பக்கம்:அஞ்சலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி 25

 “எல்லாமே ஏளனம் என்றால் அப்படித்தான். நீங்கள் என்னை எங்கெங்கோ தான் அழைச்சுண்டு போறேள், ஏன் அந்த அந்தக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போக மாட்டேன்கறேள்? இன்னிக்குச் சாயந்திரம் வாங்கோ போவோம்!”

அவன் முகத்தை ‘விறு விறு’வென்று டவலில் வேகமாய்த் துடைத்துக் கொண்டான்.

“எனக்குக் கோவில் வேண்டாம்,” அவள் முகம் விழுந்தது கண்ணாடியில் தெரிந்தது.

“ஆனால் போவோரை நான் தடுக்கவில்லை. வேனுமானால் நீ போய் வாயேன்.”

“இன்னிக்குப் போகத்தான் போகிறேன். வெள்ளிக்கிழமையாயிருக்கு.”

“ஜமாய்! உன் புருஷனுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டிக்கொள். சரி வா, சாப்பிடப் போவோமா? ஓயாமல், சாம்பார், கறி கூட்டு, ரஸ்ம்...”

“ஆமாம், நீங்க என்னவேனுமானாலும் சொல்லிக்கோங்கோ—அந்த சுண்டக்காய் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் கிட்டற நாள் என்னிக்கினு நான் ஏங்க ஆரம் பிச்சாச்சு.”

ஒரு பையன் வந்து பரிமாறினான். பத்துப்பன்னிரண்டு வயதுதானிருக்கும். ரேக்குச் சிவப்பு. நடுவகிடு எடுத்து சிகையின் மயிர்க்குஞ்சங்கள் பளபளத்துக்கொண்டு தோள் வரை தாழ்ந்து, சுருண்டு தொங்கின. பட்டை பட்டையாய் விபூதியை இட்டுக்கொண்டு புருவ மத்தியில் குங்குமம் ப்ரகாசிக்கத் தன்னையே கீழே இழுக்கும் கனத்தைத் தூக்கிக்கொண்டு, “சாம்பார் போதுமா அம்மா?” என்று உற்சாகத்துடன் கத்தினான். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/35&oldid=1020932" இலிருந்து மீள்விக்கப்பட்டது