உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

நற்றிணை தெளிவுரை


என்றதாம்; இதனால் தெய்வீக வுறவை வலியுறுத்தினான். தலைவியது நாட்டின் வளமையை கூறிப் புகழ்ந்ததும்

ஆம்.

'கோடேந்து அல்குல்' என்றது, முன்னர்த் தான் தலைவி யோடு கொண்ட களவுறவை நினைவுபடுத்தியது. 'நீள்தோளீர்' என்றது தோழிக்கும் தலைவிக்கும் இடையே யிருந்த வேற்றுமையற்ற அன்புச் செறிவைச் சுட்டியது. இதனாலே, தலைவியது கருத்துக்கு உதவுவதே தோழியின் செயலாக வேண்டும் என்றதாம்.

'கொய்புனம்' என்றது புனம் அழிந்தாற் கூட்டம் நிகழாது எனக் குறித்துப் பகற்குறி வேட்டது; புனம் அழிந்தபின் தலைவியும் மனையகம் புகுதல் நிகழுமாதலின் இரவுக்குறி வேட்பவன் சிறுகுடி யாதெனவும் வினவினான் எனக் கொள்க.

உறவுடையாளாகிய தலைவி உட்பொருளை உணர்ந்து களிக்க,அஃதறியாதாளாகிய தோழி அதனை அன்பினால் மட்டுமே வினவியதாக முதலிற் கொள்ளினும், தலைவன் தலைவியரின் மெய்ப்பாடுகளைக் கண்டதும் உண்மையினை உணர்வாள் என்று கொள்க.

உள்ளுறை பொருள் : 'கன்றையுடைய செ ந்நிற பசுவானது, பலாப்பழத்தைத் தின்று இறும்பின் அறல் நீரைப் பருகும்' என்றது, தலைவியை முன்பே இயற்கைப் புணர்ச்சியாலே பெற்றவனாகிய யானும், இனிப் பகற்குறியும் இரவுக்குறியும் பெற்றுக் கூடி மகிழ்வேன்' என்றதாம்.

மேற்கோள்: 'மெய்தொட்டுப் பயிறல்' என்னும் நூற் பாவின் உரைக்கிடையிலே (தொல்.பொருள்.99), 'ஊரும் பேரும் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்' என்பதற்கு இச் செய்யுளைக் காட்டி, இதனை 'ஊர் வினாயது' என்பர் இளம் பூரணனார்: 'ஊரும் பிறவும் வினாயது' என்பர் நச்சினார்க் கினியர். இவ்வாறு பொருந்தக் கொண்டு பொருள் காணலும் இனிமை தருவதே.

'செங்கேழ் ஆடிய' என்பதற்குத் தலைசாய்ந்த கதிர்கள் மழையால் செந்நிறப் புதுநீர் பட்ட தரையிலே படிய எனவும் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/44&oldid=1641379" இலிருந்து மீள்விக்கப்பட்டது