திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 39 முதல் 40 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்" (திபா 40 [39]). விவிலிய ஓவிய நூல். இலத்தீன் அணியெழுத்து. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஷாந்தீயி, பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 39 முதல் 40 வரை

திருப்பாடல் 39[தொகு]

மானிட வாழ்க்கையின் நிலையாமை[தொகு]

(பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு;
தாவீதின் புகழ்ப்பா)


1 'நான் என் நாவினால் பாவம் செய்யாதவண்ணம்
என் நடைமுறைகளைக் காத்துக்கொள்வேன்;
பொல்லார் என்முன் நிற்கும் வரையில்,
என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் காத்துக் கொள்வேன்' என்று சொன்னேன்.


2 நான் ஊமையைப்போல் பேசாது இருந்தேன்;
நலமானதைக்கூடப் பேசாமல் அமைதியாய் இருந்தேன்;
என் வேதனையோ பெருகிற்று.


3 என் உள்ளம் என்னுள் எரியத் தொடங்கிற்று;
நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது நெருப்பு மூண்டது;
அப்பொழுது என் நா பேசியதாவது:


4 'ஆண்டவரே! என் முடிவு பற்றியும்
என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும்;
அப்போது, நான் எத்துணை நிலையற்றவன்
என உணர்ந்து கொள்வேன்.


5 என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்;
என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை;
உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும்
நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)


6 அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்;
அவர்கள் வருந்தி உழைப்பது வீண்;
அவர்கள் சேமித்து வைக்கின்றனர்;
ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார்.


7 என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்?
நான் உம்மையே நம்பியிருக்கிறேன்.


8 என் குற்றங்கள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்;
மதிகேடரின் பழிப்புரைக்கு என்னை ஆளாக்காதேயும்.


9 நான் ஊமைபோல் ஆனேன்; வாய் திறவேன்;
ஏனெனில், எனக்கு இந்நிலைமையை வருவித்தவர் நீரே.


10 நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்;
உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன்.


11 குற்றத்தின் பொருட்டு நீர் மனிதரைத் தண்டிக்கும்போது
பூச்சி அரிப்பதுபோல், அவர்களுக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்;
உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)


12 ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;
என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்;
ஏனெனில், உமது முன்னிலையில் நான் ஓர் அன்னியன்;
என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி!


13 நான் பிரிந்து மறையும் முன்பு சற்றே மகிழ்ச்சி அடையும்படி,
உம் கொடிய பார்வையை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.


திருப்பாடல் 40[தொகு]

புகழ்ச்சிப் பாடல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; தாவீதின் புகழ்ப்பா)


1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவரும் என் பக்கம் சாய்ந்து
எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.


2 அழிவின் குழியிலிருந்து
என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்.
சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்;
கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்;
என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.


3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை
என் நாவினின்று எழச் செய்தார்;
பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு
ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.


4 ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்;
அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்;
பொய்யானவற்றைச் சாராதவர்.


5 ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர்;
உமக்கு நிகரானவர் எவரும் இலர்;
என் கடவுளே! உம் அருஞ்செயல்களும் திட்டங்களும் எங்களுக்காகவே;
அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில்
அவை எண்ணிலடங்கா.


6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை;
எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை;
ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.


7 எனவே, 'இதோ வருகின்றேன்;
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;


8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில்
நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான். [*]


9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை
மாபெரும் சபையில் அறிவித்தேன்;
நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;
ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.


10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில்
மறைத்து வைக்கவில்லை;
உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்
நீர் அருளும் மீட்பைப்பற்றியும் கூறியிருக்கின்றேன்;
உம் பேரன்பையும் உண்மையையும்
மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.


11 ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்;
உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!

உதவிக்காக மன்றாடல்[தொகு]

(திபா 70)


12 ஏனெனில், எண்ணிறந்த தீமைகள்
எனைச் சூழ்ந்து கொண்டன;
என் குற்றங்கள் என்மீது கவிந்து
என் பார்வையை மறைத்துக்கொண்டன.
அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை;
என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது.


13 ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்;
ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.


14 என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும்
அவமானமும் குழப்பமும் அடையட்டும்!
என் கேட்டில் மகிழ்வுறுவோர்
தலைகுனிந்து பின்னடையட்டும்!


15 என்னைப் பார்த்து 'ஆ!ஆ!' என்போர்
தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்!


16 உம்மைத் தேடுவோர் அனைவரும்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்!
நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர்,
'ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!'
என்று எப்போதும் சொல்லட்டும்!


17 நானோ ஏழை; எளியவன்;
என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்;
நீரே என் துணைவர், என் மீட்பர்!
என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.


குறிப்பு

[*] 40:6-8 = எபி 10:5-7.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 41 முதல் 42 வரை