பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

31

நூறாண்டு கடந்து வாழ்வேன் என்று மொழிந்திருந்த அவர், தம் எழுபத்தொன்பதாம் அகவையிலேயே, ‘ராம்’ என்ற சொல் உதட்டிலிருந்து பிரியும்போதே உயிரும் உடலைவிட்டுப் பிரிய, ஒரு சக மனிதனின் கைத் துப்பாக்கிக்கு இரையானார். இந்தத் துவக்கமே சூசகமாக இத்துணை அறங்களும் அழியும் சூழலுக்கு வித்திட்டதோ?

கொள்கையற்ற அரசியல் ஒரு தனி மனிதர் மக்களிடம் எவ்வகையிலேனும் செல்வாக்குப் பெறுவதிலிருந்து தொடங்குகிறது. இந்தச் செல்வாக்கு, அந்தத் தனிமனிதரின் ஏனைய அறம் சார்ந்த பண்புகளால் நிலை பெறுவதாக இருந்தால், அந்தச் செல்வாக்கை, அதிகாரக் குவிப்புக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கமாட்டார்.

ஆனால் அந்தச் செல்வாக்கு நவீன மக்கள் தொடர்பு சாதன உத்திகளில் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடும் சுயநலவாதியான மனிதனையும் வந்தடைகிறது. அவன் மக்கள் தலைவனாகி, மக்களாட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை அவனைத் தலைமைப்பீடத்தில் ஏற்றுக் கொண்ட அரசியல் கட்சிக்குப் பெற்றுத் தந்துவிடுகிறான். இதை நாம் அநுபவபூர்வமாக அறிந்துவிட்டோம்.

மக்களாட்சியில், அதன் குடிமக்களுக்குத் தேவையான அடிப்படைக் கல்வியும், சுயாட்சி பற்றிய அரசியல் பிரக்ஞையும் இல்லாமலே இங்கே பெரும்பான்மைக் குடிமக்களும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடகங்கள் நடந்து முடிகின்றன.

மாறாக, அறம் சார்ந்த பண்புகளால் ஒரு தனி மனிதர் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தால், அந்தச் செல்வாக்கு அதிகாரக் குவிப்புக்கு இடமளித்திருக்காது.