திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 31 முதல் 32 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவர் பகலில் ஒளி வீசக் கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்; இரவில் ஒளி கொடுக்க நிலாவையும் விண்மீன்களையும் நியமித்துள்ளார்...'படைகளின் ஆண்டவர்' என்பது அவரது பெயராம்." - எரேமியா 31:35

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 31 முதல் 32 வரை

அதிகாரம் 31[தொகு]


1 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
"அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும்
நான் கடவுளாய் இருப்பேன்;
அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்."


2 ஆண்டவர் கூறுவது இதுவே:
"வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள்
பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்;
இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர்.


3 ஆண்டவர் அவர்களுக்குத் [1]
தொலையிலிருந்து தோன்றினார்.
உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்;
எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன்.


4 கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே!
உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்;
நீயும் கட்டி எழுப்பப்படுவாய்;
மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்;
மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக் கொண்டு
நீ வெளியேறுவாய்;


5 சமாரியாவின் மலைகள்மேல்
திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்;
தோட்டக்காரர் பயிரிட்டு விளைச்சலை உண்டு மகிழ்வர்.


6 ஏனெனில் ஒரு நாள் வரும்;
அப்பொழுது எப்ராயிம் மலையில்,
'எழுந்திருங்கள்; நாம் சீயோனுக்குப் போவோம்;
நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்'
என்று காவலர் அழைப்பு விடுப்பர்.


7 ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்:
யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்;
மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்;
முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்;
'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய
தம் மக்களை மீட்டருளினார்!'
என்று பறைசாற்றுங்கள்.


8 இதோ! வடக்கு நாட்டிலிருந்து
அவர்களை நான் அழைத்து வருவேன்;
மண்ணுலகின் கடை எல்லைகளினின்று
அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன்.
அவர்களுள் பார்வையற்றோரும்
காலூனமுற்றோரும்
கருவுற்றோரும்
பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்;
பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.


9 அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்;
ஆறுதலளித்து [2] அவர்களை நான் அழைத்து வருவேன்;
நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்;
இடறிவிழாதவாறு சீரான வழியில்
அவர்கள் நடக்கச் செய்வேன்.
ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை,
எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.


10 மக்களினத்தாரே,
ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்;
'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்;
ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்'
என்று சொல்லுங்கள்.


11 ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்;
அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.


12 அவர்கள் வந்து சீயோனின் உச்சியில்
பாடி மகிழ்வார்கள்;
தானியம், திராட்சை இரசம், எண்ணெய்,
ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள்,
ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப்
பூரிப்படைவார்கள்;
அவர்களது வாழ்க்கை
நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும்;
அவர்கள் இனிமேல், ஏங்கித் தவிக்க மாட்டார்கள்.


13 அப்பொழுது கன்னிப்பெண்கள்
நடனம் ஆடிக் களித்திருப்பர்;
அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்;
அவர்களுடைய அழுகையை
நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்;
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;
துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன்.


14 குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்;
என் மக்கள் எனது வள்ளன்மையால் நிறைவு பெறுவர்,
என்கிறார் ஆண்டவர்.


15 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்:
இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது;
ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது.
இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கின்றார்;
ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்;
ஏனெனில், அவருடைய குழந்தைகள் அவரோடு இல்லை. [3]


16 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்:
நீ அழுகையை நிறுத்து;
கண்ணீர் வடிக்காதே;
ஏனெனில் உனது உழைப்புக்குப் பயன் கிடைக்கும்,
என்கிறார் ஆண்டவர்.
தங்கள் பகைவரின் நாட்டினின்று
அவர்கள் திரும்பி வருவார்கள்.


17 உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில்
நம்பிக்கை உண்டு, என்கிறார் ஆண்டவர்.
உன் பிள்ளைகள் தம் நாட்டுக்குத் திரும்புவர்.


18 எப்ராயிமின் புலம்பலை
நான் உண்மையாகவே கேட்டேன்:
"பணியாத இளம் காளையை
அடித்துத் திருத்துவதுபோல
நீர் என்னைத் தண்டித்துத் திருத்தினீர்;
நீர் என்னைத் திரும்ப அழைத்துச் செல்லும்;
நானும் திரும்பி வரவேன்;
ஏனெனில், என் கடவுளாகிய ஆண்டவர் நீரே.


19 உம்மை விட்டு விலகிச் சென்றபின்
நான் மனம் வருந்தினேன்;
பயிற்றுவிக்கப்பட்டபின்
நான் மார்பில் அறைந்து கொண்டேன்;
என் இளமையின் அவமானம்
இன்னும் என்னிடம் காணப்பட்டது.
நான் வெட்கித் தலை குனிந்தேன்."


20 "எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா?
நீ என் அன்புக் குழந்தை அல்லவா?
உனக்கு எதிராக நான் அடிக்கடி பேசியபோதிலும்,
உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்;
உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது;
திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்"
என்கிறார் ஆண்டவர்.


21 உனக்கெனச் சாலை அடையாளங்களை அமைத்துக்கொள்;
உனக்கெனக் கைகாட்டிகளை நாட்டிக்கொள்;
நீ நடந்து சென்ற வழியாகிய
நெடுஞ்சாலையை நினைவில் கொள்.
கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே,
திரும்பி வா;
இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.


22 நம்பிக்கைத் துரோகம் செய்த மகளே!
இன்னும் எத்துணைக் காலம் நீ அலைந்து திரிவாய்?
ஆண்டவராகிய நான் விந்தையான ஒன்றை
உலகில் படைத்துள்ளேன்;
ஒரு பெண் தன் கணவனைப் பாதுகாக்கின்றாள்."


23 இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
அடிமைத்தனத்தினின்று அவர்களை நான்
திரும்பக் கொணரும் பொழுது,
'நீதியின் இருப்பிடமே, தூய்மை மிகு மலையே!
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!'
என்னும் வாழ்த்துரை யூதா நாட்டிலும்
அதன் நகர்களிலும் மீண்டும் எதிரொலிக்கும்.


24 யூதாவிலும் அதன் எல்லா நகர்களிலும்
மக்கள் குடியிருப்பர்;
விவசாயிகளும், ஆடு மேய்க்கும் இடையர்களும்
சேர்ந்து வாழ்வர்.


25 ஏனெனில் சோர்ந்த உள்ளங்களுக்கு
நான் புத்துயிர் அளிப்பேன்;
வாடிய நெஞ்சங்களுக்கு நான் நிறைவளிப்பேன்.


26 அப்பொழுது நான் விழித்தெழுந்து பார்த்தேன்;
என் தூக்கம் எனக்கு இன்பமாய் இருந்தது.


27 இதோ நாள்கள் வருகின்றன.
அப்பொழுது இஸ்ரயேல் வீட்டையும்
யூதா வீட்டையும்
மனிதர்கள், விலங்குகளின் புதுப்பிறப்புகளால் நிரப்புவேன்,
என்கிறார் ஆண்டவர்.
28 பிடுங்கவும் தகர்க்கவும்,
அழிக்கவும் கவிழ்க்கவும்,
தீங்கிழைக்கவும்
அவர்களைப் பொறுத்தமட்டில் நான் எப்படி
விழிப்பாய் இருந்தேனோ,
அப்படியே கட்டவும் நடவும்
விழிப்பாய் இருப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.


29 அக்காலத்தில் அவர்கள்,
'தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன,
பிள்ளைகளின் பல் கூசிற்றாம்'
என்று சொல்ல மாட்டார்கள். [4]


30 ஆனால், எல்லாரும்
அவரவர் தம் தீச்செயலின் பொருட்டே சாவர்.
புளித்த திராட்சைப் பழம்
தின்பவனுக்குத்தான் பல் கூசும்.


31 இதோ, நாள்கள் வருகின்றன.
அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும்
யூதாவின் வீட்டாரோடும்
புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன்,
என்கிறார் ஆண்டவர். [5]
32 அவர்களுடைய மூதாதையரை
எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக,
அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது
அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று
இது இராது.
நான் அவர்களின் தலைவராய் இருந்தும்,
என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள்,
என்கிறார் ஆண்டவர்.


33 அந்நாள்களுக்குப் பிறகு,
இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும்
உடன்படிக்கை இதுவே:
என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்;
அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன்.
நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;
அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்,
என்கிறார் ஆண்டவர். [6]
34 இனிமேல் எவரும்
'ஆண்டவரை அறிந்துகொள்ளும்'
எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ
சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார்.
ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை
அனைவரும் என்னை அறிந்துகொள்வர்,
என்கிறார் ஆண்டவர்.
அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்;
அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன். [7]


35 ஆண்டவர் பகலில் ஒளி வீசக்
கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்;
இரவில் ஒளி கொடுக்க நிலாவையும்
விண்மீன்களையும் நியமித்துள்ளார்;
அலைகள் முழங்குமாறு
கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்;
'படைகளின் ஆண்டவர்' என்பது அவரது பெயராம்.
அவர் கூறுவது இதுவே:


36 மேற்கண்ட நியமங்கள்
என் திருமுன்னின்று மறைந்துவிடுமாயின்,
இஸ்ரயேலின் வழிமரபினர் என் முன்னிலையில்
ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமல் போய்விடுவர்,
என்கிறார் ஆண்டவர்.


37 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
மேலே வான்வெளி அளக்கப்படக் கூடுமாயின்,
கீழே பூவுலகின் அடித்தளங்களைக்
கண்டுபிடிக்க இயலுமாயின்,
இஸ்ரயேலின் வழிமரபினரின்
அனைத்துச் செயல்களையும் முன்னிட்டு
அவர்கள் அனைவரையும் நான் தள்ளிவிடுவேன்,
என்கிறார் ஆண்டவர்.


38 இதோ, நாள்கள் வருகின்றன.
அப்பொழுது ஆண்டவருக்காக இந்நகர்
அனனியேல் கோபுரம் முதல் மூலை வாயில்வரை
கட்டியெழுப்பப்படும், என்கிறார் ஆண்டவர்.
39 அதன் எல்லை நேராகக்
காரேபு மலைவரை சென்று,
கோவாவை நோக்கித் திரும்பும்.
40 பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும்,
கிதரோன் நீரோடை முதல்
கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள
வயல்வெளி முழுவதும்
ஆண்டவருக்குப் புனிதமானதாய் இருக்கும்.
இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது;
அழித்தொழிக்கப்படாது.


குறிப்புகள்

[1] 31:3 - 'எனக்கு' என்பது எபிரேய பாடம்.
[2] 31:9 - 'மன்றாட்டுக்களோடு' என்பது எபிரேய பாடம்.
[3] 31:15 = தொநூ 35:16-19; மத் 2:18.
[4] 31:29 = எசே 18:2.
[5] 31:31 = மத் 26:28; மாற் 14:24; லூக் 22:20;
1 கொரி 11:25; 2 கொரி 3:6.
[6] 31:33 = எபி 10:16.
[7] 31:31-34 = எபி 8:8-12.


அதிகாரம் 32[தொகு]

எரேமியா நிலம் வாங்குதல்[தொகு]


1 யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின்
பத்தாம் ஆண்டில்,
அதாவது நெபுகத்னேசரது ஆட்சியின்
பதினெட்டாம் ஆண்டில்,
ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது. [1]
2 அப்பொழுது பாபிலோனிய மன்னனுடைய படை
எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது.
இறைவாக்கினர் எரேமியாவோ
யூதா அரசனது அரண்மனையில் இருந்த காவல்கூடத்தில்
அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.
3 யூதா அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து,
"ஆண்டவர் கூறுவது இதுவே:
இந்நகரைப் பாபிலோனிய மன்னனுடைய கையில் ஒப்புவிக்கிறேன்.
அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.
4 யூதாவின் அரசன் செதேக்கியா
கல்தேயரின் கைக்குத் தப்பமாட்டான்;
மாறாக, அவன் பாபிலோனிய மன்னனிடம்
கையளிக்கப்படுவது உறுதி.
செதேக்கியா அவனோடு நேருக்கு நேர் பேசுவான்;
அவனை முகத்துக்கு முகம் பார்ப்பான்.
5 அவன் செதேக்கியாவைப் பாபிலோனுக்கு இழுத்துச் செல்வான்.
நான் அவனைச் சந்திக்கும் வரையில்
அவன் அங்கேயே இருப்பான்," என்கிறார் ஆண்டவர்.
மேலும், கல்தேயருக்கு எதிராக நீங்கள் போரிட்டாலும்
வெற்றி பெறமாட்டீர்கள் என்று
நீ இறைவாக்கு உரைத்தது ஏன்? என்று சொல்லி,
அவரைச் சிறைப்படுத்தினான்.


6 அப்பொழுது எரேமியா கூறியது:
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
7 இதோ, உன் உறவினன் சல்லூமின் மகன் அனமேல்
உன்னிடம் வந்து,
'அனத்தோத்தில் இருக்கும் என் நிலத்தை
நீ விலைக்கு வாங்கிக் கொள்.
எனெனில் அதை வாங்கி மீட்பது உனது உரிமை ஆகும்'
என உன்னை வேண்டுவான்.
8 ஆண்டவர் உரைத்திருந்தவாறே
என் உறவினரின் மகன் அனமேல்
காவல் கூடத்தில் இருந்த என்னிடம் வந்து,
'தயவு செய்து பென்யமின் நாட்டில்
அனத்தோத்தில் உள்ள என் நிலத்தை
நீர் விலைக்கு வாங்கிக்கொள்ளும்;
ஏனெனில் அதை மீட்டு
உடைமையாக்கிக்கொள்வது உமது உரிமை;
நீரே அதை வாங்கிக்கொள்ளும்'
என்று வேண்டினார்.
அப்பொழுது அது ஆண்டவரின் வாக்கு என்று
நான் அறிந்துகொண்டேன்.
9 அதன்படி அனத்தோத்தில் இருந்த அந்த நிலத்தை
என் உறவினரின் மகன் அனமேலிடமிருந்து
நான் வாங்கினேன்;
அதற்கு விலையாகப் பதினேழு செக்கேல் வெள்ளியை
அவரிடம் நிறுத்துக் கொடுத்தேன்.
10 பத்திரத்தில் கையெழுத்திட்டு, அதில் முத்திரையிட்டேன்;
சாட்சிகள் முன்னிலையில் வெள்ளியைத்
தராசில் வைத்து நிறுத்துக் கொடுத்தேன்.
11 பின்னர் விதி முறைகளும்
நிபந்தனைகளும் அடங்கிய
முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தையும்
அதன் முத்திரையிடப்படாத நகலையும்
நான் பெற்றுக் கொண்டேன்.
12 ஒப்பந்தப் பத்திரத்தை மாசேயாவின் பேரனும்
நேரியாவின் மகனுமான பாரூக்கிடம் நான் கொடுத்தேன்.
என் உறவினரின் மகன் அனமேல் முன்னிலையிலும்
பத்திரத்தில் கையொப்பமிட்டிருந்த சாட்சிகள் முன்னிலையிலும்
காவல்கூடத்தில் உட்கார்ந்திருந்த
யூதர் அனைவருடைய முன்னிலையிலும்
நான் அதைக் கொடுத்தேன்.
13 அவர்கள் முன்னிலையில்
நான் பாரூக்கிற்குக் கொடுத்த கட்டளையாவது:
14 இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
இந்த ஒப்பந்தப் பத்திரங்களை - அதாவது,
முத்திரையிடப்பட்டதையும் அதன் நகலையும் -
எடுத்துக்கொள்.
நீண்ட நாள் அவை பாதுகாப்புடன் இருக்கும்பொருட்டு
அவற்றை ஒரு மண்பாண்டத்தில் போட்டுவை.
15 ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
இந்நாட்டில் வீடுகளும் நிலங்களும்
திராட்சைத் தோட்டங்களும்
மீண்டும் விலைக்கு வாங்கப்படும்.

எரேமியாவின் மன்றாட்டு[தொகு]


16 ஒப்பந்தப் பத்திரத்தை
நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த பின்னர்,
நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது:
17 "என் தலைவராகிய ஆண்டவரே!
உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும்
விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!
உமக்குக் கடினமானது எதுவும் இல்லை.
18 ஆயிரமாயிரம் பேருக்கு
நீர் அருளன்பு காட்டி வருகிறீர்.
ஆனால் தந்தையரின் குற்றத்திற்கான தண்டனையை
அவர்களுக்குப் பின் அவர்களுடைய
பிள்ளைகளின் மடியில் கொட்டுகிறீர்.
மாபெரும் ஆற்றல் மிகு இறைவா!
படைகளின் ஆண்டவர் என்பதே உமது பெயராகும்.
19 நீர் திட்டமிடுவதில் பெரியவர்;
செயலில் வல்லவர்.
மானிடரின் வழிகள் எல்லாம்
உமது கண்முன்னே உள்ளன.
எனவே, அவரவருடைய வழிகளுக்கும்
செயல்களின் விளைவுகளுக்கும் ஏற்றவாறு
நீர் கைம்மாறு அளிக்கிறீர்.
20 நீர் எகிப்து நாட்டில் செய்த அடையாளங்களையும்
வியத்தகு செயல்களையும்
இஸ்ரயேலிலும் மற்ற எல்லா மக்களினத்தார் நடுவிலும்
இன்றுவரை தொடர்ந்து புரிந்துவருகிறீர்.
இன்றுவரை உமது பெயருக்கு புகழ் தேடிக்கொண்டீர்.
21 அடையாளங்கள் மற்றும் வியத்தகு செயல்களால்
பேரச்சம் உண்டாக,
வலிமை மிகு கையோடும் ஓங்கிய புயத்தோடும்
உம் மக்கள் இஸ்ரயேலை
எகிப்து நாட்டினின்று நீர் கூட்டிக் கொண்டு வந்தீர்.
22 அவர்களுடைய மூதாதையர்க்குத் தருவதாக
நீர் வாக்களித்திருந்த நாட்டை -
பாலும் தேனும் வழிந்தோடும் இந்நாட்டை -
அவர்களுக்குக் கொடுத்தீர்.
23 அவர்கள் வந்து அதைத்
தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்.
ஆனால் உம் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை;
உம் சட்டத்தையும் பின்பற்றவில்லை;
நீர் கட்டளையிட்டிருந்த எதையுமே செய்யவில்லை.
ஆதலால் இத்தீங்கு அனைத்தும் அவர்களுக்கு நேரிடச் செய்தீர்.


24 இதோ, நகரைக் கைப்பற்றும் பொருட்டு
முற்றுகைத்தளங்கள் எழுகின்றன!
வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக,
நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர்
அதைக் கைப்பற்றுவர்.
நீர் சொன்னது எல்லாம் இப்பொழுது
நடந்தேறிவிட்டதை நீரே காண்கிறீர்!
25 ஓ! தலைவராகிய ஆண்டவரே,
நீர் என்னைப் பார்த்து,
'வெள்ளியை விலையாகக் கொடுத்து
உனக்கு நிலத்தை வாங்கிக் கொள்;
அதற்குச் சாட்சிகளையும் வைத்துக் கொள்'
என்று சொல்கிறீரே!
ஆனால் நகர் கல்தேயரின் கையில்
ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே!"


26 பின்னர் ஆண்டவரின் வாக்கு
எரேமியாவுக்கு அருளப்பட்டது:
27 நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே;
அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ?
28 ஆதலால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
கல்தேயரிடமும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடமும்
இந்நகரை நான் கையளிப்பேன்.
அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான். [2]
29 இந்நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர்
அதன் உள்ளே புகுந்து அதற்குத் தீ வைப்பர்;
அதனோடு வீடுகளையும் தீக்கிரையாக்குவர்;
ஏனெனில் அந்த வீடுகளின் மேல் தளங்களில்தான்
மக்கள் பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்;
வேற்றுத் தெய்வங்களுக்கு
நீர்மப் படையல்களைப் படைத்தார்கள்;
இவ்வாறு அவர்கள் எனக்குச் சினமூட்டினார்கள்.
30 இஸ்ரயேல் மக்களும் யூதா மக்ளும்
தங்கள் இளமை முதல் எனது திருமுன்
தீமை ஒன்றையே செய்துவந்துள்ளார்கள்;
ஆம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்களால்
எனக்குச் சினமூட்டியதைத் தவிர,
வேறு எதுவும் செய்ததில்லை, என்கிறார் ஆண்டவர்.


31 இந்நகர் கட்டியெழுப்பப்பட்டது முதல் இந்நாள்வரை,
என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் காரணமாய் இருந்துள்ளது.
எனவே நான் அதை என் திருமுன்னின்று அகற்றி விடுவேன்.
32 ஏனெனில் இஸ்ரயேல் மக்களும் யூதா மக்களும்
தங்களது எல்லாத் தீச்செயல்கள் மூலம்
எனக்குச் சினமூட்டியுள்ளார்கள்;
அவர்களும் அவர்களுடைய அரசர், தலைவர்,
குருக்கள், இறைவாக்கினர், யூதா மக்கள்,
எருசலேம்வாழ் மக்கள் ஆகிய அனைவருமே
இவ்வாறு செய்துள்ளார்கள்.
33 அவர்கள் தங்களது முகத்தை அல்ல,
முதுகையே எனக்குக் காட்டினார்கள்.
திரும்பத் திரும்ப நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தும்
அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவும் இல்லை,
அறிவுரையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
34 எனது பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி,
தங்கள் அருவருப்பான சிலைகளை அதில் வைத்தனர். [3]
35 மோலேக்கு தெய்வத்துக்குத்
தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி,
பென்இன்னோம் பள்ளத்தாக்கில்
பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள்.
இத்தகைய அருவருப்பான செயலைச் செய்வதன்மூலம்,
யூதா பாவத்தில் விழவேண்டும் என்று
நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை;
இது என் எண்ணத்தில் கூட எழவில்லை. [4]

ஆண்டவரின் வாக்குறுதி[தொகு]


36 இப்பொழுதோ வாள், பஞ்சம்,
கொள்ளைநோய் காரணமாக இந்நகர்
பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்பட்டுள்ளது
என்று நீங்கள் இந்நகரைப் பற்றிக் கூறுகிறீர்கள்.
ஆனால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்
அதைக் குறித்துக் கூறுவது இதுவே:
37 'இதோ, என் சினத்திலும் சீற்றத்திலும் வெஞ்சினத்திலும்
நான் அவர்களைத் துரத்தியடித்துள்ள
எல்லா நாடுகளினின்றும்
அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன்;
அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பக் கூட்டி வந்து,
பாதுகாப்புடன் அவர்களை வாழச் செய்வேன்.
38 அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.
நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.
39 ஒரே இதயத்தையும் ஒரே நெறிமுறையையும்
நான் அவர்களுக்குக் கொடுப்பேன்.
இதனால் அவர்கள் தங்கள் நலனையும்,
தங்களுக்குப்பின் தங்கள் பிள்ளைகளின் நலனையும் கருதி,
எந்நாளும் எனக்கு அஞ்சி நடப்பார்கள்.
40 நான் அவர்களோடு
என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை ஒன்றைச்
செய்துகொள்வேன்.
எனவே அவர்களுக்கு நன்மை செய்ய நான் தவறமாட்டேன்.
என்னைப் பற்றிய அச்சத்தை
அவர்களது இதயத்தில் பதியவைப்பேன்.
இதனால் அவர்கள் என்னைவிட்டு
விலகிச்செல்லமாட்டார்கள்.
41 அவர்களுக்கு நன்மை புரிவதில்
நான் மகிழ்ச்சி அடைவேன்;
என் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும்
அவர்களை நான் இந்நாட்டில் உறுதியாக நிலைநாட்டுவேன்


42 ஏனெனில், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
இத்தகைய பெரும் தீங்கு அனைத்தையும்
இம்மக்கள்மீது வரச் செய்தது போலவே,
நான் அவர்களுக்கு அறிவித்திருக்கும்
எல்லா நலன்களையும் அவர்களுக்கு வழங்குவேன்.
43 'இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத
பாழடைந்த நாடு;
இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று
எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ,
அந்த நாட்டில் நீங்கள் மீண்டும்
விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள்.
44 வெள்ளியை விலைக்குக் கொடுத்து
நிலங்கள் வாங்குவர்;
அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்;
இவை சாட்சிகள் முன்னிலையில்
பென்யமின் நாட்டிலும்,
எருசலேமின் சுற்றுப் புறங்களிலும்,
யூதாவின் நகர்களிலும்,
மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும்,
செபேலாவைச் சார்ந்த நகர்களிலும்,
நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும்.
ஏனெனில் அடிமைத்தனத்தினின்று
நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன்,
என்கிறார் ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 32:1 = 2 அர 25:1-7.
[2] 32:28 = 2 அர 25:1-11;
2 குறி 36:17-21.
[3] 32:34 = 2 அர 23:10;
எரே 7:30-31; 19:1-6.
[4] 32:35 = லேவி 18:21;
2 அர 23:10; எரே 7:31.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 33 முதல் 34 வரை