? அவளுடைய அம்மா யார்? சீதாவுக்குப் பிறந்த பெண் சோடையாகப் போய் விடுவாளா?" என்றான் ராகவன். சீதாவுக்குப் பெருமை தாங்கவில்லை.

"நான் என்ன அவ்வளவு கெட்டிக்காரியா? வஸந்தி முழுக்க முழுக்க என் மாமியாரைக் கொண்டிருக்கிறாள். அதனால்தான் இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாள். நீங்கள் வேணுமானால் இரண்டு பேருடைய முகத்தையும் ஒத்திட்டுப் பாருங்கள்!" என்றாள் சீதா. காமாட்சி அம்மாளுடைய சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. "ஆகக் கூடி உங்கள் இரண்டு பேருக்குள்ளேயே வஸந்தியின் சமர்த்தைப் பங்கு போட்டுக் கொள்ளப் பார்க்கிறீர்கள். எனக்குக் கொஞ்சம் கூடக் 'கிரெடிட்' கொடுக்க நீங்கள் தயாராயில்லை!" என்று ராகவன் சொல்லி வஸந்தியை அம்மாவிடம் ஒப்புவித்து விட்டு ஆபீஸுக்குப் புறப்பட்டான். மேலும் ஒரு வாரம் சென்றது ராகவனாகத் தன்னை 'வாக்கிங்' போக மறுபடி அழைப்பான் என்று சீதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக் கிறதாகக் காணப்படவில்லை. ஆகையால் சீதாவே அந்தப் பேச்சை எடுக்க வேண்டியதாயிற்று. "வெளியே போய் அதிக நாளாயிற்றே? இன்றைக்குப் போகலாமா?" என்று சீதா கேட்டாள். "போகலாம் ஆனால் நீ அன்றைக்குக் கேட்டது போல் அசட்டுத்தனமான கேள்வி ஒன்றும் கேட்கக் கூடாது. கேட்கிறதில்லை என்று ஒப்புக்கொண்டால் போகலாம்!" என்றான் ராகவன்.

"நான் கேட்கவில்லை; அப்படி ஏதாவது நான் தப்பித் தவறிக் கேட்டாலும் நீங்கள் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லுங்களேன்!" என்றாள் சீதா. "அதெல்லாம் முடியாது நீ அசட்டுத்தனமாக ஏதாவது கேட்டால் எனக்குக் கோபந்தான் வரும்! அதைவிட வெளியே போகாமலிருப்பதே நல்லது" என்றான் ராகவன். "நான் ஒன்றும் கேட்கவில்லை; ஊமையைப் போல் இருக்கவேண்டும் என்றாலும் இருக்கிறேன்" என்றாள் சீதா. "பார்த்தாயா இங்கேயே ஆரம்பித்து விட்டாயே? நான் வரவில்லை!" என்றான் ராகவன். சீதா பயந்துவிட்டாள்; "நான் சாதாரணமாகத்தான் சொன்னேன் கோபித்துக் கொண்டு சொல்லவில்லை வாருங்கள், போகலாம்" என்றாள். இன்றைக்கு வேறொரு பக்கம் போனார்கள்; போகும்போது பேச்சு அதிகமில்லை. தப்பாக ஏதாவது பேசிவிடக் கூடாது என்று சீதா சர்வ ஜாக்கிரதையாக இருந்தாள். ராகவனும் அக்கம் பக்கம் அதிகமாகப் பார்க்கவில்லை. சீதா தான் எதிரில் வந்த ஸ்திரீகளை எல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டு போனாள். பச்சைப் புல் வட்டம் ஒன்று வந்தது; அதன் இடையிடையே அழகிய பூஞ்செடிப் புதர்கள் சில இருந்தன. "நடந்தது போதும்; இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டுத் திரும்பலாம்" என்றாள் சீதா.

பசும்புல் வட்டத்தைச் சுற்றிச் சில பெஞ்சிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் சிலர் உட்கார்ந்திருந்தார்கள்; ராகவனும் சீதாவும் ஒரு பூஞ்செடிப் புதரின் அருகில் அமர்ந்தனர். பெஞ்சிகளில் ஒன்றில் ஒரு பார்ஸி கனவானும் அவர் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய இரு குழந்தைகளும் புல் தரையில் ஓடியாடுவதைப் பார்த்து அவர்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்! "வஸந்தியையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம் இங்கே ஓடி விளையாடுவாள்!" என்றாள் சீதா. "இவ்வளவு தூரம் அவளால் நடக்க முடியுமா? அல்லது அவளைத் தூக்கிக் கொண்டுதான் வர முடியுமா? காரிலேதான் அழைத்துக் கொண்டு வரவேண்டும்!" என்றான் ராகவன். "ஆமாம்" என்றாள் சீதா; சற்றுப் பொறுத்து, "அம்மாவையும் குழந்தையையும் அழைத்துப்போய் டில்லி அதிசயங்களை எல்லாம் காட்ட வேண்டாமா?" என்று கேட்டாள். "காட்ட வேண்டியதுதான் ஆனால் வஸந்திக்கு இந்த வயதில் ஒன்றும் தெரியாது. அம்மாவுக்கு ஊர் சுற்றுவதில் ஆசை கிடையாது. 'கோயில் இல்லை, குளம் இல்லை, மசூதியையும் மண்ணாங்கட்டியையும் பார்த்து எனக்கு என்ன ஆக வேண்டும்?' என்கிறாள். ஆனாலும் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமையாதலால் குதுப்மினாருக்கும் கோட்டைக்கும் உங்கள் எல்லாரையும் அழைத்துப் போகலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்றான் ராகவன்.

இதைக் கேட்ட சீதா, வீட்டிலிருந்து புறப்படும்போது ஏற்பட்ட மனச் சோர்வு நீங்கிக் குதூகலமடைந்தாள். "ஆமாம், தாஜ்மகாலுக்கு எப்போது போகிறது? முதல் முதல் நாம் இங்கு வந்தபோதே அழைத்துப் போவதாகச் சொன்னீர்கள். அதற்குள் சீமைப் பிரயாணம் வந்துவிட்டது; ஞாபகம் இருக்கிறதா?" என்றாள் சீதா. "ஞாபகம் இல்லாமல் என்ன? அதைப் பற்றியும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன். தாஜ்மகாலுக்குப் போவதாயிருந்தால் பௌர்ணமியன்று போகவேண்டும். அப்போதுதான் அதன் அழகை நன்றாய் அனுபவிக்கலாம்!" என்றான் ராகவன். "நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலைப் பார்த்தால் தேவலோகத்து மேனகையின் மாளிகை மாதிரி இருக்கும் என்று ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள்." "ஆமாம்; பகலிலே தாஜ்மகாலைப் பார்த்தால் பளிங்குக்கல் மாளிகையாகத் தோன்றும்; நிலா வெளிச்சத்தில் பார்த்தால் பூரண சந்திரனுடைய கிரணங்களைக் கொண்டே கட்டியதாகத் தோன்றும்!" "ஏன், ஸார் அடுத்த பௌர்ணமியன்று போய் வரலாமே? என்ன சொல்கிறீர்கள்!" "பார்க்கலாம்!" "அம்மாவையும் வஸந்தியையும் அழைத்துக்கொண்டு தானே போக வேண்டும்?" இதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. அவனுடைய மனது வேறு எங்கேயோ அதற்குள் போய்விட்டதாக தோன்றியது.

சூரியாஸ்தமனமாகி இருள் சூழ்ந்து வந்தது. புதுடில்லிக்குச் சோபை அளித்த ஆயிரக்கணக்கான மின்சாரத் தீபங்கள் ஒளிரத் தொடங்கின. நாலாபுறத்திலும் பச்சைப் பசும் மரங்களின் இடையிடையே அந்த மின்சார தீபங்கள் ஒளிர்ந்தது அற்புதமான காட்சியாயிருந்தது. அப்போது பனிக்காலம் முடியும் சமயம். இலேசாகப் பனி விழத் தொடங்கியது. சீதாவின் உள்ளம் அச்சமயம் குளிர்ந்திருந்ததுபோல் உடம்புக்குக் குளிர்ந்தது. இருவரும் பசும்புல் தரையிலிருந்து எழுந்து வீடு நோக்கி நடந்தார்கள். திரும்பி வரும்போது தூரம் அதிகமாயிருப்பது போலத் தோன்றியது. கிட்டத்தட்ட வீட்டுக்குச் சமீபம் வந்துவிட்டார்கள். வீட்டுச் சாலைக்குத் திரும்ப வேண்டிய இடத்தில் சாலை ஓரத்து மேடையில் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். முதலில் வந்த சீதா திடுக்கிட்டு மிரண்டு ஒரு கணம் நின்றாள்; ஒரு அடி பின் வாங்கினாள். இதன் காரணம் அவளுக்கு எதிரில் ஒரு பெரிய மரத்தோரமாகக் கையில் பிடித்த கத்தியுடன் ஒரு ஸ்திரீ நின்று கொண்டிருந்ததுதான். இலேசான பனிப்படலம் சல்லாத் திரையைப் போல் அந்த ஸ்திரீயை மூடியிருந்தது.

சாலை ஓரத்து தீபஸ்தம்பத்தில் லாந்தர் போல் கூடு அமைந்து விளங்கிய மின்சார விளக்கின் பரந்த ஒளி பனிப்படலத்தின் வழியாகப் புகுந்து அந்த ஸ்திரீயின் வெளிறிய முகத்தை மங்கலாக எடுத்துக் காட்டியது. நாடக மேடைகளில் சில சமயம் மெல்லிய வெள்ளைச் சல்லாவினால் மூடிய ஆவி உருவங்களைக் கொண்டு வந்து காட்டுகிறார்களே, அதைப் போல் அந்த ஸ்திரீயின் உருவம் காட்சி அளித்தது. கையில் கத்தி பிடித்த பெண் உருவத்தைக் கண்டதும் சீதா தயங்கிப் பின்வாங்கினாள். பின்னால் அடி எடுத்து வைத்த அதே நேரத்தில் அந்த ஸ்திரீயை முன்னால் ஒரு சமயம் பார்த்திருப்பதாகச் சீதாவுக்கு நினைவு வந்தது. ஈனமான மெலிந்த 'ஓ' என்ற சப்தம் ஒன்று அவள் வாயிலிருந்து வந்தது. பின்னால் வந்த ராகவன் சீதாவைக் கையினால் தாங்கிக்கொண்டு, "என்ன?" என்றான். 'அதோ' என்று கையைக் காட்டினாள் சீதா. ராகவன் பார்த்த போது அந்தப் பெண் உருவம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. அரை நிமிஷத்துக்குள் இருளிலும் பனியிலும் மறைந்துவிட்டது.இந்தச் சம்பவம் எந்தவிதமான உணர்ச்சியையோ கிளர்ச்சியையோ ராகவன் மனதில் உண்டாக்கவில்லை. "அசடே! புதுடில்லிச் சாலையில் எத்தனையோ பேர் வருவார்கள்; போவார்கள், நீ எதற்காகப் பயப்படுகிறாய்?" என்றான் ராகவன். "நான் பயப்படவில்லை" என்றாள்; ஆயினும் அவளுடைய உள்ளத்தில் இன்னதென்று சொல்லமுடியாத பீதி குடிகொண்டு விட்டது. அந்தப் பீதியினால் அப்போது அவளால் ஒன்றும் பேச முடியவில்லை. இராத்திரி படுக்கப் போகும் சமயத்தில் ராகவனிடம் சாவகாசமாக அந்த ஸ்திரீயைப் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.