அந்திம காலம்/அந்திம காலம் - 18

விக்கிமூலம் இலிருந்து

"மூன்றாவதாக உனக்கு என்ன வரம் வேண்டும்?" என யமன் கேட்டான்.

"ஓ யமனே, ஒரு மனிதன் இறந்து விடும் போது சிலர் அவன் இருக்கிறான் என்றும் சிலர் அவன் இல்லை என்றும் சொல்கிறார்கள். மரணத்தின் தெய்வமே! அந்த ரகசியத்தை நீ எனக்குச் சொல்ல வேண்டும். மரணத்திலிருந்து மனிதன் தப்பிக்க முடியுமா?" என நசிகேதன் கேட்டான்.

"அதை மட்டும் கேட்காதே! இதைப்பற்றி தெய்வங்களுக்கும் சந்தேகமுண்டு. அதைப் புரிந்து கொள்வது எளிதல்ல. அது சூட்சுமமானது. ஓ நசிகேதா! வேறு வரம் கேள்! உனக்குப் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பொன்னும் குதிரைகளும் நாடுகளும் செல்வமும் நீண்ட ஆயுளும் அழகிய பெண்களும் ரதங்களும் தருகிறேன்" என்றான் யமன்.

"செல்வத்தால் யாருக்கும் நிலைத்த இன்பம் வராது. இந்த ஒரு வரமே வேண்டும். வேறு வேண்டாம். மனிதன் மரணத்திடமிருந்து தப்பிப்பது எப்படி?"

கதோபனிஷத்.


சுந்தரத்தை சக்கர நாற்காலியில் ஓர் ஓரமாக உட்கார வைத்திருந்தார்கள். பலர் வந்து அவர் கைகளைக் குலுக்கி அனுதாபம் தெரிவித்துப் போனார்கள். கோலாலம்பூரிலிருந்து ராதா சிவமணிக்குத் தெரிந்த பலர் வந்திருந்தார்கள். அவருக்கு அவர்களை யார் எனத் தெரியவில்லையானாலும் பலவீனமாகத் தலையாட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பரமாவின் உடலின் மேல் நிறைய வாசனைப் பொருள்கள் தௌித்து வைத்திருந்தார்கள். அவன் உறங்குவது போல இருந்தான். அவன் முகம் தௌிவாக இருந்தது. அவனுக்காக வந்த பூவளையங்கள் வீட்டின் பல பகுதிகளில் வைக்கப் பட்டிருந்தன.

புதிதாக யாராவது வந்த போதெல்லாம் ராதா அலறி அழுதாள். "என் மகனைப் பார்த்திங்களா, என் பச்சப் பிள்ள என்ன விட்டுட்டுப் போயிட்டான் பாத்திங்களா?" என்று அழுதாள். சிவமணி அவள் பின்னால் நின்று அவள் தோள்களைப் பிடித்து "அமைதியா இரு ராதா! அமைதியா இரு!" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

சிவமணியின் தாயும் தகப்பனும் வந்து சோக முகங்களோடு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள்.

ராமாவும் இன்னும் ஓரிருவரும் மயான வேலைகளைக் கவனிப்பதில் தீவிரமாயிருந்தார்கள். சிறு பிள்ளையாதலால் எரிக்கக் கூடாதென்றும் புதைக்கத்தான் வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

ஜானகி இடிந்து போய் மௌனமாக அழுது கொண்டிருந்தாள். எழுந்து சென்று அவளின் தோள்களைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் கால்களில் பலம் இல்லை. அன்னம் மட்டும் அடிக்கொரு தரம் தன் பின்னால் வந்து "எப்படி தம்பி இருக்கு உடம்புக்கு? குடிக்க ஏதாச்சும் கொண்டு வரட்டுமா? கொஞ்ச நேரம் வந்து படுத்திருக்கியா?" என்று கேட்டுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் வேண்டாம் என்று சொன்னார்.

உடம்பின் வாதை பெரிதாகத் தெரியவில்லை. அது எப்படி இருந்தாலும் பொருட்டில்லை. பரமாவின் அண்மையை விட்டு நான் அகலமாட்டேன். இது அவனுடன் நான் இருக்க முடிந்த கடைசி சில மணி நேரங்கள். அகலமாட்டேன்.

இங்கேயே மயங்கித் தலை குப்புற விழுந்து இறந்து விட்டாலும் பரவாயில்லைதான். பரமாவுக்குத் துணையாகப் போய்ச் சேரலாம்.

பரமாவின் மொட்டுப் போன்ற முகத்தைப் பார்த்தார். "தாத்தா! ஐ வான்ட் சொக்கலேட்!" என்று ஓடிவந்த முகமா இது? "தாத்தா! ஐ டோன்ட் வான்ட் டு கோ!" என்று அழுத முகமா இது? "அகர முதல எழுத்தெல்லாம்..." என்று மழலையில் திருக்குறள் சொல்லித் தன் உள்ளத்தை வானளவுக்கு உயர்த்திய முகமா இது?

அந்த மொட்டை இப்படிக் கொடுமையாகப் பறித்து விட்ட தெய்வத்தை எண்ணி உள்ளுக்குள் சபித்தார். "காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்" என்று ஒவ்வொரு முறையும் தான் கர்வத்தோடு கூவிய போதெல்லாம் காலன்தான் என்னைப் போட்டு மிதித்திருக்கிறான். அவனை வெல்பவர்கள் இல்லையா? நசிகேதன் வென்றானா? நசிகேதன் சாவின் உண்மையைக் கேட்டறிந்தானா? அல்லது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பொன்னும் குதிரைகளும் நாடுகளும் செல்வமும் நீண்ட ஆயுளும் அழகிய பெண்களும் ரதங்களும் போதும் என்று கேட்டு வாங்கிப் போனானா? படித்தது இப்போது ஞாபகமில்லை. பரவாயில்லை விரைவில் காலனை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு நடப்பதெல்லாம் விரைவில் தனக்கு நடக்கவிருக்கும் சடங்குகளுக்கான ஒத்திகைதான் என நினைத்துக் கொண்டார். தன்னை இப்படி வீட்டு நடுவில் கிடத்தி எத்தனை பேர் எப்படியெல்லாம் அழுவார்கள் எனக் கற்பனை செய்து பார்த்தார். ஆனால் அந்த நேரத்தில் யார் அழுகிறார்கள், யார் வருகிறார்கள் என்பதெல்லாம் தனக்குத் தெரியப் போவதில்லை. அது முக்கியமாகவும் இருக்கப் போவதில்லை என நினைத்துக் கொண்டார்.

உடல்தான் இறக்குமாமே, ஆன்மாவுக்கு இறப்பில்லையாமே! "அர்ஜுனா, இவ்வாத்மா வெட்டுண்ணான், வேகான், நனையான், உலரான். இவன் நித்தியமாய், நிறைவாய், நிலையாய், அசைவற்றவனாய் என்றும் இருப்பவனாம்!" என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார்.

ஆன்மா இங்கு நடப்பவற்றைப் பார்க்க முடியுமானால் தன் இறப்புக்கு, தன் உடலுக்குத் தங்கள் மரியாதையைத் தெரிவிக்க யார் யார் வருகிறார்கள், யார் யார் அழுகிறார்கள் என்பது முக்கியம்தான். ஆனால் அந்த ஆன்மாவுக்கு இந்த விருப்பு வெறுப்புக்கள் முக்கியமாகப் படுமா? தன்னை வணக்கம் செய்வோரைக் கண்டு அது ஆனந்திக்குமா? தன்னை வணக்கம் செய்யாதவரைக் கண்டு அது வருந்துமா?

பரமா! நீ ஆன்மாவாக இருக்கிறாயா? இங்கு நடப்பனவற்றைப் பார்க்கிறாயா? உனக்கு இதெல்லாம் விளங்குகிறதா கண்ணா? ஒரு வேளை இறந்து ஆன்மாவாக நீ ஆகிவிட்ட பிறகு நீ குழந்தையாக இல்லாமல் சகல அறிவும் பெற்ற பூரண நிலையில் இருப்பாய்! அப்படியானால் இங்கு நடப்பதை விளங்கிக் கொள்வாய்!

தாத்தா ஏன் அழாமல் இருக்கிறேன் என்று பார்க்கிறாயா? எனக்கு அழுவதற்கு இப்போது சக்தியில்லை. என் உடலில் எல்லாச் சக்திகளும் வடிந்து விட்டன. நான் வெறுங் கூடாக இருக்கிறேன். என் மனத்தில் நீ ஒருத்தன் சிறகடித்தவாறு இருந்தாய். இப்போது நீயும் போய்விட்டபின் அந்த உள்ளமும் வெறுமையாகிவிட்டது. என் உடம்பு ஒரு அழுகும் கூடு. அதன் உள்ளே என் உள்ளம் ஒரு வெற்றுக் கூடுதான். இந்த இரு கூடுகளுக்குள் நான் அர்த்தமில்லாமல் சிறைபட்டுக் கிடக்கிறேன்.

பரமா! உனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். என் வாழ்க்கை வாழ்ந்து அலுத்து விட்ட வேளையில் உன் மரணமும் என் மரணமும் விதிக்கப் பட்டுவிட்ட இந்த வேளையில் இந்த அற்ப ஆசை தோன்றி ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. அதையும் இல்லாமல் செய்து விட்டாயே கண்ணு!

அனுபவிக்க வேண்டியவை எவ்வளவு இந்த உலகில் இருக்கின்றன? ஓ மரண தெய்வமே! என் பரமா இன்னமும் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் பொன்னும் குதிரைகளும் நாடுகளும் செல்வமும் நீண்ட ஆயுளும் அழகிய பெண்களும் ரதங்களும் பெற்று அனுபவிக்கவில்லையே! அதற்குள் ஏன் அவனைப் பறித்துக் கொண்டாய்?

பரமா! உனக்கு முன் நான் போய் ஆவிகள் தங்கும் உலகம் எதுவாக இருந்தாலும் அங்கு தங்கி உன்னை வரவேற்க வேண்டும் என்று நினைத்திருந்தேனே! ஏன் என்னை முந்திக் கொண்டாய்? பரவாயில்லை இன்னும் சில நாட்களோ, பல நாட்களோ, நானும் வந்து விடுவேன். நோய்த் தொல்லை இல்லாமல் மேகங்களின் மேல் அமர்ந்து நல்ல தமிழ்ப் புலவர்கள் மத்தியில் நாம் தமிழ்ப் படிக்கலாம்.

"சரி சரி! நேரமாச்சி எடுங்க, எடுங்க!" என்றார்கள். உடனே அழுகைகளின் சுருதிகள் கூடின.

என் பரமாவை அன்புடன் முறையாக வடூயனுப்பாமல் நான் இருப்பேனா? என் அன்புப் பேரனே! இந்தத் தாத்தாவின் முத்தத்தைப் பெறாமல் நீ போவாயா?

சக்கர நாற்காலிகளின் பிடிகளை அழுத்தி உந்தி எழுந்தார். அவர் எழுவதைப் பார்த்து இரண்டு பேர் வந்து கைத்தாங்கலாக அவரைப் பிடித்தார்கள். பரமாவின் உடலின் அருகில் போக வேண்டும் என்றார். மெதுவாக நடத்திக் கொண்டு சென்றார்கள். பிணப்பெட்டி அருகில் சென்றதும் அதன் விளிம்புகளைப் பிடித்துக் கொண்டு குனிந்தார். தலை சுற்றும், விழப் போகிறோம் என்ற பயம் வந்தது. விழுந்தால் பரவாயில்லை. அதுவும் செத்து இந்தப் பிணப் பெட்டிக்குள்ளே விழுந்தாலும் நல்லதுதான். பரமாவோடு துணையாகப் படுத்துவிடலாம்.

ஆனால் உடம்பு விழவில்லை. அவர் வேண்டுமளவுக்கு வளைந்து கொடுத்தது. முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு சென்றார். சாமந்திப் பூக்கள், மல்லிகை, ரோஜா, பன்னீர் ஆகியவை கலந்த நல்ல நறுமணம் பரமாவின் உடலிலிருந்து வந்தது.

"ஐயோ அப்பா, உங்க பேரன் உங்கள விட்டுப் போயிட்டான் பாத்திங்களா!" என்று ராதா பக்கத்திலிருந்து அலறினாள்.

அவள் அலறல் காதில் கேட்டுக் கொண்டிருக்கக் குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டார். எழ முடியவில்லை. மீள விரும்பவில்லை. அந்த சங்கமம் அவரை உருக்கிற்று. அவருடைய உடல் குலுங்கிற்று. அவருடைய கண்ணீர் வடூந்து அவன் கன்னங்களை நனைத்தது.

இரண்டு பேர் வலிந்து அவரைப் பிரித்தார்கள். கொண்டு வந்து சக்கர நாற்காலியில் மீண்டும் இருத்தினார்கள்.

"சரி, சரி பெட்டியை மூடலாம்" என்று யாரோ கூறப் பெட்டியை மூடினார்கள்.

"போய் வா கண்ணு! சீக்கிரம் வந்து விடுவேன்! அது வரை தேவதைகள் உன்னைக் கவனித்துக் கொள்வார்கள்!"


      • *** ***

அன்றிரவு தன் வீட்டிலேயே தங்கியிருந்தார். வீடு அமைதியிழந்திருந்தது. அந்த வீட்டில் பல மாதிரி உணர்வுகள் இருந்தன. பரமா போய்விட்ட வெறுமை கனத்திருந்தது. ராதா வாழ்வில் பறிகொடுத்த எல்லாப் பொருள்களிலும் பரமாவின் இறப்பே அவளுக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தது. அவளுடைய சோகம் வீடு முழுவதையும் கவ்வியிருந்தது.

அவர் முகத்தை அனைவரும் பாவத்தோடும் பயத்தோடும் பார்த்தார்கள். இந்த சோகம் முடிந்த பின்னர் இன்னொரு பெரிய சோகம் இந்த வீட்டைப் பெரிதாகக் கவ்வப் போகிறது என்ற துயரம் கலந்த எதிர்பார்ப்பு எல்லார் முகத்திலும் இருந்தது. குறிப்பாக அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஜானகி முகத்தில் அந்த பயம் இருந்தது.

இதற்கிடையே ராதா மீது சிவமணி காட்டும் பாசம் ஒரு புதிய நம்பிக்கை விளக்கை அங்கு ஏற்றி வைத்திருந்தது. அவன் அவளுடைய தவறுகள் எதையும் எடுத்துப் பேசவில்லை. அவளை முற்றாக மன்னித்துவிட்டதைப் போலவே நடந்து கொண்டான். அடிக்கொரு தரம் அவள் தோள்களைத் தழுவி ஆறுதல் கூறினான். அவளும் அவனிடம் இணங்கியிருந்தாள். அவன் மார்பில் முகம் புதைத்து அழுவது அவளுக்கு விருப்பமாகவும் நிம்மதியாகவும் இருப்பது போலத்தான் தோன்றியது.

இது நிரந்தரமா தற்காலிகமா என்ற கேள்வி அவர் உள்ளத்தில் எழத்தான் செய்தது. ஆனால் இப்போதைக்கு இது உண்மைதான். அது வரை நிம்மதிதான் என்று எண்ணிக் கொண்டார். எதிர்காலம் எந்தத் திசையில் போகும் என்று யார் கண்டார்கள்? ஏன் அதற்காகக் கவலைப் பட வேண்டும்? எல்லாருடைய எதிர் காலத்திலும் ஒன்றே ஒன்றுதான் நிச்சயமாக இருக்கிறது. மரணம்!

மறுநாள் காலை அவரை மீண்டும் ஆஸ்பத்திரியில் கொண்டு விட ஏற்பாடுகள் நடந்தன. அவருக்கு அதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. "போகத்தான் வேணுமா அக்கா!" என்று அன்னத்தைப் பார்த்துக் கேட்டார்.

"என்ன தம்பி பேசிற! சிகிச்சைய முடிக்க வேணாமா? போகாம இருந்தா எப்படி?" என்று கேட்டாள் அன்னம்.

ராமாவும் வந்து வலியுறுத்தினார். "பாதில விட்டுட்டா எப்படி சுந்தரம்! கடைசி வரை இருந்து பாத்தாதான நல்லது?" என்றார். "கடைசி வரை" என்பது என்ன என விளங்கவில்லை. மரணம் வரை சிகிச்சை என்றால், மரணத்துக்குக் காத்திருக்கத்தான் மருத்துவ மனைக்குப் போவதென்றால் அது தேவையில்லை எனத் தோன்றியது. ஆனால் சுற்றியுள்ளவர்களின் வற்புறுத்தலை மறுக்க முடியவில்லை.

சிவமணியும் ராமாவும் அவரைக் காரில் ஏற்றிவிட கை கொடுக்க வந்தார்கள். அதை மறுத்துத் தாமாக நிதானமாக நடந்து காரில் ஏறிக் கொண்டார்.


      • *** ***

அவர் அங்கு இல்லாமல் இருந்த ஒரு நாளில் அவருடைய வார்டில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. தன் அடுத்தடுத்த படுக்கைகளில் இருந்த இரண்டு நோயாளிகளையும் காணவில்லை. படுக்கைகளில் புது விரிப்புகள் போடப்பட்டு அடுத்த நோயாளிகளுக்காகத் தயார் செய்யப் பட்டிருந்தன.

மத்தியானம் ரத்தம் எடுக்க வந்த தாதியிடம் விவரம் கேட்டார்.

"அந்தச் சீனக்கிழவர் மண்டையைப் போட்டுவிட்டார். அவருடைய பிரேதத்தை உறவினர்கள் கொண்டு சென்று விட்டார்கள். அந்த இளம் பயனுக்கும் இனி செய்ய முடிந்தது ஒன்று மில்லை என பேர் வெட்டி அனுப்பி விட்டார்கள். அவனை இறக்கும் தறுவாயிலுள்ள நோயாளிகளுக்கான கருணை இல்லத்தில் அவர்கள் குடும்பம் கொண்டு சேர்த்து விட்டது!" என்று உணர்ச்சியில்லாமல் சொன்னாள் அந்தத் தாதி.

இந்த இடத்தில் மரணம் கூத்தாடுகிறது. இங்கு எல்லாரும் அதன் பேய்ப் பிடியில்தான் இருக்கிறோம். இன்றொன்றும் நாளையொன்றுமாக தனது விருப்பத்திற்கு அது மனிதர்களைக் கொய்து தின்கிறது. இது மரணப் பேயின் விருந்துக் கூடம் என்று அவருக்குத் தோன்றியது. இங்கு உட்கார்ந்து கொண்டு மரணம் தன்னைப் பறித்துத் தின்னும் நாளுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமா? என்று நினைத்தார்.

இங்கு ஏராளமான டாக்டர்கள் வெள்ளை வெள்ளையாக அங்கிகள் போட்டுக் கொண்டு கழுத்தில் ஸ்டெதஸ்கோப் தொங்க அவசரம் அவசரமாகத் தங்கள் நோயாளிகளைக் கவனித்துக் காப்பாற்றுவதாக நடிக்கிறார்கள். ஏராளமான இயந்திரங்களையும், குப்பி குப்பியாக மருந்துகளையும் வைத்துக்கொண்டு மரண தேவதையோடு பாம்பும் ஏணியும் விளையாட்டு விளையாடுகிறார்கள். இவர்கள் பாய்ந்து பாய்ந்து ஒரு ஏணியில் ஏறினால் இந்த மரணப் பாம்பு தன் முதுகைக் கொடுத்து அவர்களை அதல பாதாளப் பள்ளத்தில் தள்ளி விடுகிறது. அப்புறம் தனக்கு விருப்பமானவர்களை இவர்கள் கண் முன்னாலேயே கொத்திக் கொண்டு போய் தின்கிறது. டாக்டர்கள் இதற்கெல்லாம் ஏதாவது ஒரு மருத்துவப் பெயரைச் சொல்லி விட்டு அடுத்த நோயாளிக்காக அடுத்த ஏணியில் ஏறுகிறார்கள்.

இப்படித்தான் ஏராளமான வெள்ளை அங்கிகள் அணிந்த டாக்டர்களின் கண் முன்னால் மரணம் பரமாவைக் கொத்திக் கொண்டு போயிற்று. என்ன செய்ய முடிந்தது இவர்களால்?

வேண்டாம். இந்த நரகத்தில் இருக்க வேண்டாம். எனக்கு ஓரிரு வார்த்தைகள் ஆறுதல் சொல்லக் கூடிய மதர் மேகி கூட இங்கு இல்லை. இந்த இடத்தில் அன்பும் கருணையும் இல்லை. இங்கு வெறும் மருந்தும் சிகிச்சையும்தான் இருக்கிறது. இது நோயை நீட்டித்து மரணத்தைத் தாமதப் படுத்தும் இடந்தானே யல்லாமல் நோயை ஒடூக்கின்ற இடம் அல்ல.

இங்கிருந்து வௌியேற வேண்டும். அன்பும், அமைதியும், எனக்கு விருப்பமான மனிதர்களும் சூழ்ந்துள்ள என் வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும். உயிரை விடுவதில் இப்போது பயம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த உயிரை எனது இந்தச் சக நோயாளிகள் போல மருத்துவ மனைப் படுக்கையிலும் கைவிடப்பட்ட கேஸ்கள் காலத்தைக் கழிக்கும் கருணை இல்லங்களிலும் விட மாட்டேன்.

டாக்டர் வந்தவுடன் "உன் மருந்தை நீயே வைத்துக் கொள்" என்று சொல்லி வௌியாகிவிட வேண்டியதுதான் என முடிவு செய்து கொண்டார். டாக்டர் ராம்லியின் சித்திரவதைகளுக்கு இனியும் தன்னை ஆளாக்கிக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. மாலையில் ராமா அல்லது சிவமணி யாராவது ஒருத்தர் தன்னைப் பார்க்க வருவார்கள். அவர்களோடு வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியதுதான்.

அந்த எண்ணமே ஒரு விடுதலை போல இருந்தது. எழுந்து நின்று தமது துணிகளைப் பைக்குள் அடுக்கினார். பிளாஸ்க்கையும் மைலோ டின்னையும் அதற்குள் வைத்தார். புத்தகங்களையும் உள்ளே போட்டார். ஜிப்பை இழுத்து மூடினார்.

வீடு திரும்பிப் புற்று நோயைச் சுதந்திரமாக முற்றவிட்டு, ஜானகியின் மடியில் தலை வைத்தவாறு விரைவில் செத்துப் போகத் தயாராகக் காத்திருந்தார்.


      • *** ***

பிற்பகல் நேரத்தில் டாக்டர் ராம்லி வந்தார். இன்னொரு இளம் டாக்டரும் ஒரு தாதியும் புடை சூழ வந்தார். அவர் படுக்கையின் பக்கத்தில் வந்தவுடன் தௌிவாகத் தெரிந்து கொள்ள முடியாத ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்துவிட்டு அவருடைய ஃபைலைத் திறந்து ஏதோ குறிப்புகள் எழுதினார். அவருடைய இறுக்கமான முகத்துக்கு அந்தப் புன்னகையே ஒரு பெரிய மாற்றம்தான்.

சுந்தரம் தன் மனதைத் தைரியப் படுத்திக் கொண்டு சொன்னார்: "டாக்டர் ராம்லி! என்னை இந்த சிகிச்சையிலிருந்து விடுவித்து விடுங்கள்" என்றார்.

டாக்டர் ராம்லி நிமிர்ந்து பார்த்தார். "ஏன்?" என்று கேட்டார்.

"இந்த சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே இப்படியே நாளைக் கடத்த நான் விரும்பவில்லை! இந்த மருத்துவ மனைச் சூழ்நிலை எனக்கு வெறுப்பாக இருக்கிறது. என் வீட்டுக்குத் திரும்பி விட விரும்புகிறேன்!" என்றார்.

சில விநாடிகள் அவரை உற்றுப் பார்த்தார் ராம்லி. பின்பு ஃபைலைத் திறந்து ஏதோ வேகமாக எழுதி மூடினார். திரும்பித் தாதியிடம் கூறினார்: "நர்ஸ், இந்த பேஷண்டை டிஸ்சார்ஜ் செய்து விட்டேன். அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்றார்.

சுந்தரத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு கோபக்காரரா இந்த ராம்லி! நோயாளி ஒரு ஏமாற்றத்தில் பேசக் கூடும் என்ற பரிதாபம் சற்றும் இல்லாமல் எடுத்தெறிந்து காரியம் செய்கிறாரே!

அவர் தன்னை அங்கு தங்கியிருந்து சிகிச்சையைத் தொடருமாறு கேட்கக்கூடும் என நினைத்து அதற்குரிய பதில்களைத் தயாரித்து வைத்திருந்த சுந்தரத்திற்கு டாக்டர் இவ்வளவு விறைப்பாகத் தன் சிகிச்சையை முடித்துக் கொண்டது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஆனால் அதனால் பாதகமில்லை. போவது என்று முடிவு செய்தாகி விட்டது. போவது உறுதிதான். ஆனால் இந்த டாக்டரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டு போக வேண்டாம் என்று நினைத்தார். சமாதானமாகப் போவோம் என நினைத்தார்.

மென்மையாகத் தணிந்த குரலில் சுந்தரம் சொன்னார்: "டாக்டர் ராம்லி, என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் கோபம் கொண்டது போல் தெரிகிறது?" என்றார்.

"இல்லை. நான் கோபப்படவில்லை" என்றார் ராம்லி.

"அப்புறம் ஏன் இத்தனை விரைவாக என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு செயல் படுத்தினீர்கள்?" என்று கேட்டார் சுந்தரம்.

"மிஸ்டர் சுந்தரம். உங்களுக்கு நாங்கள் இந்த மருத்தும மனையில் செய்ய முடிந்தது வேறு ஒன்றும் இல்லை!" என்றார்.

அவ்வளவுக்கா இந்த நோய் முற்றிவிட்டது? இனி கருணை இல்லத்தில் இருந்து காலங் கழிக்க வேண்டிய கேஸ்தானா நான்? இத்தனை நேரம் மனதில் இருந்த வீராப்பு இப்போது முற்றாகச் சரிந்து விட்டது.

"அவ்வளவு மோசமாகமா ஆகிவிட்டது என் நோய்?" என்று ஈனசுரத்தில் கேட்டார்.

"அப்படி இல்லை! உங்களை இங்கு வைத்து நாங்கள் சிகிச்சையளிக்க வேண்டிய தேவை ஒன்றுமில்லை. உங்கள் நோய் குணமாகிவிட்டது"

ஒரு காந்த அலை காலிலிருந்து புறப்பட்டு உச்சி வரை ஓடி உடம்பில் குப்பென்று பரவியது. அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார் சுந்தரம். "டாக்டர் ராம்லி! என்ன சொல்கிறீர்கள்?"

"உங்களுக்கு இப்போதெல்லாம் தலை வலிக்கிறதா?"

"அவ்வளவாக இல்லை!"

"நேற்று உங்கள் பேரப்பிள்ளையின் மரணச் சடங்குகளுக்குப் போனீர்களே! அதற்குரிய பலம் இருந்ததா? மயக்கம் வந்ததா?"

"இல்லை"

"வயிற்றுக் குமட்டல், வாந்தி?"

"சில நாட்களாக இல்லை!"

"சாப்பாடு வயிற்றில் தங்குகிறதா?"

"ஓரளவு சாப்பிட முடிகிறது"

"தோலின் ரணம்?"

"குறைந்துதானிருக்கிறது!"

"கால் கைகளின் வலி?"

"குறைந்திருக்கிறது!"

"அன்றைக்கு சக்கர நாற்காலியை விட்டு எழுந்து படுக்கை வரை நடந்து போனீர்களாமே!"

"ஆமாம்!"

"அப்புறம் சிகிச்சையில் ஒன்றும் முன்னேற்றம் இல்லை என்று சொன்னீர்களே! இதெல்லாம் முன்னேற்றம் இல்லையா?"

"முன்னேற்றந்தான்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு வெட்கித் தலை குனிந்தார் சுந்தரம். ஏன் நான் கவனிக்கவில்லை? என் நோய் என் மீது பிடியைத் தளர்த்தியிருந்தும் என் மனம் என் நோயின் மீதுள்ள பிடியைத் தளர்த்தவில்லையோ? என்னைச் சுற்றியுள்ள அவலங்களில் ஆழ்ந்து போய் எழ முடிந்தும், எழ மனமில்லாதவனாகக் கிடந்து விட்டேனா? வாழ்க்கை என்னை அணைக்க வந்தும் நான் மரணத்தையே தழுவிக் கொண்டு கிடந்து விட்டேனா?

டாக்டர் ராம்லி சிரித்தவாறு நின்றிருந்தார். சுந்தரம் தலை தூக்கிப் பார்த்தார். "உண்மையா டாக்டர் ராம்லி!"

மறுபடியும் இந்தக் கேள்வி அவருக்கே வெட்கமாக இருந்தது. இந்த மனம் ஒரு தடவையில் கெட்ட செய்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை, நல்ல செய்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை. மறுமுறை சொல், பலமுறை சொல் என்று வருத்தி வருத்திக் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ள விரும்புகிறது.

"உங்கள் மூளையின் கட்டி பெரும்பாலும் கரைந்து விட்டது. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து சாதாரண நிலைக்கு வந்திருக்கிறது. கல்லீரல், கிட்னி எல்லா இடத்திலும் புற்று நோய் அறிகுறிகள் மறைந்து விட்டன. ஹோர்மோன்தெராப்பி உங்கள் உடம்பில் நன்றாக வேலை செய்திருக்கிறது. ஆகவே ரேடியோதெராப்பியை முற்றாக ரத்துச் செய்து விட்டோம். ஆனால் இதனால் உங்கள் நோய் முற்றாகக் குணமாகிவிட்டது என அர்த்தமல்ல. நாங்கள் அதைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டிருப்போம். ஆனால் இப்போதைக்கு உங்களுடைய உயிரை நீட்டித்து புது ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். நீங்கள் பயமில்லாமல் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பலாம். கெமோதெராப்பிக்கு மட்டும் வந்து போய்க் கொண்டிருங்கள். போவதற்கு முன் சில மருந்துகள் கொடுக்கிறேன்" என்றார் ராம்லி.

படுக்கையிலிருந்து எழுந்து நின்று அந்த டாக்டரைத் தழுவிக் கொண்டார் சுந்தரம். "உன்னைப் பற்றி என்னவெல்லாம் நினைத்தேன் ராம்லி! கடமை வீரனே! என் உயிர் காத்த என் அன்பு மாணவனே! எப்படியெல்லாம் மனதுக்குள் உன்னைத் தூற்றிவிட்டேன். மனிதர்களைப் பற்றிய என் மதிப்பீடு இவ்வளவு தவறாகவா போய்விடும்? நான் முட்டாள். நான் குருடன். நான்... நான்... மிகவும் கொடுத்து வைத்தவன்" என எண்ணிக் கொண்டார். அவற்றையெல்லாம் சொல்ல நா வரவில்லை. அவருடைய கண்களில் கண்ணீர் கோத்து வழிந்தது.

"என்னை மன்னித்து விடுங்கள். டாக்டர் ராம்லி! ஏதோ பழைய விஷயங்களை நினைந்து...."

"பரவாயில்லை. சின்ன விஷயம். நான் எப்போதோ மறந்து விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் கழித்து கெமோதெராப்பிக்கு அப்பாய்ன்ட்மென்ட் கொடுக்கிறேன். அப்போது உங்களுக்கு முழுமையான ரிப்போர்ட்டும் கொடுக்கிறேன். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். பை, பை!" என்று அடுத்த படுக்கைக்குச் சென்றார் டாக்டர் ராம்லி.