10.யாத்திரைப் படலம்
Jump to navigation
Jump to search
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]
ஓர் அங்கதக் காவியம்[தொகு]
(வரிகள்: 01-50)[தொகு]
- மூன்று மாத முன்ன தாகவே
- மனைவியர் இருவர் மாண்டு போயினார்!
- நாலாம் மனைவி நாடகக் காரியும்
- விடுமுறி போட்டு விலகி விட்டனள்.
- ஒருத்தி, பாவம், ஒருகதி யில்லாள் (05)
- நான்கு பிள்ளை நமனுக்குக் கொடுத்தாள்,
- பெற்றும் மலடி, பேசா மடந்தை,
- எனக்குத் துணையாய் இருந்தாள், அம்மா!
- எழுந்து நடக்க இயலா தாகிப்
- பாயிற் கணவர் படுத்தநாள் தொட்டு (10)
- அடைந்த துயரெலாம் அறிபவர் யாரோ?
- ஒருநாள்,
- தீனம் என்ற செய்தி யறிந்து
- மருமகன் வந்தான், வாயிலில் நின்றான்;
- எட்டிப் பார்த்தான், இனிஇவர் என்றும் (15)
- எழுந்திருப் பதுவு மிலையெனத் தேர்ந்தான்
- அண்டையிற் சென்றான், அழவும் செய்தான்!
- ‘என்ன வேண்டுவது?’ என்றும் கேட்டான்!
- பக்கத் திருந்த பாவிகள், யாங்கள்
- இருவரும் ஏங்கி இரங்கி யழுதோம். (20)
- கண்ட மக்களும் கதறி யழுதனர்,
- புருசனும் இதனைப் பொறுக்கமாட் டாமல்
- அருகில் நின்ற மருகனை நோக்கி,
- “அப்பா! வாடா, அண்டையில் இருடா!
- நாச காலர் நாலைந்து பேர்கள் (25)
- கூடி நம்மைக் கோர்ட்டில் நாடகம்
- ஆடும் படியாய் ஆக்கி விட்டனர்
- போகட்டும், போகட்டும், போனது போகட்டும்
- இன்றோ, நாளையோ இப்பொழு தோஎன்று
- எனக்கும் காலம் இறுகி விட்டது. (30)
- இந்நாள் வரையில், யான்என் மனைவி
- மக்களுக்கு என்றொரு வஸ்து வாகிலும்
- கொடுதத்து மில்லை; குடியிருப் பதற்கு
- வீடும் அவர்க்கு வேறிலை, அப்பா!
- தங்கத்தை நீயே தாலி கட்டினால், (35)
- கவலை யின்றிக் கட்டையை விடுவேன்,
- அவளும் சமைந்து ஈராண்டுகள் ஆச்சுது!
- கண்ணால் உங்கள் கல்யா ணத்தைக்
- காண்பனோ? தெய்வ கடாட்சம் எப்படியோ!
- அத்தைமார் இவர்கள் அல்லும் பகலும் (40)
- படும்பா டுகள்நீ பார்க்க வில்லையோ?
- அப்பா! இவரை ஆதரித்து என்றும்
- காப்பாற் றுவதுஉன் கடமை யல்லவோ?
- பயலையும் நீகண் பார்த்துக்கொள், ஐயா!
- படிப்பான் கருத்தாய், பணந்தான் இல்லை, (45)
- பரிட்சை கொடுத்துப் பாசாய் வரஇனும்
- ஐந்து வருசம் ஆகும்,அப் பொழு(து)உன்
- தங்கை வயதும் சரியாய் வந்திடும்.
- மேற்கா ரியம்உன் விருப்பம் போலச்
- செய்து கொள்நீ தெரிந்தது தானே? (50)
(வரிகள்: 51-100)[தொகு]
- இந்த
- ஊரி லுள்ள ஒரு பய லாவது
- நல்லவன் என்றுநீ நம்பி விடாதே.
- கொஞ்சம் இடம்நீ கொடுத்தா யானால்,
- உள்ளதை யெல்லாம் ஒன்றில் லாமல் (55)
- கொள்ளை யடித்துக் கொண்டுபோய் விடுவான்.
- நச்சு வித்துகள்! நச்சு வித்துகள்!
- நம்பல் ஆகாது! நம்பல் ஆகாது!
- என்னடா, அப்பா? என்ன செய்யட்டும்?
- வயித்தியன் ஒழுங்காய் வருகிறா னில்லை. (60)
- தக்க மருந்தும் தருகிறா னில்லை,
- பணம்பணம் என்று பதைத்துச் சாகிறான்-
- எழுந்திருப் பதுவும் இனியிலை, ஆயினும்,
- ஆட்டு லேகியம் கூட்டித் தின்றால்
- சுகம்வரு மென்று சொல்லு கிறார்கள்! (65)
- கையிற் பணமிலை, கடன்தரு வாரிலை,
- வழக்கில் முதலை வாரி யெறிந்தேன்;
- கிழக்கு மேற்காய்க் கிடக்கின் றேன்இதோ!
- என்ன செய்யலாம்! யாரை நோகலாம்?”
- என்றுஇம் மொழிகள் இசைப்பது கேட்(டு)அவர் (70)
- கூடப் பிறந்(து)உயிர் கொள்ளும் வியாதிபோல்
- அருமை மதினி ஆங்கார வல்லி
- காந்தாரி யம்மை கடுகி வந்தாள்.
- மகனை நோக்கி, “மடையா, மூடா!
- முருக்குத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே!
- ஐயா உன்னிடம் சொல்லி அனுப்பின
- செய்திகள் என்ன?நீ செய்வதிங்(கு) என்ன?
- நீயும்,
- ஆண்பிள்ளை யோடா? அவலட் சணமே!
- அத்தைமார் கூட அழவிருந் தனையோ? (80)
- அவர்,
- கைவிஷம் கொடுத்துக் கணவனைக் கைவசம்
- ஆக்க நினைத்த அரக்கிகள் அல்லவோ,
- வருசம் ஐந்தாய் வழக்கும் சண்டையும்
- மூட்டி விட்ட முண்டைகள் அல்லவோ? (85)
- நினைத்த காரியம் நிமிசம் முடிப்பரே!
- மாய வல்லிகள் வலயில் நீயும்
- விழுந்து விட்டாயோ? வெட்கம்! வெட்கம்!
- போதும எழுந்திரு! போதும்! போதும்!
- அரங்குக் கதவை அடைத்துப் பூட்டிவை; (90)
- தட்டுக் கதவையும் சங்கிலி யிட்டுவை,
- சாய்ப்புக் கதவிலும் தாழைப் போட்டுவை,
- பொதிய மலையும் பொட்டண மாகிப்
- புழைக்கடை வழியாய்ப் போய்விடும் அப்பா!
- ஐயா வரும்வரை அங்கே நீதான் (95)
- கருத்தாய் நின்று காத்திட வேண்டும்
- இந்தா பூட்டுகள், இவையும் போதுமா?
- அதிகம் வேண்டுமோ? அறிந்துசொல் அப்பா!”
- என்றுஇப் படியாய் எக்கா ரியங்களும்
- சரியாய்ப் பார்த்துச் சட்டம் கட்டி (100)
(வரிகள்: 101-150)[தொகு]
- அரங்கு நடையின் அருகாய் ஓர்மலைப்
- பாம்பு போலப் படுத்துக் கொண்டாள்.
- நினைக்க நினைக்க என்நெஞ்சு வேகுதே!
- ஐயோ! சிவசிவ! அரகர! அரகர!
- போதும் போதும்! இச்சென்மம் போதும்! (105)
- பட்ட துயரமும் பாடும் போதும்;
- கணவர்க்கு அந்திய காலம், தண்ணீர்
- குடிக்கும் பாத்திரம் குடுக்கை யானதும்
- பரந்த சட்டி படிக்க மானதும்
- பாலும் அன்னப் பாலே யானதும்,இனி (110)
- எடுத்துச் சொல்வது ஏனோ? அம்மா!
- மருமக் கள்வழி வந்து பிறந்தவர்க்கு
- ஏதும் புதுமை இவற்றில் உண்டோ?
- ஈனாப் பேய்ச்சிபோல எங்களை வெருட்டின
- மதினியின் மீதும் வருத்தமொன் றில்லை. (115)
- காயம் மணக்குமோ? காஞ்சிரம் இனிக்குமோ?
- இயற்கையை மாற்ற யாரால் முடியும்?
- இவையெலாம் அல்ல, என்றென் றைக்கும்என்
- மனத்தி லிருந்து வாளா யறுப்பது!
- நெஞ்சி லிருந்து நெருப்பா யெரிவது! (120)
- மற்(று)அக் காரியம் வையக மெல்லாம்
- அறியும் படியான் அறைவேன், அம்மா!
- கணவரின் மரண காலத்து அங்கு
- வந்திருந் தவர்என் மகனை நோக்கி
- “தம்பி!உன் தந்தை தலைமாட் டிருந்து (125)
- திருவாச கத்தில் சிற்சில பதிகம்
- படி”யெனச் சொல்லிப் பண்ணை வீட்டில்
- இருந்தொரு புத்தகம் எடுத்துக் கொடுத்தனர்.
- பயலும் அதனைத் திறந்து பார்த்தான்,
- ‘ஆரே தமிழை அறிபவர்?’ என்றான்; (130)
- ‘பள்ளியில் தமிழும் படித்தேனோ?’ என்றான்,
- ‘பரீட்சையில் தமிழொரு பாடமோ?’ என்றான்;
- ‘என்னால் படிக்க இயலாது’ என்னச்
- சுவரிற் சாய்ந்து சும்மா இருந்தான்.
- ஐயோ!
- அப்பன் மரணம் அடையுங் காலம்
- எமவே தனைகள் இல்லா தாக்கவும்
- சிந்தை சிவனடி சேரச் செய்யவும்
- செந்தமிழ் மறையாந் திருவா சகத்தைப்
- பக்க மிருந்து படிக்க அறியா (140)
- மக்கள் படிப்பை வையகம் மதிக்குமோ?
- நாஞ்சி னாட்டில் நல்லஆண் பிள்ளை
- இல்லா ததனால் இப்படி யாச்சுது!
- மலையா ளத்தில் வரைந்திடும் கோர்ட்டு
- சமன்சு வந்தால் சரியாய்ப் படித்துக் (145)
- காட்டுவ தோபெருங் காரியம் அம்மா!
- ஈசன் கழலுக்கு எமையா ளாக்கும்
- புண்ணிய நூல்களைப் புறக்கணித் திடுதல்
- அறிவோ? அழகோ? ஆண்மையோ? அம்மா!
- பண்டு தொட்டுப் பரம்பரை யாக (150)
(வரிகள்: 150-192)[தொகு]
- முன்னோர் வைத்த முழுமணிப் பூணெலாம்
- ஆசையோ டணிந்து அழகுபா ராமல்,
- பாசிக் காகவும் பளிங்குக் காகவும்
- கூச்ச மின்றியோர் குச்சுக் கடைபோய்க்
- காத்துநிற் பவரைக் காசினி கண்டு (155)
- சீசீ யென்று சிரித்தி டாதோ?
- பைத்திய மென்று பழித்தி டாதோ?
- அன்னை யாக்கிய அமுதினை உண்ணாது
- அண்டை வீட்டுக் கூழை யலந்து
- வாரி யுண்டு வயிறு நிரப்பும் (160)
- மதியும் என்ன மதியோ? அம்மா!
- நாஞ்சி னாட்டில் நடப்பவை யெல்லாம்
- அதிசயம்! அதிசயம்! அதிசயம்! அம்மா!
- பாவம்! சாமியும் சுவரிற் சாய்ந்து, கண்ணீர்
- மாலை மாலையாய் வடித்தங் கிருந்தான். (165)
- இந்தச் சமயம் எங்கள்புண் ணியத்தால்,
- உலகெலாம் புகழும் உமையொரு பாகத்
- தேசிகன் பாற்சிவ தீட்சை பெற்றவர்
- நெற்றி நிறைந்த நீற்றுப் பூச்சினர்
- கழுத்து நிறைந்த கண்டிகை யணிந்தவர் (170)
- உலர்ந்து பழுத்த உடையை உடுத்தவர்
- தளர்ந்த நடையினர் சாந்தம் உடையவர்
- கண்டவர் தொழுத்தகு காட்சி கொண்டவர்
- மாணிக்க வாசகர் வழங்கிய மணியெலாம்
- பேணித் தம்உளப் பெட்டியில் வைத்துத் (175)
- தினந்தினம் எம்மான் திருவடி சார்த்திப்
- பணியுந் தொண்டர், பாக்கியம் பிள்ளைப்
- பாட்டா வந்தனர்; படிப்புரை யிருந்தவர்
- வேண்டிய காரியம் விளம்பக் கேட்டு,
- உரைத்த நாத்தேன் ஊறி யெழவும் (180)
- உள்ளமும் செவியும் ஒருங்கு குளிரவும்
- திருத்த மாகத் திருவா சகத்தில்
- பற்பல பதிகமும் பண்ணொடு ஓதினர்,
- இப்படி அவரும் யாத்திரைப் பத்தில்
- ‘போவோம் காலம் வந்ததுகாண் (185)
- போய்விட் டுடையான் கழல்புகவே’
- என்ற பாகம் எடுத்துக் கூறவே,
- கணவர்,
- ஏங்கி யழுத எங்களை நோக்கினர்,
- வாடி யழுத மக்களை நோக்கினர், (190)
- கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்;
- கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர்!