ரங்கோன் ராதா/அத்தியாயம் 3

விக்கிமூலம் இலிருந்து
அத்தியாயம் 3

"குடிவெறியால் கூத்தாடியவன், என்னிடம் என்ன செய்வது! கீழே வீழ்ந்தான். உடனே எழுந்திருந்தால் மேலும் அடி விழும் என்ற பயம், அவனுக்கு. எனக்கு அவன் நிலையைக் கண்டு சிரிப்புக்கூட வந்தது. எவ்வளவு ஆர்ப்பரித்தான், அடி விழுகிற வரையில். அடி கொடுத்ததும் எவ்வளவு அடக்கம்!

"இதுதான் உங்க ஊர் வேலையோ? ஏன், சார்! என் சம்சாரத்துடன் நான் ஏதோ சண்டை போட்டா, வீடு புகுந்து அடிக்கச் சொல்லித்தான் இந்த ஊர்ச்சட்டம் சொல்லுதோ" - என்று கேட்டான், அழுகுரலில். அதைக் கண்டு நான் திடுக்கிடவில்லை; ராதாவைப் பார்த்ததும் திகைத்துப் போனேன். ராதா, என்னைப் பார்த்த பார்வை, 'சீ! நீயும் ஒரு முரட்டுப் பயல்தான். இவன், அம்மாவை அடித்துத் துன்புறுத்தினான். நீ, குடித்து விட்டு நிலைகுலைந்திருப்பவனைத் துன்புறுத்துகிறாய்" என்று கூறுவது போலிருந்தது. கொஞ்ச வெட்கமடைந்து, "என்னை மன்னிக்க வேண்டும்" என்று கூறினேன், ராதாவை நோக்கி.

நான் அவனிடம் பேசுவதாக எண்ணிக்கொண்ட குடியன், "இடியட்! உன்னையா? பார், நான் என்ன செய்கிறேன் என்று. பர்மாவிலிருந்து வந்திருக்கும் என்னைக் கொள்ளையடிக்கவும், என் பெண்ணைக் கைப்பிடித்திழுக்கவும் நீ துராக்கிரமமாக வீட்டுக்குள் நுழைந்து கலகம் செய்ததாகப் போலீசில் பிராது கொடுக்கிறேன். என்ன நடக்கிறது பார்" என்று மிரட்டினான்.

ராதா, "அப்பா! போதும் உங்கள் பிரதாபம், போய்ப் படுங்கள்" என்று கொஞ்சம் கண்டிப்பாகச் சொன்னாள். இதற்குள், ரங்கம்மாள், "அப்பா! நீ யார் பெத்த மகனோ, என்னைக் காப்பாற்றினாய். இந்தப் பாவி குடிவெறி ஏறிப் போனால், இப்படித்தான் அடித்துத் துன்புறுத்துவான்" என்று என்னிடம் கூறிவிட்டு, ராதாவுக்கு ஜாடை காட்ட, ராதா, பர்மாக்காரனை அழைத்துக் கொண்டு போய்விட்டாள் உள்ளே படுக்க வைக்க.

"அம்மா! நான் அவரை அடிக்க வேண்டும் என்று எண்ணி இங்கு வரவில்லை. என்னவோ அலறல் சத்தம் கேட்கவே இங்கு வந்தேன். நான் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் என் மீது பாய்ந்தார். அதனால்தான்..." என்று நான் சமாதானம் கூறினேன்.

"நல்ல பிள்ளையாண்டானப்பா நீ. பக்கத்து வீடா நீ இருப்பது."

"ஆமாம்."

"என்ன வகுப்பு?"

"முதலியார் வகுப்பு."

ரங்கம்மாள் பெருமூச்செறிந்துவிட்டுச் சில விநாடி மௌனமாக இருந்தது கண்டு, நானாகவே என் வரலாற்றைக் கூறலானேன். என் தகப்பனாரின் பெயரைக் கூறினதுதான் தாமதம் ரங்கம்மாள் என்னை விறைக்க விறைக்கப் பார்த்து,

"யாருடைய மகன்? யார் மகன் நீ?" என்று கேட்டு என்னைப் பயப்படுத்தியே விட்டார்கள். "ஏன்? ஏன், பதைக்கிறீர்கள்? என் தகப்பனார் பெயர் தருமலிங்க முதலியார்" என்று நான் கூறினேன். "கோட்டையூரா?" என்று கேட்டார்கள். "ஆமாம்" என்றேன். உடனே ரங்கம்மாள், "அட! மகனே!!" என்று பெரிய கூச்சலிட்டு என் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"மகனே! என் கண்ணே! உன்னையா நான் காண்கிறேன்? கோட்டையூரார் மகனா?" என்று கேட்டுக்கொண்டே, என் இடது காதுக்கு அடிப்புறத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் "என் மகனே தான்!" என்று ஆவேசம் வந்ததுபோல் அலறினார்கள். கண்களிலே இருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது.

"அம்மா! இது என்ன?"

"அம்மா! கண்ணா! நீ என்னை அம்மாவென்று அழைக்கவும் நான் கேட்கவும் கொடுத்து வைத்தவளானேன்."

"யார் தாங்கள்?"

"நானா? என்ன விபரீதமான கேள்வியடா கண்ணே! ஆனால் உன்மேலே என்ன தப்பு! எல்லாம் இந்தப் பாவியால் ஏற்பட்டதுதானே."

"எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் கோட்டையூர் தருமலிங்க முதலியார் மகன். தாங்களோ பர்மா..."

"பர்மாவிலிருந்து வந்திருக்கும் பராரி! ஆனால், அப்பா நான் தான் உன் தாய்."

அதற்கு மேல் ரங்கம்மாவால் எதுவும் பேச முடியவில்லை மயக்கமுற்றுக் கீழே சாய்ந்து விட்டார்கள்.

கூச்சலைக் கேட்டு ஓடி வந்த ராதா, முகத்தில் தண்ணீர் தெளித்து ரங்கம்மாவைத் தெளியவைத்தாள். கண்களைத் திறந்து என்னை வாஞ்சையோடு பார்த்துவிட்டு, "அப்பா சுகமாக இரு! தங்கம் சௌக்கியமா? உன் அப்பா எங்கே?" என்று கேட்டார்கள்.

"இதென்னமா பெரிய விந்தையாக இருக்கிறது. என் தாயார் இறந்து இருபது வருஷமாகிறது..."

"ஆமாம், நீ அப்போது ஒரு வயசுக் குழந்தை..."

"அப்படியானால் தாங்கள்?"

"செத்தவள் பிழைத்து வந்திருக்கிறேன், சீர்கெட்டுப் பேர்கெட்டு, சிரமப்பட்டு, ஊர்விட்டு ஊர் ஓடி, உன் முகத்தில் விழிக்கவும் இலாயக்கற்று."

ராதா என்னைப் போலவே திடுக்கிட்டு நின்றாள்.

ரங்கம்மாள் ராதாவை அருகே அழைத்து, என்னைக் காட்டி, "ராதா, உன் அண்ணன்; என் மூத்த மகன்" என்றார்கள். பிறகு என்னைப் பார்த்து, "மகனே! மனத்திலே இருக்கும் பாரத்தைக் குறைத்துக் கொள்ளாவிட்டால், பிராண வேதனையாக இருக்கும். ஆகையால் சொல்கிறேன்; என்னை நம்பு. நான் தான் உன் தாய். ஊரும் உலகும் நீ ஒரு வருஷக் குழந்தையாக இருக்கும்போது, நான் இறந்து விட்டதாகவே சொல்லும். உன் அப்பாவும் சித்தியும் அதேதான் சொல்வார்கள். ஆனால், உண்மை வேறு. நான் சாகவில்லை, ஓடிவிட்டேன். உன் தகப்பனைவிட்டு" என்று கூறினார்கள்.

நான் என்ன நினைப்பது? செத்துப் போனதாகக் கூறப்பட்ட என் தாய் உயிருடன் என் எதிரே உட்கார்ந்திருப்பது கண்டு ஆச்சரியமடைவதா? ஆனால், பர்மாவிலிருந்து ராமசாமி நாயுடு என்பவனுடல்லவா வந்திருக்கிறார்கள். விபசாரி! என் தாய், இந்தக் கதியில் - என் எதிரில் - இருபது வருஷங்களுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு தாய் இருக்கும் விஷயம் தெரியவேண்டுமா? என்னால் ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை. "அம்மா!" என்று வார்த்தை இருதயத்திலிருந்து கிளம்பி, தொண்டைக் குழிவரை வரும்; உடனே ஒரு திகைப்பு, சத்தம் ஒடுங்கிவிடும்! நான் அந்தச் சமயம் பட்ட 'இம்சை'யின் தன்மையை விவரிக்கவே முடியாது. கண்கள் நீரைப் பொழிந்தன. உடம்பு காற்றில் கொடியென ஆடிற்று. இடையே, ராதா, "அண்ணாவா? ஏனம்மா, முன்பு சொன்னாயே, ரங்கோனில், அந்த அண்ணனா?" என்று வேறு கேட்டாள், ரங்கம்மாளைப் பார்த்து. "ஆமாம் கண்ணே! என் செல்வக் குழந்தைதான்" என்று கூறிவிட்டு, என்னைப் பார்த்து,

"மகனே! உன்னைப் பார்க்கும் போது நான் பூரிப்பு அடைவதுபோல, நீ அடைய முடியாது. நீ எதிர்பாராத சம்பவம் இது. செத்துச் சாம்பலாகிவிட்டாள் தாய் என்று நம்பிக்கொண்டிருக்கும் உனக்கு என்னைக் கண்டதும், உண்மையில் கனவா, நனவா, நிஜமா, கட்டுக்கதையா என்றுகூடத் தோன்றும். ஆனால், நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, உன்னைப் பார்த்தேனே அதுபோதும் எனக்கு. ஒரு வருஷக் குழந்தையாக இருக்கும்போது, ஓர் இரவு நீ என்னை ஒட்டிக் கொண்டது போலப் படுத்திருந்த சமயம், பாவி நான், உன்னைவிட்டுப் பிரிந்தவள், கெட்டு அலைந்து இந்தக் கதியானேன். குடும்ப கௌரவத்தை நாசமாக்கினேன். மகனே! நான் செத்துவிட்டதாகவே நீ நம்பி விடுவது நல்லது. நான் உயிருடன் இருப்பது உலகுக்குத் தெரிவதுகூட, நல்லதல்ல. மகனுக்குத் தலையிறக்கத்தைத் தரும் மகா பாவி நான்" என்று கூறி விம்மினார்கள். இப்படியும் இருக்க முடியுமா? என் தகப்பனார் திட்டமாகச் சொன்னாரே, இறந்து விட்டாள் உன் தாய் என்று. எப்படி இந்தக் கதை உண்மையாக இருக்கமுடியும் என்று கேள்விகள் என் மனதில் தோன்றி என்னைத் துடிதுடிக்கச் செய்தன முதலில். ஆனால் ரங்கம்மாள் என் தாய்தான் உண்மையில், என்று அந்தக் குரலிலே இழைந்து வந்த பாசமும், உருக்கமும் எனக்குக் காட்டிவிட்டன. நம்பமுடியாதது போலக் காணப்படும் பல உண்மைகள் உலகில் உண்டு. அதில் இது ஒன்று என்று தீர்மானித்தேன். என் தாயிடம்தான் நான் பேசுகிறேன் என்று, என் உள்ளம் உரைத்தது. கோபத்துக்குப் பதில், கண்ணீர் கொப்புளித்ததற்குக் காரணம் வேறு என்னவாக இருக்கமுடியும்? "அம்மா! அம்மா! என் தாயார்! நீங்கள்? ராதா என் தங்கை!" என்று நான் மெல்லக் கூறினேன். என் காதிலே அந்தச் சொற்கள் விழுந்தபோது, எனக்கே சற்றுத் தூக்கிவாரிப் போட்டது, என் கஷ்டமான நிலையைத் தெரிந்து கொண்ட என் தாயார்,

"அப்பா! நான், என் மகனைக் கண்டேனே தவிர, நீ உன் தாயாரைப் பார்க்கவில்லை - இன்று நடப்பது அவ்வளவும் ஏதோ ஒரு கனவிலே நடந்தது என்று எண்ணிக்கொள். உன் வாழ்க்கைக்கு நான் சனியனாகமாட்டேன். கோட்டையூரார் குடும்பத்தின் பெருமையை நான் குலைக்கமாட்டேன். பயப்படாதே. நான் தான் உன் தாயார் என்பதை உலகம் அறியும்படி நான் செய்யமாட்டேன். நாளைக்கே, நாங்கள் இங்கிருந்து கிளம்பி, எங்காவது நெடுந்தூரம் சென்றுவிடுகிறோம். உனக்கு அவமானம் வருவதை நான் சகிக்கமாட்டேனடா கண்ணே! என் புத்திக் குறைவினாலும், உன் அப்பாவின் கிராதகத்தாலும், நான் இக்கதியானேன். நான் செத்துவிட்டேன் என்று ஊரார் நம்புவதால், இப்போது, உன்மீது மாசுமறுவு இல்லை. உண்மையாக நான் உயிருடன் இருக்கிறேன். விபசாரியாகி விட்டேன் என்பது தெரிந்தால் உன்னை உலகம் கேவலமாகப் பேசும். அதைக் காண நான் சகிக்க மாட்டேன். ஆகவே, என்னால் எங்கே உனக்கு அவமானம் நேரிட்டு விடுகிறதோ என்று அஞ்சாதே. நான் இருபது வருஷங்களாக இரவு பகலாக உன்னை எண்ணி எண்ணி ஏங்கியிருக்கிறேன். நீ தத்தி நடந்ததை, கொஞ்சிப் பேசியதை, ஓடி ஆடியதை, நான் பார்க்கவில்லை. மகனே! உன் பெயர் என்னடா! நான் உன்னை அழகேசா என்றே அழைத்து வந்தேன், ஒரு வருஷகாலம்; உன்னை வளர்க்கும் பாக்கியம் இருந்தவரையில்" என்று ரங்கம்மாள் கூறினபோது, நான் கோவெனக் கதறியே விட்டேன். "அம்மா! என் பெயர் நாகசுந்தரம்; எவ்வளவு விசித்திரமான நிலைமையம்மா இது. தாயார், தன் மகனின் பெயரை, மகனையே கூறும்படி கேட்பது" என்று சொல்லி அழுதேன்.

"அழவேண்டியவள் நானடா நாகு! நீ ஏண்டா ராஜா அழவேண்டும்? நான் பாவி, துஷ்டை, உன்னை என் மகனென்று ஊரார் முன் கூறிக்கொள்ள முடியாத கேவலநிலை அடைந்தேன். உனக்கு ஏன் கவலை? நான் செத்துவிட்டவள் செத்துவிட்டவள் தான்... அப்படியே நினைத்துக் கொள். உன் கனவில் ஒருநாள் நான் தோன்றி, 'மகனே! என்னை மன்னித்துவிடு, என்று கெஞ்சினேனென்று நினைத்துக்கொள்" என்றார்கள்.

"அம்மா! அப்படி எல்லாம் பேசாதீர்கள். எனக்கு உண்மை வேண்டும், விவரம் வேண்டும், விளக்கம் வேண்டும், என் வேதனையைப் போக்க வேண்டும்" என்று கேட்டேன். "நாகு! நான் இனிக் கூறப்போவது அவ்வளவும் சத்தியமான பேச்சு. இன்று கேவலமான நிலையை அடைந்திருக்கிறேன் என்ற காரணத்தால், என் வார்த்தையைச் சந்தேகிக்காதே. நான் உன் தாயார். அதைக் கூறிக் கொண்டு, நான் மறுபடியும் அந்த ஸ்தானத்தை அடைய முடியாது. உன்னை யார் என்று தெரிந்து கொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி, மட்டற்றது என்ற போதிலும், மருட்சியுடன் கூடியதுதான். உன்னை நான், 'என் மகனே' என்று மனதிற்குள்ளாகத்தான் சொல்லி ஆனந்தப்பட முடியுமே தவிர, வெளியே சொல்ல முடியாது. எந்த மகனும் பொறுத்துக்கொள்ள முடியாத இழிவான காரியத்தில் இறங்கினேன். அப்பா நாகு! நீ புத்திசாலி, கருணை உள்ளவன். என் கதை முழுவதையும் கேட்டால், இழிவான நிலைமைக்கு நானாகப் போகவில்லை, உன் அப்பாவே தான் தள்ளினார் என்பதைத் தெரிந்து கொள்வாய். இவ்வளவு கூறுவதும் என்னை மன்னித்துவிடு, மாதா என்று ஏற்றுக்கொள் என்று உன்னைக் கேட்க அல்ல. நீயாக ஒருவேளை அவ்விதமான எண்ணம் கொண்டால்கூட, நான் திட்டமாக மறுத்துவிடுவேன். கேள், என் பரிதாபத்துக்குரிய கதையை! உன் தாய், விபசாரியான கதையை."

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வெள்ளிக்கிழமை, கோட்டையூர் மக்களெல்லாம் குமுறினார்கள்; 'மகராஜி! புண்யவதி! போய்விட்டாள். பச்சைக் குழந்தையை விட்டுவிட்டுப் போய்விட்டாள்!" என்று கூறினர். அன்றுதான் நான் இறந்து விட்டேன்! வெள்ளிக்கிழமையன்று, பூவோடும் மஞ்சள் குங்குமத்தோடும் புண்யவதி போகிறாள் பார். பாவம், குழந்தைதான் பிழைக்குமோ என்னவோ தெரியவில்லை என்று, மயான ஊர்வலத்தைக் கண்டு மக்கள் பேசிக் கொண்டனர். உன் அப்பா முக்காடிட்டுக் கொண்டு சென்றார். உன் தாத்தா வேளாள சங்கத் தலைவர் வீரராகவ முதலியார், தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி நடந்து சென்றார். இரவு மணி பத்தாகிவிட்டது. பிணத்துக்குத் தீயிட! தீ வெகு வேகமாகப் பிடித்துக்கொண்டது."