“என்ன சொல்லவேண்டும் என்கிறாய்?”
“பிடிக்கறதுன்னு சொல்லிட்டுப் போங்களேன்.”
“பிடிக்கிறது.”
“எவ்வளவு பிடிக்கிறது?”
அவன் பதில் பேசவில்லை. அவளைத் தோளில் பற்கள் பதியக் கடித்தான். வீல் என்று கத்தினாள்.
“அவ்வளவு பிடிக்கிறது!”
“விளையாடாமெ நேர்ப் பதிலாகச் சொல்லுங்கோளேன்.”
“கடவுளே நேர்ப் பதில் கொடுப்பதில்லை.”
“நீங்கள்தான் அவருக்குப் போட்டி ஆச்சே, பதில் சொல்லித்தான் பாருங்களேன்.”
“சொல்கிறேன். இப்போது என் மனம் உன்னிடம் இருக்கும் நிறைவில், இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்திலேயே இந்த நிலையிலேயே நான் இறந்துபோய்விட வேண்டும். அவ்வளவு பிடிக்கிறது உன்னை.”
அவன் தன் மனத்தைப் பெட்டிபோல் திறக்கும் அதிர்ச்சியில் அவள் உடல் குலுங்கிற்று.
“ஏன் சாவு சாவு என்கிறீர்கள்:”
“அது தான் நிஜம்” பெருமூச்செறிந்தான். “உன்னை விரும்பும் விதமும் நான் சொன்னவிதம்தான். நீ கேட்டாய்; நான் சொன்னேன். அவ்வளவுதான்!”
அவள் கைகள் அவனைச் சுற்றி இன்னும் இறுகின.
“அப்படியானால் நீங்கள் நான் இப்போ சொல்லப் போவதைக் கேட்கப்போறேள்.”
“ஓஹோ! கேட்கப் போகிறேனோ?”