அலை ஓசை/பிரளயம்/நித்திய வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

ஏழாம் அத்தியாயம் நித்திய வாழ்வு

இந்த உலகத்தில் எத்தனையோ தேசங்கள் சில சமயம் சிறப்புடன் வாழ்வதும் பிறகு அழிந்து போவதும் வழக்கமாயிருக்கையில், பாரத தேசம் மட்டும் பல்லாயிரம் வருஷமாக நித்திய வாழ்வு பெற்றிருப்பதின் காரணம் என்ன என்பது பற்றிக் கிட்டாவய்யர் சீதாவிடம் கூறினார் அல்லவா? அவருடைய புதல்வன் சூரியநாராயணன் சற்று நேரத்துக்கெல்லாம் அதற்கு வேறொரு காரணம் கூறினான். கிட்டாவய்யர் வீட்டுத் திண்ணையில் கூடிய பார்லிமெண்டு சபையில் நடந்த விவாதத்தின்போது சூரியா அந்தக் காரணத்தைச் சொன்னான். "கொஞ்சம் இதைக் கேளுங்கள்; ஒரு குண்டூசியில் வரிசையாகத் தபால்தலைகளைக் குத்திக் கோப்பதாக வைத்துக்கொள்ளலாம். அதில் மேலேயுள்ள ஒரே ஒரு தபால், மனிதன் தோன்றிய பிறகு சென்றிருக்கும் காலம். அதற்கு முன்னால், கீழேயுள்ள அவ்வளவு தபால்தலைகளின் அளவுள்ள காலம், இந்த உலகத்தில் மனிதனைத் தவிர மற்ற பல்வேறு ஜீவராசிகள் வாழ்ந்து வந்தன. ஜீவராசிகளிலே தென்னை மர உயரமும் மதுரைக் கோயில் கோபுரத்தின் நீளமும் உள்ள சில பிராணிகள் இருந்தன. சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் அந்தப் பயங்கரமான பிராணிகள் இந்த உலகத்தில் அங்குமிங்கும் அகப்பட்டதையெல்லாம் விழுங்கிக்கொண்டு சஞ்சரித்தன. அந்தப் பிராணிகள் எல்லாம் இப்போது எங்கே? அவற்றின் இனமே அழிந்து இருந்த இடந் தெரியாமல் மறைந்து விட்டன. சரித்திர ஆராய்ச்சிக் காரர்கள் வெகு அபூர்வமாக அத்தகைய பிராணிகளின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றும், கரையாத பனித்திரளின் அடியில் அகப்பட்டுக் கொண்டபடியால் அந்த எலும்புக்கூடுகள் லட்சக்கணக்கான வருஷம் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்து இப்போது அகப்படுகின்றன. அவ்வளவு பிரமாண்டமான பிராணிகள் அவற்றின் வர்க்கத்து வாரிசே இல்லாமல் நசித்துப் போனதின் காரணம் என்ன? மாறிக்கொண்டு வந்த உலகத்தின் சீதோஷ்ண நிலைமைக்கேற்ப அவை மாறாமலிருந்ததுதான். மாறிக்கொண்டு வந்த பிராணிகளோ இன்று வரையில் வாழையடி வாழையாக வாழ்ந்து பல்கிப் பெருகி வருகின்றன.

"மனித குலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் பல தேசங்களில் மக்கள் ஒவ்வொரு சமயம் மிக உன்னத நிலைமையில் இருந்திருக்கிறார்கள். பாபிலோனியா, அஸ்ஸீரியா, கிரீஸ், எகிப்து முதலிய அத்தகைய பழைய காலத்து நாகரிக மக்களின் சமூகங்கள் நசித்து அழிந்து போய்விட்டது. ஏன் தெரியுமா? காலத்துக்கேற்ப அந்தச் சமூகங்கள் மாறாமல் அப்படியே இருக்கப் பார்த்ததுதான் காரணம். ஆனால் நம்முடைய பாரத தேசமோ உலகில் வேறு எந்தத் தேசத்தையும் காட்டிலும் அநாதியான நாகரிகத்தை உடையது. ஆயினும் இன்றுவரை அழிந்து போகாமல் இருக்கிறது. காரணம் என்ன? இந்தத் தேசத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் கால மாறுதலுக்கு ஏற்பத் தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு வந்திருப்பதுதான். ஒரே ஒரு உதாரணத்தைக் கேளுங்கள். வேத காலத்தில் நம் முன்னோர்கள் பலவித யாகங்கள் செய்தார்கள். அந்த யாகங்களில் குதிரைகள், மாடுகள், ஆடுகள் முதலிய பல ஜீவப் பிராணிகளைப் பலி கொடுத்தார்கள். அந்த மிருகங்களின் மாமிசத்தை அவிப்பாகம் என்பதாகத் தேவர்களுக்கு அளித்து மிச்சத்தைத் தாங்களும் உண்டார்கள். கௌதம புத்தர் அவதரித்து யாகங்களைக் கண்டித்தார். யாகங்களில் பலி கொடுப்பதைக் கண்டித்தார். கௌதம புத்தருடைய கொள்கைகள் உலகமெங்கும் பரவின. அந்தக் கொள்கைகளில் முக்கியமானவற்றை அந்தக் காலத்துப் பாரத மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்; யாகங்கள் நின்று போயின. பிற்காலத்தில் ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் முதலிய ஆச்சாரிய புருஷர்கள் யாகம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. துளசிதாஸர், துக்காராம், தியாகராஜர் முதலிய பக்த சிரோமணிகளும் யாகம் செய்யச் சொல்லவில்லை.,இந்த ஒரு உதாரணத்தைப்போல ஆயிரம் உதாரணம் ஹிந்து சமூகத்தின் சரித்திரத்திலிருந்து எடுத்துக்காட்டலாம். அவ்விதம் அடிக்கடி புதிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஆச்சாரங்களையும் வழக்கங்களையும் மாற்றிக்கொண்டு வந்ததினால் ஹிந்து சமூகம் இன்றைக்கு ஜீவசக்தி பெற்றிருக்கிறது.

"அத்தகைய அவசியம் - ஹிந்து சமூகம் பல ஆசாரங்களையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது. ஹிந்து தர்மத்துக்குக் கேடு நேராமல் என்னென்ன சமூக சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று போதனை செய்ய மகாத்மா காந்தி அவதரித்திருக்கிறார். அவருடைய போதனையின்படி தீண்டாமை, சாதி வித்தியாசம், குழந்தை மணம் முதலிய வழக்கங்களை ஒழித்தேயாக வேண்டும். நம்முடைய பாட்டனார்களின் காலத்தில் கடைப்பிடித்த பழக்கவழக்கங்களையே இன்னமும் கைக்கொள்ளலாம் என்று எண்ணினோ மானால் நம்மைப் போன்ற அறிவீனர்கள் இல்லை என்று ஏற்பட்டுவிடும்." "பாரத தேசத்து மக்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டு வந்தால் இந்த உலகில் நிலைபெற்று வாழலாம்; மேன்மையாகவும் வாழலாம். வழக்கங்களை மாற்ற மாட்டோ ம் என்று பிடிவாதம் பிடித்தால் சரித்திரத்தில் எத்தனையோ ஜீவப்பிராணிகளும் எத்தனையோ தேசமக்களும் அழிந்து போனது போல நாமும் அழிந்துபோக வேண்டியதுதான்!...." சூரியாவின் இந்த நீண்ட பிரசங்கத்தைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான பிச்சுவய்யர் இப்போது குறுக்கிட்டு, "நீ சொல்லுகிறது சரிதான், அப்பா! யார் இல்லை என்கிறார்கள்? நம்முடைய காலத்திலேயே எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுத்தான் இருக்கின்றன. நான் சிறு பையனாயிருந்த போது பிராமணன் சாப்பிடுவதை மற்றச் சாதியார் பார்க்கக் கூடாது. சமபந்தி போஜனம் செய்தால் சாதிப்பிரஷ்டம் செய்து விடுவார்கள். அந்த ஆசாரத்தையெல்லாம் இப்போது யார் பார்க்கிறார்கள்? அந்தக் காலத்தில் இந்த அக்கிரகாரத்தில் ஒருவர்கூடத் தலையில் கிராப் வைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்ததில்லை. இப்போது எந்த வீட்டிலாவது கிராப் வைத்துக் கொள்ளாத பையன் இருந்தால் காட்டுப் பார்க்கலாம்! கிடையவே கிடையாது!" என்று சொன்னார்.

"மாமா! இந்த மாதிரி முக்கியமில்லாத விஷயங்களில் மாறுதல் நடந்திருக்கிறது, ஆனால் இது போதுமா? போதாது. நம்முடைய பாட்டனார் காலத்தில் பண்ணையாட்களை நடத்தியது போல இந்தக் காலத்திலும் நடத்தலாம் என்று நினைத்தோமானால் பெரும் பிசகாக முடியும்...." "பார்த்தீராங்காணும், பஞ்சுவய்யரே! பையன் எங்கேயெல்லாமோ சுற்றி என்னவெல்லாமோ சக்கரவட்டமாகப் பேசுகிறானே என்று பார்த்தேன், கடைசியில் பண்ணை ஆள் விஷயத்துக்கு வந்து விட்டான். அப்பனே! அந்த விஷயம் ஹைகோர்ட்டு வரையில் போய்த் தீர்ந்து போய்விட்டது. அதைப் பற்றி நீ இப்போது பேச வேண்டாம். வேறு ஏதாவது இருந்தால் சொல்லு" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "சாஸ்திரிகள் சொல்லுவது சரிதானே, சூரியா! இந்தக் கிஸான் கிளர்ச்சி விஷயம் இருக்கவே இருக்கிறது. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ சுயராஜ்ய இயக்கத்தைப் பற்றிச் சொல்லு. மகாத்மா காந்தி முதலானவர்கள் இவ்வளவு பாடுபட்டார்களே! என்ன ஆயிற்று? சுயராஜ்யம் எப்போது வரப்போகிறது? நேதாஜி சுபாஷ் போஸ் இப்போது எங்கே இருக்கிறார்? ஜயப்பிரகாச நாராயணன் என்ன சொல்லுகிறார்? 'வெள்ளைக்காரா? வெளியே போ!' என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தீர்களே, அதன் பலன் என்ன? வெள்ளைக்காரன் எப்போது வெளியே போகப் போகிறான்?" என்று சீமாச்சுவய்யர் கேட்டார். "இவர்கள் தொண்டை கிழியும்படி 'வெள்ளைக்காரா! வெளியே போ!' என்று எங்கே கத்தி னார்கள்? நம்ப ஊர் சந்தைத் தோப்பில் நின்றுகொண்டு கத்தினார்கள். வெள்ளைக்காரனுடைய காதில் விழும்படி கத்தினால்தானே? அப்படிக் கத்தியிருந்தால் வெள்ளைக்காரன் வெளியே போயிராவிட்டாலும் அவனுடைய காதாவது செவிடாகப் போயிருக்கும்! அப்படியொன்றும் இவர்கள் செய்யவில்லையே! குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்; நம்ப ஊர்க் கழுதைப் பொட்டலில் வெள்ளைக்காரன் இருக்கிறானா, என்ன? இவர்களுடைய கூச்சலைக் கேட்டுவிட்டு வெளியே போவதற்கு?" என்று பஞ்சுவய்யர் வெளுத்து வாங்கினார்.

"மாமா! கொஞ்சம் பொறுங்கள். இப்போது உங்களுக்கு எகத்தாளமாய்த் தானிருக்கும். ஆனால் கொஞ்ச நாளில் நீங்களே பார்க்கப் போகிறீர்கள்! வெள்ளைக்காரன் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறத்தான் போகிறான்!" என்றான் சூரியா. "சரிதான், அப்பா, சரிதான்! முப்பது வருஷமாய் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கேட்டுக் கொண்டு தானிருக்கிறேன். முன்னொரு சமயம் 'ஒரு வருஷத்திலே சுயராஜ்யம் வரப் போகிறது' என்று சொன்னார்கள். அது வராமல் டிமிக்கி கொடுத்துவிட்டது. அப்புறம் உப்புச் சத்தியாக்கிரஹத்தின்போது சுயராஜ்யம் 'இதோ வரப் போகிறது!' என்றார்கள். 'சுயராஜ்யம் வாங்கி வருகிறதற்காக மகாத்மா லண்டனுக்குப் போயிருக்கிறார்!' என்றார்கள். 'வைஸ்ராய் இர்வின் சரணாகதி அடைந்து விட்டான்' என்றார்கள். கடைசியில் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. இப்போதும் 1942-ம் வருஷத்தில் 'ஆச்சுப் போச்சு' என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேதாஜி படையெடுத்து வருகிறார் என்று சொன்னார்கள். எல்லாம் வெறும் சவுடால் பேச்சு என்று ஆயிற்று. அப்பேர்ப்பட்ட பயங்கரமான யுத்தம் நடந்தபோது, ஹிட்லர் ஒரு பக்கமும் டோ ஜா ஒரு பக்கமும் நெருக்கிக் கொண்டிருந்தபோதே, - இங்கிலீஷ்காரன் மசியவில்லையே! யுத்தத்தில் ஜெயித்தபிறகா இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கொடுத்து விடப் போகிறான்!" என்றார் வேலாயுத முதலியார்.

"முதலியார்வாள்! உங்களைப் போல்தான் நானும் நினைத்தேன். இன்னும் அநேகரும் யுத்த சமயத்திலேதான் இந்தியாவின் சுயராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அவதார புருஷரான மகாத்மா வேறு விதமாக நினைத்தார். யுத்த காலத்தில் இங்கிலீஷ்காரர்களுக்குக் கஷ்டம் கொடுக்கக்கூடாது என்று சொன்னார். நல்ல பாம்பு மந்திரத்துக்குக் கட்டுப்படுவது போல நாம் சத்தியத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறினார். அவர் பேச்சை மீறி என்னைப் போல் எத்தனையோ பேர் இரகசியப் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டோ ம். ஆனால் ஒரு பயனும் கிடைக்கவில்லை. கடைசியாக இப்போது மகாத்மாவின் வழியினால் தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம் கிட்டப் போகிறது என்ற நிச்சயத்திற்கு வந்திருக்கிறோம்!" என்றான் சூரியா. "நீயும் உன்னைப் போன்றவர்களும் மெத்தப் படித்த புத்திசாலிகள். அதனால் உங்களுக்குக் காந்தி காட்டுகிற வழிதான் சரியான வழி என்று நிச்சயிக்க இவ்வளவு காலம் ஆயிற்று. ஆனால் நாங்கள் எல்லோரும் படிப்பு வாசனையில்லாத பட்டிக்காட்டு மனிதர்கள். ஆகையால் ஆரம்பத்திலேயே அந்த நிச்சயத்துக்கு வந்துவிட்டோ ம். இந்தியாவுக்குக் கதிமோட்சம் பிறந்தால் மகாத்மாவினால்தான் பிறக்க வேண்டும். வேறு யாராலும் இல்லை என்று முப்பது வருஷத்துக்கு முன்னாலேயே முடிவு செய்து விட்டோ ம். உன் அப்பாவும் நானும் அன்றைக்குக் கதர் கட்ட ஆரம்பித்தவர்கள் இன்றைக்கும் கதர் கட்டி வருகிறோம். தெரியுமோ, இல்லையோ? சீமாச்சு இப்போது விற்கிறது மில் துணியானாலும் அவன் கட்டிக் கொள்கிறது கதர் வேஷ்டிதான்!" என்று சொன்னார் பஞ்சுவய்யர்.

"மாமா! காந்தி மகானிடம் உங்களுக்கு அவ்வளவு பக்தியும் நம்பிக்கையும் எப்போது இருக்கிறதோ, அப்போது அவர் சொல்கிறதை முழுவதும் கேட்டு அப்படியே நடக்க வேண்டியதுதானே?" என்றான் சூரியா."என்ன காரியத்தில் இதுவரை மகாத்மா சொல்கிறபடி நாங்கள் நடக்கவில்லை, நீ மட்டும் நடந்துவிட்டாய் என்பதைச் சொல்லேன் பார்க்கலாம்!" என்றார் அப்பாதுரை சாஸ்திரிகள். "சுயராஜ்யம் கூடிய சீக்கிரம் வரப் போகிறது. அதற்குள்ளே நம்மிடமுள்ள குறைகளை நீக்கிக்கொண்டு சுயராஜ்யத்துக்குத் தயாராக வேணும் என்று மகாத்மா சொல்கிறார்." "என்ன குறை எங்களிடம் இருக்கிறது, அதை எப்படி நீக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லேன்!" "முக்கியமாக, கிராமங்களில் உள்ள மிராசுதாரங்களுக்கும் குடிபடைகளுக்கும் தகராறு இருக்கக்கூடாது. உழைக்கிறவனுக்கு உழைப்பின் பலன் என்கிற கொள்கையை எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும்." "சூரியாவையரே! நீ வேறு என்ன வேணுமானாலும் பேசும், இந்த ஆள்படை விஷயத்தைப் பற்றி மட்டும் பேசவேண்டாம். உம்முடைய தகப்பனார் ஏற்கெனவே இடங்கொடுத்துக் கொடுத்து அதன் பலனை இப்போது அநுபவிக்கிறார். அவருடைய உயிருக்கே உலை வைக்கப் பார்த்தார்கள். தெய்வாதீனமாகப் பிழைத்தார்!..." "அப்பாவை எங்களுடைய ஆட்கள் கொல்ல யத்தனித்தார்கள் என்பதை நான் நம்பவே மாட்டேன், அப்படி ஒரு நாளும் நடந்திராது. யாரோ வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் செய்த காரியத்துக்கு ஏழைக் குடிபடைகள்மேல் எதற்காகப் பழியைப் போடுகிறீர்கள்!" "சரி விடு! உன்னிடம் இதைப்பற்றி வாதம் இடுவானேன்!

போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சில நாளைக்கெல்லாம் உண்மை என்னவென்று தெரிந்து விடுகிறது. அப்புறம் இந்த மாதிரி பேச மட்டாய்!" இந்தச் சமயத்தில் லலிதா வீட்டு வாசலுக்கு வந்து, "அண்ணா! உன்னை அப்பா கூப்பிடுகிறார்!" என்றாள். "சரி அப்பாவைப் போய்ப் பார்! அவர் சொல்கிறதையாவது கேட்டு அதன்படி செய்!" என்று சொல்லிவிட்டுத் திண்ணைப் பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் சபையைக் கலைத்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். சூரியா தன் தந்தை இருந்த அறைக்குள் சென்று அவர் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்தான். "மன்னியுங்கள், அப்பா! நாங்கள் சத்தம் போட்டுப் பேசியது உங்களுக்குத் தலைநோவாக இருந்திருக்கும். தெரியாமல் இரைந்து பேசிவிட்டேன்!" என்றான். "சூரியா! நீ பேசியதெல்லாம் என் காதில் விழுந்து கொண்டிருந்தது. அதனால் எனக்குத் தலைவலி உண்டாகவில்லை. ரொம்பவும் சந்தோஷம் உண்டாயிற்று. உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நானே எண்ணிக் கொண்டிருந்தேன். சில நாளாக நான் யோசனை செய்து பார்த்ததில் நீ சொல்வதுதான் சரி என்ற உன்னுடைய முடிவுக்கு வந்திருக்கிறேன். நீ இந்த ஊரில் தங்கி உன்னுடைய இஷ்டப்படி எல்லாம் நடத்து; குடிபடைகளுக்கு என்ன செய்யவேண்டுமோ செய். நான் உனக்குப் பூரண அதிகாரம் கொடுக்கிறேன். எனக்கு இந்த ஊரில் இருக்க இனிப்பிரியமில்லை. வானப் பிரஸ்த ஆசிரமத்தை என்னுடைய மனம் நாடுகிறது. எங்கேயாவது யாத்திரை போக வேண்டும் என்று தோன்றுகிறது. லலிதா தேவபட்டணத்தில் வந்திருக்கும்படி கூப்பிடுகிறாள். காசி ஹரித்வாரம், பத்திரிநாத் முதலிய ஷேத்திரங்களைத் தரிசனம் செய்வதற்குச் சீதா என்னை அழைத்துப் போவதாகச் சொல்கிறாள்..."

"சீதா எதற்காக உங்களை அழைத்துப் போக வேணும், அப்பா! நான் அழைத்துப் போகிறேன். அந்த இடங்களெல்லாம் எனக்குத் தெரியும், காசியில் ஆறுமாதம் இருந்தேன்." "சூரியா! நீ என்னைக் காசிக்கு அழைத்துக் கொண்டு போவதைக் காட்டிலும் இங்கே இருந்து குடிபடைகளைக் கவனித்துச் செய்ய வேண்டியதைச் செய்தால் அதுவே எனக்குப் பரம திருப்தியாயிருக்கும்..." இந்தச் சமயத்தில் சரஸ்வதியம்மாள் உள்ளேயிருந்து வந்து, "சூரியா! அப்பாவோடு அதிகமாகப் பேச்சுக் கொடுக்காதே! அர்த்த ராத்திரி ஆகப்போகிறதே! அவர் தூங்க வேண்டாமா?" என்றாள். "அம்மா சொல்வது சரிதான்; தூங்குங்கள் அப்பா! விவரமாக நாளைக்குப் பேசிக்கொள்ளலாம். எப்படியும் உங்கள் இஷ்டப்படி நடந்து கொள்வேன்!" என்றான் சூரியா. மறுநாள் தந்தையுடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதற்குச் சூரியாவுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிட்டாவய்யரைத் தீர்த்தயாத்திரை அழைத்துப் போவது யார் என்ற பிரச்சனையும் எழுவதற்கு இடமில்லாமல் போய் விட்டது. திருமூலர் என்னும் மகான் மனித வாழ்வின் அநித்தியத்தைக் குறிப்பிடுவதற்கு ஓர் அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார்.

'அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக் கொடியாரோடு மந்தணம் புகுந்தார்! இடப்பக்கமே இறை நொந்ததே என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே!

இராத்திரி அறுசுவை உண்டி தயாரித்து வைத்ததை ஒரு கிரகஸ்தர் சாப்பிட்டார், பிறகு மனைவியோடு சயன அறைக்குச் சென்றார், 'இடது மார்புக்கு அருகில் கொஞ்சம் வலிக்கிறது!' என்று சொன்னார். தூங்கினால் வலி போய்விடும் என்று படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான்! பிறகு எழுந்திருக்க வேயில்லை. திருமூலர் வாக்கின் கடைசி வரி கிட்டாவய்யரின் விஷயத்தில் பலித்துவிட்டது. இராத்திரி சூரியாவிடம் தன் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டு நிம்மதியோடு படுத்துத் தூங்கியவர் மறுபடி எழுந்திருக்கவே இல்லை. அடுத்த நாள் காலையில் அந்த வீட்டில் பரிதாபமான ஓலக்குரல்களும் துயரம் ததும்பிய பிரலாபமும் ஒப்பாரியும் ஒருமித்து எழுந்தன. எல்லாரிலும் அதிகத் துயரத்துடன் புலம்பி அதிகமாகக் கண்ணீர் விட்டுக் கதறியவள் கிட்டாவய்யரின் மருமகளாகிய சீதாவேயாகும்.