ஆஹுதி O 61
கன்று மண்டியிட்டே நகர்ந்து நகர்ந்து கிட்டிக் கிட்டி மடியில் வாய் முட்டி முட்டி, காம்புகளைப் பற்றியதும் இன்பத் தவிப்பில் தாய் மூர்ச்சை போயிற்று.
கன்று போட்டு நெடுநாள் தாய்க்கு உயிரோடிருக்க முடியவில்லை. அது ஈன்ற வித்து அதன் கருப்பையினும் மிக மிகப் பெரிதான காரணம், தாயின் வயிறு உள்ளே நார் நாராய்க் கிழிந்திருந்தது. கன்று தானே ஒரு புல்லைத் தன் வாயில் அதக்கிக் கடிக்க அதற்குச் சக்தி வரும்வரை, பசு தன் உயிரைத் தன்னோடு கெட்டியாய் இருத்திக் கொண்டிருந்தது.
பிறகு ஒரு நாள். உயர்ந்த கரைகளின் நடுவே புரண்ட கானாறில், தாய்ப்பசு மெதுவாய் இறங்கித் தண்ணீர் குடிக்க விளிம்புமேல் தலை குனிகையில் குளம்பு வழுக்கிவிட்டது.
"அ-ம்-மா...... !”.
கரைமேல் மேய்ந்திருந்த கன்று, காற்றின் அலைகள் தாங்கி வரும் அவ்வபயக் குரலைக் கனவில் கேட்டதுபோல் கேட்டுத் தலைநிமிர்ந்ததும் நினைவு மறக்கடிக்க வேடிக்கைக் காட்டி மரங்கள் மெதுவாய் 'ஆனை ஆனை’ சாய்ந்தாடின. திரை ஆடினாற்போல் காற்று படபடத்து மிதந்தது. கண்விழித்து அழிந்த கனவுபோன்று தாயின் நினைவு மறந்தது.
கன்று குனிந்து மறுபடியும் சாவதானமாய் மேய ஆரம்பித்தது.
அதன் எந்த அங்க அசைவிலும் அதனால் அழகாயும் கம்பீரமாயும் இல்லாமல் இருக்க இயலவில்லை.
குனிகையில், நிமிர்கையில், தலையை ஆட்டுகையில் கழுத்தைத் திருப்பி, நீண்ட சுருள் நாக்கால் தன்னுடலை நக்கிக் கொள்கையில், தன்னைச் சூழ்ந்த காட்சியைச் சிந்தித்து அசைவற்று வெறுமென நிற்கையில்.........