156 O லா. ச. ராமாமிருதம்
"அம்மா! அம்மா!" ஒரே அலறல், ஒரே துள்ளு, அம்மா 'நிலாவிலிருந்து' குதித்து ஓடி வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.
“இதோ இருக்கேனடோ கண்ணா!-அட அசடே, என்னடா இப்படி அழறே?...... நான் எங்கேயும் போகலேட!- நிஜமாத்தான்-எதித்தாத்துக்குத்தான் போயிருந்தேன். நீ என்னைக் கண்டு பிடிக்கறையா பார்க்கலாம்னு கண்ணா மூச்சி விளையாடினேன். அதுக்குள்ள நான் காணாமே போயிட்டேன்னு கனாக் கண்டிருக்கே. இதோ வந்துட்டேனே, பாரு, என்னைப் பாரு...... "
"கண்ணா”வுக்கு அருமையாய்த் தூக்கம் வந்தது: காலைத் தூக்கி அம்மா மடியில் போட்டுக் கொண்டான். அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டான். 'கண்ணா'வுக்கு சிரிப்பா வந்தது. அழுது கொண்டிருந்ததை நினைச்சால் வெக்கமா இருந்தது. இன்னும் சிரிப்பு அதிகமா வந்தது.
மறுநாள் பொல பொலவென விடியும் நேரத்தில் அவனைத் தேடி வந்தவர் கண்டனர். அவன் மரத்தின் வேர் மேல் காலைப் போட்டபடி, வேரை இறுகத் தழுவிக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாமா தோளைப் பிடித்துக் குலுக்கினார்,
"கண்ணா-கண்ணா-டேய், எழுந்திருடா". ஆனால் அவன் எழுந்திருக்க மாட்டான். அவன் தூக்கம்.அம்மாவைக் கண்டு பிடித்துவிட்ட தூக்கம். இஷ்டப்பட்டாலும் எழுந்திருக்க முடியாது.
முடிந்தாலும் இஷ்டப்பட்டிருக்க மாட்டான்.