திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்ரா/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
எஸ்ரா மக்களுக்குத் திருச்சட்டத்தை விளக்குகிறார். ஓவியர்: ஜூலியசு ஷ்னோர். காலம்: 19ஆம் நூற்றாண்டு. செருமனி

எஸ்ரா (The Book of Ezra)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

எஸ்ரா எருசலேமுக்கு வருதல்[தொகு]

1 இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார்.
2 இந்த எஸ்ரா செராயாவின் மகன்; இவர் அசாரியாவின் மகன்; இவர் இல்கியாவின் மகன்; இவர் சல்லூமின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் அகித்தோப்பின் மகன்;
3 இவர் அமாரியாவின் மகன்; இவர் அசரியாவின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்;
4 இவர் செரகியாவின் மகன்; இவர் உசீயின் மகன்; இவர் புக்கீயின் மகன்;
5 இவர் அபிசுவாவன் மகன்; இவர் பினகாசின் மகன்; இவர் எலயாசரின் மகன்; இவர் தலைமைக் குருவான ஆரோனின் மகன்.


6 எஸ்ரா இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் மோசேக்கு அளித்திருந்த திருச்சட்டநூலில் வல்லுநர். அவருடைய கடவுளான ஆண்டவரின் அருட்கரம் அவரோடு இருந்ததால், அவருக்குத் தேவையான அனைத்தையும் மன்னர் அவருக்குக் கொடுத்தார்.
7 அவரோடு இஸ்ரயேல் மக்களில் சிலரும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காப்போர், கோவில் ஊழியர் ஆகியோரில் சிலரும், மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஏழாம் ஆட்சி ஆண்டில் எருசலேமிற்குப் புறப்பட்டனர்.
8 அவர்கள் மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் ஐந்தாம் திங்கள் எருசலேமை அடைந்தார்கள்.
9 ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்ததால், முதலாம் திங்களின் முதல் நாள் பாபிலோனிலிருந்து புறப்பட்ட அவர் ஐந்தாம் திங்கள் முதல் நாள் எருசலேமை வந்தடைந்தார்.
10 எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

அர்த்தக்சஸ்தா எஸ்ராவுக்கு வழங்கிய ஆவணம்[தொகு]


11 ஆண்டவரின் கட்டளைகளைச் சார்ந்த காரியங்களிலும், இஸ்ரயேலரின் சட்டங்களிலும் வல்லுநரான குரு எஸ்ராவிடம் மன்னர் அர்த்தக்சஸ்தா வழங்கிய ஆவணத்தின் நகல் பின்வருமாறு:


12 "மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது:
13 என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிலும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன்.
14 ஏனெனில், உமது கையிலிருக்கிற உம் கடவுளின் திருச்சட்டத்தின்படி, யூதாவிலும் எருசலேமிலும் விசாரணை செய்யும்படி மன்னராகிய நானும் என் ஆலோசகர் எழுவரும் உம்மை அனுப்புகிறோம்.
15 மேலும் மன்னராகிய நானும் என் ஆலோசகர்களும் எருசலேமில் வாழும் இஸ்ரயேலின் கடவுளுக்கு நாங்கள் மனமுவந்து ஒப்புக்கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் எடுத்துச் செல்லவும்,
16 மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம்.
17 இப்பணத்தைகொண்டு காளைகளையும், ஆட்டுக்கிடாய்களையும், செம்மறிக் குட்டிகளையும், தானிய, நீர்மப் படையல்களையும் கவனத்துடன் வாங்கி, எருசலேமில் உள்ள உங்கள் கடவுளின் இல்லப்பீடத்தில் காணிக்கையாக்கும்.
18 எஞ்சிய வெள்ளியையும், பொன்னையும், உமக்கும் உம் சகோதரர்களுக்கும் நலமெனப்பட்டதை உங்கள் கடவுளின் திருவுளப்படி செய்யும்.
19 உம் கடவுளின் இல்ல வழிபாட்டுக்காக உம்மிடம் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை எருசலேமில் உள்ள உம் கடவுளின் திருமுன் வையும்.
20 மேலும், உம் கடவுளின் இல்லதிற்கு இதற்குமேல் தேவையானவற்றை மன்னரின் கருவூலத்திலிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.
21 மன்னர் அர்த்தக்சஸ்தா என்னும் நான் யூப்ரத்தீசின் அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்குக் கட்டளையிடுவது; விண்ணகக் கடவுளின் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாகிய எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கொடுக்கவும்.
22 அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு படி கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் ஆகியவற்றைத் தேவையான அளவு கொடுக்கலாம்.
23 நாட்டை ஆளும் மன்னர்மீதும், அவர் மக்கள் மீதும், விண்ணகக் கடவுள் சினம் கொள்ளாதபடி, அவரின் இல்லத்திற்கு, அவர் கட்டளையிட்ட அனைத்தும் கொடுக்கப்படவேண்டும்.
24 மேலும், நான் அறிவிப்பது; குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், கோவிற் பணியாளர், கடவுளது இந்த இல்லத்தின் மற்ற ஊழியர் எவர் மீதும் திறையோ, வரியோ, தீர்வையோ சுமத்துவது முறையன்று.
25 எஸ்ரா, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் நீதி வழங்க, உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவரான நீதிபதிகளையும், ஆளுநர்களையும் ஏற்படுத்தும்; திருச்சட்டம் அறியாதவர்களுக்கு அதைக் கற்பியும்.
26 மேலும் திருச்சட்டத்திற்கும், மன்னரின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவருக்குக் கண்டிப்பாய் தண்டனை கொடுக்கப்படவேண்டும்; மரண தண்டனையோ நாடு கடத்தபடுதலோ சொத்துப் பறிமுதலோ சிறைத் தணடனையோ கொடுக்கப்படட்டும் ".

எஸ்ரா இறைவனைப் புகழ்தல்[தொகு]


27 எருசலேமிலுள்ள ஆண்டவரின் இல்லத்தை அழகுபடுத்தும்படி மன்னரைத் தூண்டிய நம் முன்னோரின் கடவுளான ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!
28 மன்னர், அவர்தம் ஆலோசகர், ஆற்றல்மிகு அரசு அதிகாரிகள் ஆகியோரின் பார்வையில் தயவுகிடைக்கும்படி செய்தவர் அவரே! என் கடவுளான ஆண்டவரின் அருள்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ரயேலின் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு அழைத்துவந்தேன்.

அதிகாரம் 8[தொகு]

சிறையிருப்பினின்று திரும்பியோரின் இரண்டாம் பட்டியல்[தொகு]

1 மன்னர் அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்காலத்தில் எஸ்ராவோடு பாபிலோனியாவிலிருந்து வந்தவர்களின் குடும்பத் தலைவர்களது தலைமுறை அட்டவணை அவர்களின் மூதாதையர் மரபின்படி பின்வருமாறு:
2 பினகாசின் வழிமரபில் கெர்சோம்; இத்தாமர் வழிமரபில் தானியேல்; தாவீதின் வழிமரபில் ஆற்றூசு;
3 பாரோசு வழிமரபில் செக்கனியாவின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு நூற்றைம்பது ஆண்கள்;
4 பாகாத்மோவாபு வழிமரபில் செரெகியாவின் மகன் எல்யகோவனாய்; மற்றும் அவரோடு இருநூறு ஆண்கள்;
5 சாத்து [1] வழிமரபில் எகசியேலின் மகன் செக்கனியா; மற்றும் அவரோடு முந்நூறு ஆண்கள்;
6 ஆதின் வழிமரபில் யோனத்தானின் மகன் எபேது; அவரோடு ஐம்பது ஆண்கள்;
7 ஏலாமி வழிமரபில் அத்தலியாவின் மகன் ஏசாயா; மற்றும் அவரோடு எழுபது ஆண்கள்;
8 செபத்தியா வழிமரபில் மிக்கேலின் மகன் செபதியா; மற்றும் அவரோடு என்பது ஆண்கள்;
9 யோவாபு வழிமரபில் எகியேலின் மகன் ஒபதியா; மற்றும் அவரோடு இருநூற்றுப் பதினெட்டு ஆண்கள்;
10 பானி [2]வழிமரபில் யோசிப்பியாவின் மகன் செலோமித்து; மற்றும் அவரோடு நூற்றிருபது ஆண்கள்;
11 பேபாய் வழிமரபில் பேபாயின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு இருபத்தெட்டு ஆண்கள்;
12 அஸ்காது வழிமரபில் அக்காற்றானின் மகன் யோகனான்; மற்றும் அவரோடு நூற்றுப்பத்து ஆண்கள்;
13 அதோனிக்காம் வழிமரபில் பிற்காலத்தவர்களான எலிப்பலேற்று எவேல், செமாயா;
14 மற்றும் அவர்களோடு அறுபது ஆண்கள்; பிக்வாயின் வழிமரபில் உத்தாய், சக்கூர்; மற்றம் அவர்களோடு எழுபது ஆண்கள்.

கோவில் பொறுப்புக்கு லேவியரை எஸ்ரா நியமித்தல்[தொகு]


15 அகவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள்கள் தங்கியிருந்தோம். மக்களையும் குருக்களையும் பற்றிக் கேட்டறிந்தபோது, அங்கே அவர்களுள் எவரும் லேவியர் இல்லை என்று கண்டேன்.
16 ஆகையால், எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிபு, எல்நாத்தான், நாத்தான், செக்கரியா, மெசுல்லாம் ஆகிய தலைவர்களையும் யோயாரிபு, எல்நாத்தான் ஆகிய ஞானியரையும் என்னிடம் அழைத்தேன்.
17 அவர்களைக் கசிப்பியாவில் இருந்த மக்கள் தலைவரான இத்தோவிடம் அனுப்பி வைத்தேன். கசிப்பியாவில் இருந்த இத்தோவிடமும் அவருடைய சகோதரர்களான கோவில் பணியாளர்களிடமும், 'நம் கடவுளின் இல்லத்திற்குப் பணியாளரை அனுப்புங்கள்' என்று சொல்லும்படி கூறினேன்.
18 எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால், இஸ்ரயேல் இனத்தவரும் லேவியருமான, மக்லியின் புதல்வருள் புத்திக்கூர்மையுடைய செரேபியாவையும், அவருடைய புதல்வர்களும் உறவினர்களுமாகப் பதினெட்டுப் பேரையும்,
19 அசபியாவையும், அவரோடு மெராரியின் புதல்வர்களில் ஒருவரான ஏசாயாவையும் அவருடைய சகோதரர்களும், அவர்களின் புதல்வர்களுமான இருபது பேரையும்,
20 மற்றும் தாவீதும் அவரின் அலுவலர்களும் லேவியர்களுக்கு உதவி செய்யப் பிரித்து வைத்திருந்த இருநூற்று இருபது கோவில் பணியாளரையும் அவர்கள் எங்களிடம் அழைத்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.

நோன்பிருந்து மன்றாடுமாறு எஸ்ரா மக்களை அழைத்தல்[தொகு]


21 இதன்பின் எங்கள் கடவுள்முன் எங்களையே நாங்கள் தாழ்த்திக் கொண்டு, எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும், எங்கள் எல்லா உடைமைகளுக்கும் பயணம் நலமாக அமையவேண்டுமென்று மன்றாடுமாறு, அகவா ஆற்றருகே நோன்பு ஒன்று அறிவித்தேன்.
22 ஏனெனில் வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலாட்படையினரையும், குதிரைப்படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு மன்னனைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது. இதற்குக் காரணம் நாங்கள் மன்னரை நோக்கி, "எங்கள் கடவுளின் அருட்கரம் அவரை நேர்மையுடன் தேடுகிற அனைவர்மீதும் இருக்கின்றது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும், சினத்துக்கும் ஆளாவர்கள்" என்றும் சொல்லியிருந்தோம்.
23 எனவே நாங்கள் நோன்பிருந்து, இதற்காக எங்கள் கடவுளிடம், வேண்டிக் கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்.

கோவில் காணிக்கைகள்[தொகு]


24 பின்னர் குருக்களின் தலைவர்கள் பன்னிருவராகிய செரேபியா, அசபியா மற்றும் அவர்களின் உறவினர் பத்துப் பேரைப் பிரித்து, அவர்களிடம்
25 அரசரும் அவருடைய ஆலோசகர்களும் அவருடைய அலுவலர்களும் அங்கிருந்த மக்களும் எங்கள் கடவுளின் இல்லத்திற்குக் காணிக்கையாக அளித்திருந்த வெள்ளி, தங்கம், பாத்திரங்கள் யாவற்றையும் நிறுத்துக் கொடுத்தேன்.
26 அவர்களிடம் நிறுத்துக் கொடுத்தவை: இருபத்தாறு 'டன்' [3] நிறையுள்ள வெள்ளி; நாலாயிரம் கிலோகிராம் நிறையுள்ள வெள்ளிப் பாத்திரங்கள்; ஆயிரம் பொற்காசு [4] மதிப்புள்ள இருபது பொற் கிண்ணங்கள்;
27 பொன்போன்று மெருகேற்றப்பட்ட இரு வெண்கலப் பாத்திரங்கள்.
28 பின்பு, அவர்களைப் பார்த்து, 'நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள்; இந்தப் பாத்திரங்களும் அர்ப்பணிப்பட்டவையே. இந்த வெள்ளியும் பொன்னும் உங்கள் மூதாதையரின் கடவுளுக்கு அளிக்கப்பட்ட தன்னார்வக் காணிக்கைகள்.
29 நீங்கள் எருசலேமிலுள்ள குருக்களின் தலைவர்கள், லேவியர், இஸ்ரயேல் குலத்தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில், ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் ஒப்படைக்கும்வரை இவற்றைப் பாதுகாத்து வாருங்கள்' என்று சொன்னேன்.
30 எனவே குருக்களும், வேலியரும் நிறுக்கப்பட்ட வெள்ளி, பொன்பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள நம் கடவுளின் இல்லதிற்குக் கொண்டுபோகும்படி பெற்றுக் கொண்டனர்.

எருசலேமுக்குத் திரும்புதல்[தொகு]


31 பிறகு முதல் திங்கள் பன்னிரண்டாம் நாள், அகவா ஆற்றைவிட்டு எருசலேமுக்குப் புறப்பட்டோம். எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால் போகும் வழியில் நாங்கள் எங்கள் பகைவர் கையினின்றும் திருடர் கையினின்றும் பாதுகாக்கப்பட்டோம்.
32 நாங்கள் எருசலேமை அடைந்து அங்கு மூன்று நாள்கள் தங்கினோம்.
33 நான்காம் நாள், நம் கடவுளின் இல்லத்தில் உரியாவின் மகனும் குருவுமாகிய மெரமோத்தின் கையில் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. அப்போது அவரோடு பினகாசின் மகன் எலயாசரும், லேவியரான ஏசுவாவின் மகன், யோசபாத்தும் பின்னூயின் மகன் நோவதியாவும் இருந்தனர்.
34 அவற்றின் எண்ணிக்கையும், எடையையும் அன்று அவர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள்.
35 அப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்து, திரும்பி வந்தவர்கள், இஸ்ரயேலின் கடவுளுக்கு எரிபலிகள் செலுத்தினர்; இஸ்ரயேலின் எல்லா மக்களுக்காகவும் பன்னிரு இளங் காளைகளையும் தொண்ணூற்றாறு செம்மறிக் கிடாய்களையும், எழுபத்தேழு ஆட்டுக் குட்டிகளையும், பாவம் போக்கும் பலியான பன்னிரு வெள்ளாட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாக ஒப்புக் கொடுத்தனர்.
36 மேலும் அவர்கள் மன்னரின் ஆவண மடல்களைச் சிற்றரசர்களிடமும், யூப்பிரத்தீசின் அக்கரையில் இருந்த ஆளுநர்களிடமும் கொடுத்தனர். இவர்கள் மக்களுக்கும் கடவுளின் இல்லத்திற்கும் உறுதுணையாய் இருந்தனர்.

குறிப்புகள்

[1] 8:5 கிரேக்க பாடம்.
[2] 8:10 கிரேக்க பாடம்.
[3] 8:26 'அறுநூற்று ஐம்பது தாலந்து' என்பது எபிரேய பாடம்.
[4] 8:26 'ஆயிரம் திராக்மா' என்பது எபிரேய பாடம்.

(தொடர்ச்சி): எஸ்ரா:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை