சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/முத்துமாலை

விக்கிமூலம் இலிருந்து
18. முத்துமாலை

பழந்தமிழ் நாட்டு மன்னர்களுக்குள்ளே ஒப்புயர்வு அற்றவரும், தமது இணையில்லாத புகழை என்றும் அழியாத வண்ணம் கல்லிலே செதுக்கி வைத்தவருமான மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியை அன்றொரு நாள் இரவில், யுத்தச் செய்தி வந்த அவசரத்தில் மதயானையின் வெறியினால் நிகழ்ந்த தடபுடலுக்கு மத்தியில் நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். எத்தகைய சாமான்யக் குறுநில மன்னர்களையும்கூட அந்தந்த இராஜாங்கக் கவிகள் புத்தியிலே பிருகஸ்பதி என்றும், வித்தையிலே சரஸ்வதி என்றும், அழகிலே மன்மதன் என்றும் வீரத்திலே அர்ஜுனன் என்றும், கொடையிலே கர்ணன் என்றும் வர்ணிப்பதுண்டு. இந்த வர்ணனையெல்லாம் மகேந்திர சக்கரவர்த்தியின் விஷயத்தில் உண்மையிலேயே பொருந்துவதாயிருந்தது.

மகேந்திரவர்மர் ஆஜானுபாஹுவான தோற்றமுடையவர். அவருடைய கம்பீரமான முகத்தில் பல நூறு வருஷங்களாக வாழையடி வாழையாக வந்த இராஜ குலத்தின் வீரக் களையோடு சிறந்த கல்வி ஆராய்ச்சியினாலும் கலைப் பயிற்சியினாலும் ஏற்படும் வித்யாதேஜஸும் பிரகாசித்தது. காஞ்சி நகரின் பிரசித்தி பெற்ற பொற்கொல்லர்கள் சித்திர விசித்திர வேலைப்பாடுகளுடன் செய்த கிரீடம், குண்டலம், வாகுவலயம், வீரக்கழல் முதலிய ஆபரணங்கள் அவர் தரித்திருந்தார். அவருடைய விசாலமான வீர லக்ஷ்மி குடிகொண்ட மார்பை விதவிதமான வர்ணங்களுடன் பிரகாசித்த நவரத்தின மாலைகள் அலங்கரித்தன. அபூர்வ அழகும் நயமும் மென்மையும் வாய்ந்த பட்டுப் பீதாம்பரங்களை உற்பத்தி செய்வதில் அந்த நாளிலேயே காஞ்சி நகரம் பெயர் பெற்றிருந்தது. அத்தகைய பீதாம்பரங்களை மகேந்திர சக்கரவர்த்தி அழகு பொருந்த அணிந்தபோது, அவை அதிக சோபை பெற்று விளங்கியதாக நெசவுக் கலைஞர்கள் பெருமிதத்துடன் கூறினார்கள்.

மகேந்திரர் தமிழ்மொழி, வடமொழி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த தேர்ச்சிபெற்ற பண்டிதராக விளங்கினார். வடக்கே தக்ஷசீலம் முதல், தெற்கே கன்னியாகுமரி வரையில் உள்ள பண்டிதர்கள், மகா ரசிகரான மகேந்திர சக்கரவர்த்தியிடம் தங்களுடைய புலமையைக் காட்டிப் பரிசுபெறும் பொருட்டுக் காஞ்சி நகரில் வந்து மொய்த்த வண்ணம் இருந்தார்கள். அன்றைக்கு ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னால் வடநாட்டில் உஜ்ஜயினி நகரத்தில், அரசு செலுத்திக் காளிதாஸன் முதலிய மகா கவிகளை ஆதரித்த சந்திரகுப்த விக்கிரமாதித்யருக்குப் பிறகு, பண்டிதர்களுக்கும் கவிஞர்களுக்கும் கற்பகவிருக்ஷமாக விளங்கியவர் காஞ்சி மகேந்திர சக்கரவர்த்தி தான் என்பது வெகுஜன வாக்காயிருந்தது. சித்திரம், சிற்பம் ஆகிய கலைகளில் சக்கரவர்த்தி ஆர்வங்கொண்டிருந்ததோடல்லாமல் அவற்றை நன்றாகப் பயின்று அந்தந்தக் கலையில் வல்லவர்களாயிருந்த கலைவாணர் எல்லாரும் பார்த்து வியக்கும்படியான தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

சிற்பத் துறையில் மகேந்திரனின் அதிசயமான கற்பனைத் திறனைக்கண்டு வியந்து, சிற்பசாஸ்திர பண்டிதர்கள் அவருக்கு 'விசித்திர சித்தர்' என்ற பட்டத்தை வழங்கியிருந்தார்கள். அவ்விதமே சித்திரக்கலை வல்லவர்களிடம் 'சித்திரக்காரப் புலி' என்னும் பட்டத்தைச் சக்கரவர்த்தி பெற்றிருந்தார். 'மத்தவிலாஸப் பிரகசனம்' என்னும் ஹாஸ்ய நாடகத்தை வடமொழியில் இயற்றி 'மத்தவிலாஸர்' என்னும் பட்டத்தை அடைந்தார். சங்கீத சாஸ்திரத்தைக் கரை கண்டிருந்த ருத்ராசாரியாரிடம் அவர் சங்கீதக் கலை பயின்று, ஏழு நரம்புகள் உடைய 'பரிவாதினி' என்னும் வீணையை அபூர்வமாய்க் கையாளும் திறமை பெற்றிருந்தார். தாள வகைகளிலே 'ஸங்கீர்ண ஜாதி' தாளத்தை அதிசயமாகக் கையாளும் வல்லமை காரணமாக 'ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர்' என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மகேந்திரர் இளம் பிராயத்தில் சமண மதத்தில் ஈடுபட்டிருந்து பிற்காலத்தில் சிவபக்திச் செல்வரான பிறகு, எந்த மதத்தையும் துவேஷிக்காதவராய், தமது சாம்ராஜ்யத்தில் இருந்த சைவர், வைஷ்ணவர், பௌத்தர், சமணர், சாக்தர் ஆகிய சகல மதத்தினரையும் தர்மம் தவறாமல் பரிபாலித்து வந்தபடியால், 'குணபரர்' என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. 'திருவதிகை' ஸ்தலத்தில் அவருடைய கொடையினால் கட்டப் பெற்ற சிவாலயத்துக்குக் 'குணபரேச்வரம்' என்ற பெயர் வழங்கிற்று. மகேந்திர சக்கரவர்த்திக்கு முற்பட்ட சுமார் முந்நூறு வருஷ காலத்தில் வடநாட்டிலிருந்து பண்டிதர்களும், கவிகளும், சமண முனிவர்களும், புத்த பிக்ஷுக்களும் இடைவிடாமல் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து காஞ்சி நகரில் வித்யா பீடங்களை ஏற்படுத்தி வந்தார்கள். இக்காரணத்தினால் நமது வரலாறு நிகழ்ந்த காலத்தில் தமிழகத்தில் சமஸ்கிருதமும் பிராகிருதமும் மிக்க பிரபலமடைந்து, செந்தமிழ் மொழியின் சிறப்பை ஓரளவு மங்கச் செய்திருந்தன என்பதையும் நேயர்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். திருநாவுக்கரசர் முதலிய சைவ நாயன்மார்களும், பொய்கையார் முதலிய வைஷ்ணவ ஆழ்வார்களும் பக்திச் சுவை சொட்டும் பாடல்களைப் பொழிந்து தெய்வத் தமிழ் மொழியை மீண்டும் சிம்மாசனம் ஏறச் செய்த மகோன்னத காலம் தமிழகத்தில் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. எனவே, மகேந்திர சக்கரவர்த்தியின் பட்டங்கள் பெரும்பாலும் வடமொழியில் இருப்பதன் காரணத்தை நேயர்கள் ஊகித்து அறியலாம்.

மகாராஜாதிராஜா - பூமண்டலாதிபதி - திரிபுவன சக்கரவர்த்தி - மத்தவிலாஸ - விசித்திர சித்த - ஸங்கீர்ண ஜாதிப் பிரகரண சித்திரக்காரப் புலி - குணபரரான மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியை இத்தனை நேரம் ஆயனர் வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைத்து விட்டதற்காக வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம். அவ்விதம் நாம் அந்த மன்னர் பெருமானை நிறுத்தி வைத்துவிட்ட போதிலும், ஆயனச் சிற்பியார் அவரை வரவேற்று உபசரிப்பதில் சிறிதும் காலம் தாழ்த்தி விடவில்லை. சக்கரவர்த்தியின் வருகையை அறிவித்த பேரிகை ஒலி வெகுதூரத்தில் கேட்ட போதே ஆயனர் பரபரப்புடன் வீட்டு வாசலுக்கு வந்து அவரை வரவேற்க ஆயத்தமாக நின்றார்.

குதிரையிலிருந்து இறங்கும்போதே சக்கரவர்த்திப் பெருமான் "ஆயனரே! அன்றிரவு சுகமாக வந்து சேர்ந்தீர்களா? சிவகாமி சௌக்கியமா?" என்று கேட்டுக்கொண்டே இறங்கினார். ஆயனர், முன்னால் ஓர் அடி சென்று கும்பிட்டு, "ஆகா! சுகமாக வந்து சேர்ந்தோம்! குழந்தைதான் மூன்று நாளாக அவ்வளவு சௌக்கியம் இல்லாமலிருந்தாள்..." என்பதற்குள் மகேந்திர பல்லவர், "அப்படியா? இப்போது எப்படி இருக்கிறாள்?" என்று கவலைக் குரலில் கேட்டார். "இன்று சற்றுப் பாதகமில்லை" என்றார் ஆயனர்.

எல்லோரும் வீட்டுக்குள் சென்றார்கள் சக்கரவர்த்தி வரும் சமயங்களில் அமர்வதற்காகவே ஆயனர் ஓர் அழகிய கல்சிம்மாசனத்தை அமைத்திருந்தார். அந்தச் சிம்மாசனத்தில் மகேந்திரர் அமர்ந்ததும், ஆயனர் சிவகாமிக்குச் சமிக்ஞை செய்ய அவள் அருகில் நெருங்கி வந்து சக்கரவர்த்திக்கு நமஸ்கரித்தாள். அப்போது ஆயனர், "பெருமானே! அரங்கேற்றம் நடுவில் தடைப்பட்ட காரணத்தினால் குழந்தை உற்சாகம் இழந்திருக்கிறாள். அவளுடைய சௌக்கியக் குறைவுக்கு அதுதான் காரணம். ரசிக சிரோமணியான தாங்கள்தான் அவளுக்கு ஆசிகூறி உற்சாகப்படுத்த வேண்டும்" என்றார். "ஆயனரே! உமது குமாரி அன்றைக்கு நடனமாடியதாகவே எனக்குத் தோன்றவில்லை. நடனக் கலையே ஓர் உருவம் எடுத்து வந்து ஆடியதாகவே தோன்றியது" என்றார் மகேந்திரர்.

"ஸங்கீர்ண ஜாதி தாளத்தை உபயோகப்படுத்தி ஓர் ஆட்டம் கற்பித்திருந்தேன்; அதை ஆடமுடியாமல் போய் விட்டது" என்று ஆயனர் ஏமாற்றமான குரலில் கூறினார். "ஆம்; ஆம்! இன்னும் என்னவெல்லாமோ விந்தைகள் வரப் போகின்றன என்று எனக்குத் தெரிந்துதான் இருந்தது. நடுவில் எழுந்து போக நேர்ந்ததில் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தைச் சொல்லி முடியாது. அவ்வளவு முக்கியமான செய்தியாயிராவிட்டால் போயிருக்க மாட்டேன்!" என்றார் சக்கரவர்த்தி. "நானும் கேள்விப்பட்டேன், பிரபு! நமது ராஜ்யத்துக்குள்ளே அந்நியர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்களாமே? என்ன தைரியம்! என்ன துணிச்சல் அவர்களுக்கு!" என்று ஆயனர் உண்மையான ஆத்திரத்துடன் கூறினார்.

"அந்தத் துணிச்சலுக்குத் தகுந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள். ஆயனரே! பல வருஷ காலமாகப் பல்லவ ராஜ்யத்துக்குள் பகைவர் படைகள் நுழைந்ததில்லை. நான் போர்க்களத்தைக் கண்ணால் காண வேண்டும் என்பதற்காக என் தந்தை என்னை இலங்கையில் நடந்த போருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், நரசிம்மனுக்கோ இங்கேயே போர்க்களத்தைப் பார்க்கும்படியான பாக்கியம் நேரிட்டிருக்கிறது. வாதாபி அரசன் புலிகேசி பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு படையெடுத்து வருகிறான். நாமும் பெரும் பலம் திரட்டிக் கடும்போர் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு விஷயம் சொல்லுகிறேன்; நமது ராஜ்யத்தில் சளுக்கர் படையெடுத்ததனால் எனக்கு உண்டாகும் கோபத்தைக் காட்டிலும் அதனால் சிவகாமியின் அரங்கேற்றம் தடைப்பட்டதுதான் அதிகக் கோபத்தை உண்டாக்குகிறது. இந்தக் குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்!" என்றார்.

இதைக் கேட்ட ஆயனர் பெருமையினால் பூரித்தவராய், அருகில் தலை குனிந்தவண்ணம் நின்ற சிவகாமியை அருமையுடன் நோக்கினார். சக்கரவர்த்தி மேலும் கூறினார்: "அரங்கேற்றத்தன்று நான் என்னவெல்லாமோ திட்டம் போட்டிருந்தேன். அதெல்லாம் ஒன்றும் முடியாமல் போயிற்று. சபையிலே செய்திருக்க வேண்டிய சம்மானத்தை இங்கேயாவது செய்யலாமென்று உத்தேசித்திருக்கிறேன். அதற்கு ஆட்சேபணை ஒன்றுமில்லையே?" இவ்விதம் சொல்லிக்கொண்டு சக்கரவர்த்தி தம் கையிலிருந்த இரத்தினப் பையிலிருந்து அழகான இரட்டை வட முத்துமாலையை எடுத்தார்.

அப்போது ஆயனர், "பெருமானே! தங்கள் திருக்கரத்தினால் கொடுக்கும்போது எங்கே கொடுத்தால் என்ன? சிவகாமி! உன் பாக்கியமே பாக்கியம்! இந்தப் பரத கண்டத்திற்குள்ளே சகல கலைகளின் நுட்பங்களையும் நன்குணர்ந்தவரான விசித்திர சித்த மகாப் பிரபு உன்னுடைய கலைத் திறமையை மெச்சி உனக்குச் சம்மானம் அளிக்கப்போகிறார்!" என்று கூறிச் சமிக்ஞை செய்யவும், சிவகாமி முன்னால் வந்து சக்கரவர்த்தியைப் பணிவுடன் வணங்கிக் கரங்களை நீட்டினாள்.

மகேந்திரர் முத்துமாலையை எடுத்துச் சிவகாமியின் நீட்டிய கரங்களில் வைத்தபோது...அடடா! இதென்ன மீண்டும் அபசகுனம்! மாலை அவள் கையிலிருந்து நழுவிக் கீழே தரையில் விழுந்துவிட்டதே! ஆயனரின் முகம் சட்டென்று சுருங்கியது. மகேந்திர பல்லவருடைய திடசித்தங்கூடச் சிறிது கலங்கிவிட்டதாக அவருடைய புருவங்களின் நெறிப்பிலிருந்து தெரிந்தது. சிவகாமியின் மனத்திலும் ஏதேனும் துணுக்கம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ, நமக்குத் தெரியாது. ஆனால் அடுத்த கணத்தில் அவளுடைய முகம் மலர்ந்ததைப் பார்த்தால் அவளுடைய உள்ளமும் மலர்ந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாகத் தெரிந்தது.

கீழே விழுந்த முத்துமாலையை அந்தக் கணத்திலேயே குமார சக்கரவர்த்தி சட்டென்று குனிந்து எடுத்தார். எடுத்த மாலையைச் சிவகாமியின் நீட்டிய கரங்களில் அவர் வைக்க, சிவகாமி அதை ஆர்வத்துடன் வாங்கிக் கண்களில் ஒத்திக் கொண்டு கழுத்திலும் அணிந்துகொண்டாள். அந்த முத்துமாலைப் பரிசைக் குமார சக்கரவர்த்தியின் கையினால் பெற்றுக் கொள்ள நேர்ந்தது பற்றிச் சிவகாமியின் உள்ளத்தில் பொங்கிய உவகை முகத்திலும் பிரதிபலித்தது இயல்பே அல்லவா!