திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்...' என்றார்." - லூக்கா 1:26-31


லூக்கா நற்செய்தி (Luke) [1][தொகு]

முன்னுரை

ஆசிரியர்[தொகு]

மூன்றாம் நற்செய்தி நூலின் ஆசிரிய சிரிய நாட்டு அந்தியோக்கியாவைச் சேர்ந்த லூக்கா என்பது திருச்சபை மரபு. இவர் மருத்துவம் தெரிந்தவர். திருத்தூதர் பவுலோடு சேர்ந்து நற்செய்திப் பணி ஆற்றியவர். பிற இனக் கிறிஸ்தவச் சபைகளோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவரும் பிற இனக் கிறிஸ்தவர்தான் என்பது பெரும்பாலானோர் கருத்து (பில 24:2; 2 திமொ 4:11; கொலோ 4:11-14).

சூழல்[தொகு]

"மாண்புமிகு" தியோபிலுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்படுகிறது; நல்ல கிரேக்க மொழிநடையில் அமைந்துள்ளது. தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு ஆசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல்கள் இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாற்றுப் பின்னணியோடும் யாவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக் 11:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயச் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.

எருசலேம் நகரம் தீத்துவால் அழிக்கப்பட்டபோது நிகழ்ந்தவை இந்நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாற்கு நற்செய்தி நூலில் காணப்படும் எருசலேம் கோவில்பற்றிய தானியேல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப்பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5, 20; 13:35). எனவே இந்நூல் கி.பி. 70க்குப் பின்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும். அந்தியோக்கியா, உரோமை போன்ற ஏதேனும் ஒரு நகரிலிருந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம்.

உள்ளடக்கம்[தொகு]

லூக்கா நற்செய்தியாளர் மீட்பு வரலாற்றை, யோவான் வரை உள்ள இஸ்ரயேல் மக்களின் காலம், இயேசுவின் காலம், திருச்சபையின் காலம் என்னும் முப்பெரும் கட்டங்களாகப் பிரிக்கின்றார் (16:16). "உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது" என மீட்பளிக்கும் வருங்காலத்தைக் குறிப்பிட்டாலும் (21:28) இறையாட்சி மக்களிடையே மலர்ந்துவிட்டது (17:21), இப்பொழுதே இயேசுவின் வாழ்வில் நிறைவேறிவிட்டது (1:1; 4:21) என நிகழ்கால மீட்பையே வலியுறுத்திக் கூறுகிறார். இந்நூலில் எருசலேம் உலக மீட்பின் திட்டத்துக்கு மையமாகத் திகழ்கிறது. இந்நற்செய்தி நூல் எருசலேமில் தொடங்கி எருசலேமில் முடிகிறது. இழந்துபோனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்தார் என்னும் கருத்து முதன்மைச் செய்தியாக விளங்குகிறது (19:10). இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாவிகள், பெண்கள், ஏழைகள், சமாரியர் ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர். தூய ஆவியின் செயல்பாடு, இயேசுவின் இரக்கம், திருப்பணி, மனம் மாற்றம், பாவமன்னிப்பு, இவற்றால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவை வலியுறுத்தப் பெறுகின்றன. இறைவேண்டல், சான்றுபகருதல், பொறுப்புடன் செல்வத்தைப் பயன்படுத்தல், அமைதி பெறுதல், சிலுவை சுமத்தல் ஆகியன சீடத்துவத்தின் சிறப்புத் தகுதிகளாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

மாற்கு நற்செய்தி[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. அர்ப்பணம் 1:1-4 102
2. குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் 1:5 - 2:52 102 - 107
3. திருப்பணிக்குத் தயார் செய்தல் 3:1 - 4:13 107 - 110
4. கலிலேயப் பணி 4:14 - 9:50 110 - 126
5. எருசலேம் நோக்கிப் பயணம் 9:51 - 19:27 126 - 147
6. எருசலேம் பணி 19:28 - 21-38 147 - 153
7. இயேசு துன்புற்று இறந்து உயிர்த்தெழுதலும் விண்ணேற்றமடைதலும் 22 - 24 153 - 162

லூக்கா நற்செய்தி (Luke)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. அர்ப்பணம்[தொகு]


1-2 மாண்புமிகு தியோபில் அவர்களே,
நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி
ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்;
தொடக்க முதல் நேரில் கண்டும்
இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர்
நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.
3 அது போலவே நானும்
எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து
நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,
4 அவற்றை ஒழுங்குபடுத்தி
உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

2. குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள்[தொகு]

யோவான் பிறப்பைப் பற்றி முன்னறிவித்தல்[தொகு]


5 யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில்,
அபியா வகுப்பைச் சேர்ந்த
செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார்.
அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. [1]
6 அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள்.
ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக்
குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.
7 அவர்களுக்குப் பிள்ளை இல்லை;
ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார்.
மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.


8 தம்முடைய பிரிவின்முறை வந்தபோது,
செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார்.
9 குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப,
ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச்
சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.
10 அவர் தூபம் காட்டுகிற வேளையில்
மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர்
தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார்.
12 அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.
13 வானதூதர் அவரை நோக்கி,
"செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது.
உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்;
அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.
14 நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்.
அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.
15 அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்;
திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்;
தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார். [2]
16 அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத்
தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.
17 எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய்
அவருக்கு முன் செல்வார்;
தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்;
நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்;
இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார். [3]


18 செக்கரியா வானதூதரிடம்,
"இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்?
நான் வயதானவன்.
அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார்.
19 அதற்கு வானதூதர் அவரிடம்,
"நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்;
உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். [4]
20 இதோ பாரும்,
உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை.
ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்;
உம்மால் பேசவே இயலாது" என்றார்.


21 மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர்.
திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள்.
22 அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேச முடியாமல் இருந்தார்.
ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என
அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்;
பேச்சற்றே இருந்தார்.
23 அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.
24 அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று
ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.
25 "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க
ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று
தமக்குள் சொல்லிக்கொண்டார்.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு[தொகு]


26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக்
கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த
ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
27 அவர் தாவீது குடும்பத்தினராகிய
யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர்.
அவர் பெயர் மரியா. [5]
28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி,
"அருள்மிகப் பெற்றவரே [6] வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" [7] என்றார்.
29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி,
இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
30 வானதூதர் அவரைப் பார்த்து,
"மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்;
அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். [8]
32 அவர் பெரியவராயிருப்பார்;
உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை
ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். [9]
34 அதற்கு மரியா வானதூதரிடம்,
"இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.
35 வானதூதர் அவரிடம்,
"தூய ஆவி உம்மீது வரும்.
உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்.
ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
36 உம் உறவினராகிய எலிசபெத்தும்
தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்.
கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். [10]
37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
38 பின்னர் மரியா,
"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்[தொகு]


39 அதன்பின் மரியா புறப்பட்டு
யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.
40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது
அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.
எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
42 அப்போது அவர் உரத்த குரலில்,
"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்;
உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! [11]
43 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும்
என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார். [12]

மரியாவின் பாடல்[தொகு]


46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:


47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.


என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
50-53 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். [13]
54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும்
அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;


தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்".[14] [15]


56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம்
எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு[தொகு]


57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது.
அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச்
சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்;
செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.
60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து,
"வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.
61 அவர்கள் அவரிடம்,
"உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி,
62 "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று
தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.
63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி,
"இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார்.
எல்லாரும் வியப்படைந்தனர்.
64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது;
அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர்.
இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.
66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி,
"இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள்.
ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

செக்கரியாவின் பாடல்[தொகு]


67 பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு
உரைத்த இறைவாக்கு:

68 "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.


ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
72-73 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
76-77 குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.
78-79 இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்


விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது."


80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார்.
இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை
அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.


குறிப்புகள்

[1] 1:5 = 1 குறி 24:10.
[2] 1:15 = எண் 6:3; கலா 1:15.
[3] 1:17 = மலா 4:5,6.
[4] 1:19 = தானி 8:16; 9:21.
[5] 1:27 = மத் 1:18.
[6] 1:28 - "அருள் நிறைந்தவரே வாழ்க" என்று வுல்காத்தா என்னும்
இலத்தீன் மொழி பெயர்ப்பில் உள்ளது.
[7] 1:28 - "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" என்னும் சொற்றொடரும்
சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.
[8] 1:31 = மத் 1:21.
[9] 1:32,33 = 2 சாமு 7:12,13,16; எசா 9:6,7.
[10] 1:36 = தொநூ 18:14.
[11] 1:42 = லூக் 11:27,28.
[12] 1:45 = யோவா 20:29.
[13] 1:50 = திபா 103:17.
[14] 1:54 = தொநூ 17:17.
[15] 1:46-55 = 1 சாமு 2:1-10; எசா 29:19.

அதிகாரம் 2[தொகு]

இயேசுவின் பிறப்பு[தொகு]

(மத் 1:18-25)


1 அக்காலத்தில் அகுஸ்து சீசர்
தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.
2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது
முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.
3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.
4-5 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும்,
தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு,
பெயரைப் பதிவு செய்ய,
கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து
யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.
மரியா கருவுற்றிருந்தார்.
6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.
7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.
விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

இடையர்களும் வானதூதர்களும்[தொகு]


8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி
இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது
ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது;
மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
10 வானதூதர் அவர்களிடம்,
"அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை
உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்
உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.
12 குழந்தையைத் துணிகளில் சுற்றித்
தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்;
இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.


13-14 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,

"உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!"


என்று கடவுளைப் புகழ்ந்தது.


15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு,
இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி,
"வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய்
ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்"
என்று சொல்லிக்கொண்டு,
16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும்
தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.
17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித்
தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.
18 அதைக் கேட்ட யாவரும்,
இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.
19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம்
தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.


21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது.
தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு
அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்[தொகு]


22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை
நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது
குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க
அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.


23 ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும்
ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று
அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள்
அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.


25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார்.
அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்;
இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்;
தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.
26 "ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன்
அவர் சாகப்போவதில்லை" என்று
தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.
27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக்
குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப்
பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.
28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,

29 "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை


இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
30-31 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. [1]
32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி;


இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை"[2]


என்றார்.


33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி
அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.
34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி,
அதன் தாயாகிய மரியாவை நோக்கி,
"இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும்
எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்;
எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். [3]
35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்.
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.


36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய
அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார்.
அவர் வயது முதிர்ந்தவர்;
மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;
37 அவருக்கு வயது எண்பத்து நான்கு.
அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி
அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.
38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து
எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும்
அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்[தொகு]


39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு
அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய
நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.
40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து
கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

கோவிலில் சிறுவன் இயேசு[தொகு]


41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட
எருசலேமுக்குப் போவார்கள்; [4]
42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது,
வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.
43 விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது,
சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார்.
இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது;
44 பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.
ஒருநாள் பயணம் முடிந்தபின்பு
உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்;
45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு
எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
46 மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள்.
அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து
அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும்
அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.
47 அவற்றைக் கேட்ட அனைவரும்
அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும்
அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.
48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி,
"மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?
இதோ பார், உன் தந்தையும் நானும்
உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். [5]
49 அவர் அவர்களிடம்
"நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்?
நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் [6] என்பது
உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.
50 அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து
அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.
அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம்
தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். [7]
52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து
கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். [8]


குறிப்புகள்

[1] 2:31 = எசா 52:10.
[2] 2:32 = எசா 42:6; 49:6.
[3] 2:34 = யோவா 19:25-27; எபி 12:3.
[4] 2:41 = விப 12:1-27; இச 16:16.
[5] 2:48 = யோவா 7:15,46.
[6] 2:49 - "தந்தையின்...வேண்டும்" என்னும் சொற்றொடரை
"தந்தையின் இல்லத்தில் இருக்க வேண்டும்" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[7] 2:51 = லூக் 2:19; தொநூ 37:11.
[8] 2:52 = நீமொ 3:4.



(தொடர்ச்சி): லூக்கா நற்செய்தி: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை