10.யாத்திரைப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]

ஓர் அங்கதக் காவியம்[தொகு]

(வரிகள்: 01-50)[தொகு]

மூன்று மாத முன்ன தாகவே
மனைவியர் இருவர் மாண்டு போயினார்!
நாலாம் மனைவி நாடகக் காரியும்
விடுமுறி போட்டு விலகி விட்டனள்.
ஒருத்தி, பாவம், ஒருகதி யில்லாள் (05)
நான்கு பிள்ளை நமனுக்குக் கொடுத்தாள்,
பெற்றும் மலடி, பேசா மடந்தை,
எனக்குத் துணையாய் இருந்தாள், அம்மா!
எழுந்து நடக்க இயலா தாகிப்
பாயிற் கணவர் படுத்தநாள் தொட்டு (10)
அடைந்த துயரெலாம் அறிபவர் யாரோ?
ஒருநாள்,
தீனம் என்ற செய்தி யறிந்து
மருமகன் வந்தான், வாயிலில் நின்றான்;
எட்டிப் பார்த்தான், இனிஇவர் என்றும் (15)
எழுந்திருப் பதுவு மிலையெனத் தேர்ந்தான்
அண்டையிற் சென்றான், அழவும் செய்தான்!
‘என்ன வேண்டுவது?’ என்றும் கேட்டான்!
பக்கத் திருந்த பாவிகள், யாங்கள்
இருவரும் ஏங்கி இரங்கி யழுதோம். (20)
கண்ட மக்களும் கதறி யழுதனர்,
புருசனும் இதனைப் பொறுக்கமாட் டாமல்
அருகில் நின்ற மருகனை நோக்கி,
“அப்பா! வாடா, அண்டையில் இருடா!
நாச காலர் நாலைந்து பேர்கள் (25)
கூடி நம்மைக் கோர்ட்டில் நாடகம்
ஆடும் படியாய் ஆக்கி விட்டனர்
போகட்டும், போகட்டும், போனது போகட்டும்
இன்றோ, நாளையோ இப்பொழு தோஎன்று
எனக்கும் காலம் இறுகி விட்டது. (30)
இந்நாள் வரையில், யான்என் மனைவி
மக்களுக்கு என்றொரு வஸ்து வாகிலும்
கொடுதத்து மில்லை; குடியிருப் பதற்கு
வீடும் அவர்க்கு வேறிலை, அப்பா!
தங்கத்தை நீயே தாலி கட்டினால், (35)
கவலை யின்றிக் கட்டையை விடுவேன்,
அவளும் சமைந்து ஈராண்டுகள் ஆச்சுது!
கண்ணால் உங்கள் கல்யா ணத்தைக்
காண்பனோ? தெய்வ கடாட்சம் எப்படியோ!
அத்தைமார் இவர்கள் அல்லும் பகலும் (40)
படும்பா டுகள்நீ பார்க்க வில்லையோ?
அப்பா! இவரை ஆதரித்து என்றும்
காப்பாற் றுவதுஉன் கடமை யல்லவோ?
பயலையும் நீகண் பார்த்துக்கொள், ஐயா!
படிப்பான் கருத்தாய், பணந்தான் இல்லை, (45)
பரிட்சை கொடுத்துப் பாசாய் வரஇனும்
ஐந்து வருசம் ஆகும்,அப் பொழு(து)உன்
தங்கை வயதும் சரியாய் வந்திடும்.
மேற்கா ரியம்உன் விருப்பம் போலச்
செய்து கொள்நீ தெரிந்தது தானே? (50)

(வரிகள்: 51-100)[தொகு]

இந்த
ஊரி லுள்ள ஒரு பய லாவது
நல்லவன் என்றுநீ நம்பி விடாதே.
கொஞ்சம் இடம்நீ கொடுத்தா யானால்,
உள்ளதை யெல்லாம் ஒன்றில் லாமல் (55)
கொள்ளை யடித்துக் கொண்டுபோய் விடுவான்.
நச்சு வித்துகள்! நச்சு வித்துகள்!
நம்பல் ஆகாது! நம்பல் ஆகாது!
என்னடா, அப்பா? என்ன செய்யட்டும்?
வயித்தியன் ஒழுங்காய் வருகிறா னில்லை. (60)
தக்க மருந்தும் தருகிறா னில்லை,
பணம்பணம் என்று பதைத்துச் சாகிறான்-
எழுந்திருப் பதுவும் இனியிலை, ஆயினும்,
ஆட்டு லேகியம் கூட்டித் தின்றால்
சுகம்வரு மென்று சொல்லு கிறார்கள்! (65)
கையிற் பணமிலை, கடன்தரு வாரிலை,
வழக்கில் முதலை வாரி யெறிந்தேன்;
கிழக்கு மேற்காய்க் கிடக்கின் றேன்இதோ!
என்ன செய்யலாம்! யாரை நோகலாம்?”
என்றுஇம் மொழிகள் இசைப்பது கேட்(டு)அவர் (70)
கூடப் பிறந்(து)உயிர் கொள்ளும் வியாதிபோல்
அருமை மதினி ஆங்கார வல்லி
காந்தாரி யம்மை கடுகி வந்தாள்.
மகனை நோக்கி, “மடையா, மூடா!
முருக்குத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே!
ஐயா உன்னிடம் சொல்லி அனுப்பின
செய்திகள் என்ன?நீ செய்வதிங்(கு) என்ன?
நீயும்,
ஆண்பிள்ளை யோடா? அவலட் சணமே!
அத்தைமார் கூட அழவிருந் தனையோ? (80)
அவர்,
கைவிஷம் கொடுத்துக் கணவனைக் கைவசம்
ஆக்க நினைத்த அரக்கிகள் அல்லவோ,
வருசம் ஐந்தாய் வழக்கும் சண்டையும்
மூட்டி விட்ட முண்டைகள் அல்லவோ? (85)
நினைத்த காரியம் நிமிசம் முடிப்பரே!
மாய வல்லிகள் வலயில் நீயும்
விழுந்து விட்டாயோ? வெட்கம்! வெட்கம்!
போதும எழுந்திரு! போதும்! போதும்!
அரங்குக் கதவை அடைத்துப் பூட்டிவை; (90)
தட்டுக் கதவையும் சங்கிலி யிட்டுவை,
சாய்ப்புக் கதவிலும் தாழைப் போட்டுவை,
பொதிய மலையும் பொட்டண மாகிப்
புழைக்கடை வழியாய்ப் போய்விடும் அப்பா!
ஐயா வரும்வரை அங்கே நீதான் (95)
கருத்தாய் நின்று காத்திட வேண்டும்
இந்தா பூட்டுகள், இவையும் போதுமா?
அதிகம் வேண்டுமோ? அறிந்துசொல் அப்பா!”
என்றுஇப் படியாய் எக்கா ரியங்களும்
சரியாய்ப் பார்த்துச் சட்டம் கட்டி (100)

(வரிகள்: 101-150)[தொகு]

அரங்கு நடையின் அருகாய் ஓர்மலைப்
பாம்பு போலப் படுத்துக் கொண்டாள்.
நினைக்க நினைக்க என்நெஞ்சு வேகுதே!
ஐயோ! சிவசிவ! அரகர! அரகர!
போதும் போதும்! இச்சென்மம் போதும்! (105)
பட்ட துயரமும் பாடும் போதும்;
கணவர்க்கு அந்திய காலம், தண்ணீர்
குடிக்கும் பாத்திரம் குடுக்கை யானதும்
பரந்த சட்டி படிக்க மானதும்
பாலும் அன்னப் பாலே யானதும்,இனி (110)
எடுத்துச் சொல்வது ஏனோ? அம்மா!
மருமக் கள்வழி வந்து பிறந்தவர்க்கு
ஏதும் புதுமை இவற்றில் உண்டோ?
ஈனாப் பேய்ச்சிபோல எங்களை வெருட்டின
மதினியின் மீதும் வருத்தமொன் றில்லை. (115)
காயம் மணக்குமோ? காஞ்சிரம் இனிக்குமோ?
இயற்கையை மாற்ற யாரால் முடியும்?
இவையெலாம் அல்ல, என்றென் றைக்கும்என்
மனத்தி லிருந்து வாளா யறுப்பது!
நெஞ்சி லிருந்து நெருப்பா யெரிவது! (120)
மற்(று)அக் காரியம் வையக மெல்லாம்
அறியும் படியான் அறைவேன், அம்மா!
கணவரின் மரண காலத்து அங்கு
வந்திருந் தவர்என் மகனை நோக்கி
“தம்பி!உன் தந்தை தலைமாட் டிருந்து (125)
திருவாச கத்தில் சிற்சில பதிகம்
படி”யெனச் சொல்லிப் பண்ணை வீட்டில்
இருந்தொரு புத்தகம் எடுத்துக் கொடுத்தனர்.
பயலும் அதனைத் திறந்து பார்த்தான்,
‘ஆரே தமிழை அறிபவர்?’ என்றான்; (130)
‘பள்ளியில் தமிழும் படித்தேனோ?’ என்றான்,
‘பரீட்சையில் தமிழொரு பாடமோ?’ என்றான்;
‘என்னால் படிக்க இயலாது’ என்னச்
சுவரிற் சாய்ந்து சும்மா இருந்தான்.
ஐயோ!
அப்பன் மரணம் அடையுங் காலம்
எமவே தனைகள் இல்லா தாக்கவும்
சிந்தை சிவனடி சேரச் செய்யவும்
செந்தமிழ் மறையாந் திருவா சகத்தைப்
பக்க மிருந்து படிக்க அறியா (140)
மக்கள் படிப்பை வையகம் மதிக்குமோ?
நாஞ்சி னாட்டில் நல்லஆண் பிள்ளை
இல்லா ததனால் இப்படி யாச்சுது!
மலையா ளத்தில் வரைந்திடும் கோர்ட்டு
சமன்சு வந்தால் சரியாய்ப் படித்துக் (145)
காட்டுவ தோபெருங் காரியம் அம்மா!
ஈசன் கழலுக்கு எமையா ளாக்கும்
புண்ணிய நூல்களைப் புறக்கணித் திடுதல்
அறிவோ? அழகோ? ஆண்மையோ? அம்மா!
பண்டு தொட்டுப் பரம்பரை யாக (150)

(வரிகள்: 150-192)[தொகு]

முன்னோர் வைத்த முழுமணிப் பூணெலாம்
ஆசையோ டணிந்து அழகுபா ராமல்,
பாசிக் காகவும் பளிங்குக் காகவும்
கூச்ச மின்றியோர் குச்சுக் கடைபோய்க்
காத்துநிற் பவரைக் காசினி கண்டு (155)
சீசீ யென்று சிரித்தி டாதோ?
பைத்திய மென்று பழித்தி டாதோ?
அன்னை யாக்கிய அமுதினை உண்ணாது
அண்டை வீட்டுக் கூழை யலந்து
வாரி யுண்டு வயிறு நிரப்பும் (160)
மதியும் என்ன மதியோ? அம்மா!
நாஞ்சி னாட்டில் நடப்பவை யெல்லாம்
அதிசயம்! அதிசயம்! அதிசயம்! அம்மா!
பாவம்! சாமியும் சுவரிற் சாய்ந்து, கண்ணீர்
மாலை மாலையாய் வடித்தங் கிருந்தான். (165)
இந்தச் சமயம் எங்கள்புண் ணியத்தால்,
உலகெலாம் புகழும் உமையொரு பாகத்
தேசிகன் பாற்சிவ தீட்சை பெற்றவர்
நெற்றி நிறைந்த நீற்றுப் பூச்சினர்
கழுத்து நிறைந்த கண்டிகை யணிந்தவர் (170)
உலர்ந்து பழுத்த உடையை உடுத்தவர்
தளர்ந்த நடையினர் சாந்தம் உடையவர்
கண்டவர் தொழுத்தகு காட்சி கொண்டவர்
மாணிக்க வாசகர் வழங்கிய மணியெலாம்
பேணித் தம்உளப் பெட்டியில் வைத்துத் (175)
தினந்தினம் எம்மான் திருவடி சார்த்திப்
பணியுந் தொண்டர், பாக்கியம் பிள்ளைப்
பாட்டா வந்தனர்; படிப்புரை யிருந்தவர்
வேண்டிய காரியம் விளம்பக் கேட்டு,
உரைத்த நாத்தேன் ஊறி யெழவும் (180)
உள்ளமும் செவியும் ஒருங்கு குளிரவும்
திருத்த மாகத் திருவா சகத்தில்
பற்பல பதிகமும் பண்ணொடு ஓதினர்,
இப்படி அவரும் யாத்திரைப் பத்தில்
‘போவோம் காலம் வந்ததுகாண் (185)
போய்விட் டுடையான் கழல்புகவே’
என்ற பாகம் எடுத்துக் கூறவே,
கணவர்,
ஏங்கி யழுத எங்களை நோக்கினர்,
வாடி யழுத மக்களை நோக்கினர், (190)
கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்;
கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர்!

பத்தாவது, யாத்திரைப் படலம் முற்றும்[தொகு]

பார்க்க[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
1.குலமுறை கிளத்துப் படலம்
2.மாமி அரசியற் படலம்
3.கேலிப் படலம்
4.கடலாடு படலம்
5.பரிகலப் படலம்
6.நாகாஸ்திரப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
11.கும்பியெரிச்சல் படலம்
"https://ta.wikisource.org/w/index.php?title=10.யாத்திரைப்_படலம்&oldid=443587" இலிருந்து மீள்விக்கப்பட்டது