பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சுந்தர சண்முகனார்



காதலி பெண்ணாதலின் அவளது சிரிப்பொலி பெரிதாயில்லை; காதலன் ஆடவனாதலின் சிரிப்பொலி பெரிதாயிருந்தது-என்பதாவது: ஓலை காய்ந்த பனை மட்டைகள் காற்றினால் ‘கல கல’ என்று பேரொலி எழுப்புவதாகும்.‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்னும் பழமொழி ஈண்டு எண்ணத்தக்கது. கட்டுக்கு அடங்கா நகைப்பு என்பது: பனை மட்டைகள் ஓயாது சல சலத்துக் கொண்டிருப்பதாகும். ‘சல சல’ என்பது ‘கல கல’ என்பது போன்ற ஒலிக் குறிப்பாகும். ‘கல கல’ என்று கொட்டிற்று என்பது: ஒருவர் அளவு மீறிப் பேரொலியுடன் தொடர்ந்து சிரித்தால், இன்னொருவர் அவரைப் பார்த்து, ‘போதும் சிரித்தது-நிரம்பக் கொட்டி விடாதே-பல் கொட்டிவிடப் போகிறது’ என்று கூறும் உலகியல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. கொட்டுதல் என்பது மிகுதியைக் குறிப்பதற்கு இன்னொரு சான்று வருமாறு: தண்ணீரைச் சிந்தினார்-தண்ணீரைத் தெளித்தார் என்பன சிறிதளவு தண்ணீரையே குறிக்கும். தண்ணீரைக் கொட்டினார் என்பதோ, கலத்திலுள்ள தண்ணீர் முழுவதையுமே குறிக்கும். இவ்வளவு சொல் நயங்களும் பொருள் நயங்களும் கவிஞர் பாரதி தாசனின் இப்பாடலில் அமைந்திருப்பது மிக்க இலக்கியச் சுவை பயக்கின்ற தன்றோ.

பாவேந்தரின் ‘மாவலி புரச் செலவு’ என்னும் தலைப்பில் உள்ள பத்துப் பாடல்களுள் இது ஐந்தாவது பாடலாகும். சிறந்த கற்பனைகளும் உவமைகளும் தற்குறிப் பேற்றமும் சமுதாயக் கருத்தும் தொழிலாளர்கள்பால் பரிவும் இந்தப் பாடல்களில் பொதிந்துள்ளன.

கவிஞர், நண்பர்கள் சிலருடன், ஒருநாள் இரவு நிலா ஒளியில் தோணியில் ஏறிப் பக்கிங்காம் கால்வாய் வழியாகச் சென்னையிலிருந்து மாவலிபுரம் சென்றாராம். நிலா சினம் கொண்டதுபோல் மிகவும் சிவந்து காணப்பட்டதாம்.