பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

புதியதோர் உலகு செய்வோம்

அவர் மக்களனைவரையும் மனித நேயக் கண்ணோட்டத்துடன் கல்வி பெறச் செய்திருப்பார். சமத்துவம் என்ற நிலையை எய்த ஒழுக்கம் சிறந்த பண்பாடாகப் போற்றப்பட்டிருக்கும். இறைவழிபாடு பேதம் காணும் சமயச் சடங்குகளையும், புற சின்னங்களையும் முனைப் பாக்கியதாக ஆடம்பர நிகழ்ச்சிகளாக மக்களைக் கூட்டும் உத்தியாக மாறி இருக்காது. வாணிபம் பொருளியல் வளர்ச்சியுடன், அனைத்துப் பிரிவினரின் இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றக்கூடியதாகச் செழித்திருக்கும். இந்த வளமையில், மனித நேய உறவுத் தொடர்புகள் பேராசையும் வஞ்சகமும் மோசடியும் தலைதூக்காத அளவில் ஏற்றம் பெற்றிருக்கும். அறிவியல் வளர்ச்சி, சமுதாயத்தின் கடைகோடி மனிதன் வரையிலும் தொடர்புள்ளதாக, உழைப்புக்கு மேன்மையும் கெளரவமும் அளிப்பதாகப் பயனடைந்திருப்போம். மனிதவள ஆற்றல் சமுதாயத்தை மேம்படுத்தும். செல்வம் மக்களனைவரும் பயன்பெற, பங்கீடு சமமானதாகவே இருக்கும். இத்தகைய சமுதாயத்தில் மனிதர், தமக்கு இயல்பான, நியாயமான இன்பங்களைத் துய்க்க முடியும். ஸத்யமேவ ஜயதே-மாந்தர் அனைவரும் சமம் - வயது வந்தோர் அனைவரும், ஆண், பெண், ஊனமுற்றோர் உட்பட இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் பங்கு கொள்கின்றனர் என்ற கொள்கைகள் இந்நாள் வெறும் கொடிக் கொள்கைகளாக, நடப்பியலில் செல்லரித்த சிதிலங்களாக எஞ்சியுள்ளன.

காலம் காலமாக ஆட்சிபீடங்களுக்காகவே மனிதரை மனிதர் குத்திக் கொன்றிருக்கின்றனர். சகோதரர்கள், தந்தை, தாய், பிள்ளை என்று வெட்டி மடிந்திருக்கின்றனர். சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் இராஜதந்திரம் என்ற பட்டுப் போர்வைக்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன.