பக்கம்:அலைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஹுதி O 65

 நடுமுதுகு சற்று உள்நெளிந்து இன்னமும் மலையேற நிற்கையில் அப்புது உலகம் அதன் மேலுறை கழன்று விழுந்தாற் போல் எதிர் தோன்றிற்று. அந்த பிரமிப்பில் அப்படி நின்ற நிலையிலேயே காளை கல்லோடு கல்லாய்ச் சமைந்தது. வானத்தின் பசுமையே கீழிறங்கி கொழித்தது. கண்ணுக்கு ஏதோ பார்க்கையிலேயே காளைக்கு நாக்கு சுவைத்தது. திடுதிடுவென பூமியதிர எதிரே இரு குன்றுகளிடையே ஒரு ஆறு சரிந்தது. மார் உயரம் புற்களிடையே புரியாத நிழல்கள் ஒளிந்து விளையாடின. மண்ணே கண்ணுக்குத் தெரிய வில்லை. எங்கும் பச்சை, பச்சை, பச்சை.

காளைக்குத் திடீரென பிடரி குறுகுறுத்தது. அதன் உணர்வுகள் உஷாராயின. எதுவோ தன்னை ஊர்ந்து நோக்கும் ஈர்ப்புக்கு அச்சமடைந்து சட்டென காளை தலை மட்டும் திரும்பிற்று. அது போன்றே ஒரு பிராணி. மலைச் சரிவில் தன்னிலும் சற்று தாழ்வில் நின்று அதைக் கவனித்துக் கொண்டிருந்தது. நீராடுகையிலும் தாகம் தணிகையிலும் காளைத் தன் நிழலைக் கண்டிருக்கிறது. ஆயினும் இவ்வளவு தெளிவாய்த் தன் உரு தனித்து ஜலம்தாண்டி பிதுங்கிக் கண்டதில்லை, தன்போலேதான், தானேதான், ஆனால் தான் இல்லை. இதற்குக் கொம்புகள் சிறுத்து நுனி மிகக் கூரிட்டிருந்தன. தொடையில் பெரும் கருந்திட்டு, கால்கள் அவ்வளவு நீளமில்லையோ? கட்டையாய்த் திடமாய்க் குளம்புகள் பாறை மீது ஊன்றிப் பிடிப்பாய் நின்றன. வால் சுழன்று ஆடிற்று.

புது மாடு மெதுவாய் ஒரு அடி முன்னெடுத்து வைத்தது. காளை அசைந்துகூடக் கொடுக்கவில்லை. கல்லாலடித்தாற் போல் நின்றது, கண்கள் மாத்திரம் பளபளவென்றன. கொஞ்சங் கொஞ்சமாய் ஊறும் நம்பிக்கையுடன் மாடு அடி மேல் அடி வைத்து கிட்டக்கிட்டக் கிட்டவே-காளை முகம் முகர்ந்தது. சத்துருவில்லை என்று அறிந்ததும் பெருமூச் செறிந்து, தன் கழுத்தைக் காளையின் கழுத்தோடு உராய்ந்ததும் ஈருடலின் ஒரோயிரின் ஊடுருவில் அவையவைகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/67&oldid=1287256" இலிருந்து மீள்விக்கப்பட்டது