திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து


"நன்றி கொன்றோரின் நம்பிக்கை குளிர்காலத்து உறைபனிபோல் உருகிவிடும்; பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்." - சாலமோனின் ஞானம் 16:29.

சாலமோனின் ஞானம் (The Book of Wisdom)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

இஸ்ரயேல் சிலைவழிபாட்டில் ஈடுபடவில்லை[தொகு]


1 எங்கள் கடவுளே,
நீர் பரிவும் உண்மையும் பொறுமையும் உள்ளவர்;
அனைத்தையும் இரக்கத்துடன் ஆண்டுவருகின்றீர்.


2 நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே;
ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம்.
நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்;
ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை
நாங்கள் அறிவோம்.


3 உம்மை அறிதலே நிறைவான நீதி;
இறவாமைக்கு ஆணிவேர்.


4 தீய நோக்குடைய மனிதரின் திறமைகள்
எங்களைத் திசைதிருப்பிவிடவில்லை;
ஓவியரின் பயனற்ற உழைப்பாகிய
பல வண்ணம் தீட்டிய உருவமும்
எங்களை ஏமாற்றிவிடவில்லை.


5 அறிவிலிகள் அவற்றின்மீது பேராவல் கொள்ளுமாறு
அவற்றின் தோற்றமே தூண்டிவிடுகிறது.
அதனால் செத்துப்போன சாயலின்
உயிரற்ற உருவத்தை அவர்கள் விரும்புகிறார்கள்.


6 அவற்றைச் செய்பவர்களும்
அவற்றின்மீது ஆவல் கொள்பவர்களும்
அவற்றை வணங்குபவர்களும்
தீமையை விரும்புகிறார்கள்;
இத்தகைய சிலைகளில் அவர்கள்
நம்பிக்கைகொள்ளத் தகுந்தவர்களே.

சிலைகளைச் செய்வோர் மூடர்[தொகு]


7 குயவர்கள் வருந்தி உழைத்து,
மென்மையான களிமண்ணைப் பிசைந்து,
நம்முடைய தேவைக்காக
ஒவ்வொரு மண்கலத்தையும் வனைகிறார்கள்;
ஒரே மண்ணைக் கொண்டுதான்
நல்ல வகையிலும் மாறான வகையிலும் பயன்படுகிற
கலங்களைச் செய்கிறார்கள்;
இவற்றில் ஒவ்வொன்றும் எவ்வகையில்
பயன்பட வேண்டும் என்பதைக்
குயவர்களே முடிவு செய்கிறார்கள். [1]


8 வீணில் உழைத்து அதே களிமண்ணால்
பயனற்ற தெய்வம் ஒன்றை உருவாக்குகிறார்கள்.
ஆனால் அவர்களே சிறிது காலத்திற்குமுன்
அதே மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்;
சிறிது காலத்திற்குப்பின்,
தங்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட
ஆன்மாக்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பொழுது,
அவர்கள் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டிருந்தார்களோ
அந்த மண்ணுக்கே திரும்பிப் போகிறார்கள்.


9 ஆனால் தாம் சாகவேண்டும் என்பதைப் பற்றியோ
தம் வாழ்நாள் குறுகியது என்பதைப்பற்றியோ
அவர்கள் கவலைப்படுவதில்லை.
மாறாக, பொன், வெள்ளியில்
வேலை செய்பவர்களுடன் போட்டியிடுகிறார்கள்.
வெண்கலத்தில் வேலை செய்கிறவர்களைப்போலச்
செய்ய முயல்கிறார்கள்;
போலித் தெய்வங்களின் சிலைகளைச் செய்வதில்
பெருமை கொள்கிறார்கள்.


10 அவர்களுடைய இதயம் வெறும் சாம்பல்.
அவர்களது நம்பிக்கை புழுதியிலும் கீழானது.
அவர்களது வாழ்க்கை களிமண்ணினும் இழிவானது.


11 ஏனெனில் தங்களை உருவாக்கியவரும்
தங்களுக்குள் ஆற்றல்மிக்க ஆன்மாவைப் புகுத்தியவரும்
உயிர்மூச்சை ஊதியவரும் யார் என்று
அவர்கள் அறியவில்லை.


12 அவர்களோ நம் வாழ்க்கையை
ஒருவகை விளையாட்டாகவும்,
நம்முடைய வாழ்நாளைப் பணம் சேர்க்கக்கூடிய
ஒரு திருவிழாச் சந்தையாகவும் கருதுகிறார்கள்;
ஏனெனில் ஒருவர் எவ்வழியாலும் ஏன், தீய வழியாலுங்கூட,
பணம் சேர்க்கவேண்டும் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். [2]


13 உடையக்கூடிய மண்கலங்களையும்
வார்ப்புச் சிலைகளையும்
அவர்கள் செய்யும்போது
தாங்கள் பாவம் செய்வதை
மற்றெல்லாரையும்விட நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

எகிப்தியரின் மடமை[தொகு]


14 உம் மக்களை ஒடுக்கிய பகைவர்கள் அனைவரும்
மற்ற யாவரினும் அறிவிலிகள்;
சிறு குழந்தைகளைவிட இரங்குதற்குரியவர்கள்.


15 ஏனெனில் வேற்றினத்தாரின் சிலைகள் கண்களால் காணவோ,
மூக்கினால் மூச்சு விடவோ,
காதுகளால் கேட்கவோ,
விரல்களால் தொட்டுணரவோ,
கால்களால் நடக்கவோ முடியாத போதிலும்
அவற்றையெல்லாம் தெய்வங்கள் என்று இவர்கள் எண்ணினார்கள்.


16 அவற்றைச் செய்தவர்கள் வெறும் மனிதர்களே;
அவற்றை உருவாக்கியவர்கள்
தங்களது உயிரைக் கடனாகப் பெற்றவர்கள்.
ஆனால் தங்களுக்கு இணையான ஒரு தெய்வத்தை
எந்த மனிதரும் உருவாக்க முடியாது.


17 அவர்களோ சாகக்கூடியவர்கள்.
நெறிகெட்ட தங்கள் கைகளால் அவர்கள் செய்வது உயிரற்றதே!
தாங்கள் வணங்குகிற சிலைகளை விட அவர்கள் மேலானவர்கள்;
ஏனெனில் அவர்களுக்கு உயிர் உண்டு;
அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை.


18 மேலும், உம் மக்களின் பகைவர்கள்
மிகவும் அருவருப்பான விலங்குகளைக் கூட வணங்குகிறார்கள்;
அறிவின்மையை வைத்து ஒப்பிடும்போது,
இவை மற்றவற்றைவிடத் தாழ்ந்தவை.


19 விலங்குகள் என்னும் அளவில்கூட,
மனிதர்கள் விரும்பும் அழகு அவற்றின் தோற்றத்தில் இல்லை.
இறைவன் தம் படைப்பைப் பாராட்டி ஆசி வழங்கியபொழுது,
அவை ஒதுங்கிப் போய்விட்டன.


குறிப்புகள்

[1] 15:7 = சீஞா 38:29-30; எரே 18:3-4; எசா 45:9.
[2] 15:12 = யாக் 4:13.


அதிகாரம் 16[தொகு]

கொடிய விலங்குகளும் காடைகளும்[தொகு]


1 எனவே அவர்கள் அவற்றைப் போன்ற உயிரினங்களால்
தக்கவாறு தண்டிக்கப்பட்டார்கள்;
விலங்குக் கூட்டத்தால் வதைக்கப்பட்டார்கள்.


2 இத்தகைய தண்டனைக்கு மாறாக
நீர் உம் மக்களுக்குப் பரிவு காட்டினீர்;
சுவை மிகுந்த அரிய உணவாகிய காடைகளை
அவர்களுக்கு உண்ணக் கொடுத்தீர்;
இவ்வாறு, அவர்களது ஆவலைத் தணித்தீர்.


3 எகிப்தியர்கள் உணவு அருந்த விரும்பியபோதிலும்,
அவர்கள்மீது ஏவப்பட்ட அருவருக்கத்தக்க விலங்குகளால்
உணவின்மேல் அவர்களுக்கு இருந்த நாட்டமே அற்றுப் போயிற்று.
உம் மக்களோ சிறிது காலம் வறுமையில் வாடியபின்
அருஞ்சுவை உணவை உண்டார்கள்.


4 ஏனெனில் கொடுமை செய்தவர்கள்
கடுமையான பற்றாக்குறைக்கு ஆளாகவேண்டியிருந்தது.
உம் மக்களுக்கோ அவர்களுடைய பகைவர்கள்
எவ்வாறு அல்லல் படுகிறார்கள் என்று மட்டும்
காட்டவேண்டியிருந்தது.

வெட்டுக்கிளிகளும் வெண்கலப் பாம்புகளும்[தொகு]


5 உம் மக்கள்மேல் காட்டு விலங்குகள்
கடுஞ்சீற்றத்துடன் பாய்ந்தபோது,
நெளிந்து வந்த நச்சுப்பாம்புகளின் கடியால்
அவர்கள் அழிந்துகொண்டிருந்தபோது,
உமது சினம் இறுதிவரை நீடிக்கவில்லை.


6 எச்சரிக்கப்பட வேண்டிச் சிறிது காலம்
அவர்கள் துன்பத்திற்கு உள்ளானார்கள்.
உமது திருச்சட்டத்தின் கட்டளையை நினைவூட்ட
மீட்பின் அடையாளம் ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.


7 அப்போது அதை நோக்கித் திரும்பியோர்
தாங்கள் பார்த்த பொருளால் அன்று,
அனைவருக்கும் மீட்பரான உம்மாலேயே மீட்புப் பெற்றார்கள்.


8 இதனால் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பவர் நீரே என்று
எங்கள் பகைவர்களை நம்பச் செய்தீர்.


9 ஏனெனில் அவர்கள் வெட்டுக்கிளிகளாலும்
ஈக்களாலும் கடியுன்டு மாண்டார்கள்.
அவர்கள் உயிரைக் காப்பதற்கு
மருந்து எதுவும் காணப்படவில்லை.
அவர்கள் இத்தகையவற்றால் தண்டிக்கப்படத் தக்கவர்கள்.


10 ஆனால் நச்சுப் பாம்புகளின் பற்களால்கூட
உம் மக்களை வீழ்த்த முடியவில்லை.
உமது இரக்கம் அவர்களுக்குத் துணைநின்று நலம் அளித்தது.


11 உம் சொற்களை அவர்கள் நினைவுகூரும் பொருட்டு
அவர்கள் கடிபட்டார்கள்;
ஆனால் உடனே நலம் அடைந்தார்கள்.
அவர்கள் ஆழ்ந்த மறதிக்கு உள்ளாகி,
உம் பரிவை உதறித்தள்ளாதபடி இவ்வாறு நடந்தது.


12 பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை;
ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே
எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது.


13 வாழ்வின்மேலும் சாவின்மேலும் உமக்கு அதிகாரம் உண்டு.
மனிதர்களைப் பாதாளத்தின் வாயில்வரை கொண்டு செல்கிறீர்;
மீண்டும் அங்கிருந்து கொண்டு வருகிறீர்.


14 மனிதர் தம் தீய பண்பினால் ஒருவரைக் கொன்று விடுகின்றனர்.
ஆனால் பிரிந்த உயிரை அவர்களால் திருப்பிக் கொணர முடியாது.
சிறைப்பட்ட ஆன்மாக்களை அவர்களால் விடுவிக்கவும் முடியாது.

கல்மழையும் மன்னாவும்[தொகு]


15 ஒருவரும் உமது கையினின்று தப்பமுடியாது.


16 உம்மை அறிய மறுத்துவிட்ட இறைப்பற்றில்லாதவர்கள்
உமது கைவன்மையால் வதைக்கப்பட்டார்கள்;
பேய் மழையாலும் கல் மழையாலும்
கடும் புயலாலும் துன்புறுத்தப்பட்டு,
தீயால் அறவே அழிக்கப்பட்டார்கள்.


17 எல்லாவற்றையும்விட நம்பமுடியாதது எது என்றால்,
அனைத்தையும் அவிக்கக்கூடிய தண்ணீரில்
அந்த நெருப்பு இன்னும் மிகுதியாய்க் கொழுந்துவிட்டு எரிந்ததுதான்!
ஏனெனில் அனைத்துலகும் நீதிமான்களுக்காகப் போராடுகிறது.


18 கடவுளின் தண்டனைத் தீர்ப்பு
தங்களைப் பின்தொடர்கிறது என்பதை
இறைப்பற்றில்லாதவர்கள் கண்டுணருமாறும்,
அவர்களுக்கு எதிராய் அனுப்பப்பட்ட உயிரினங்கள் எரிந்து விடாதவாறும்,
நெருப்பின் அனல் சில வேளைகளில் மட்டுப்படுத்தப்பட்டது.


19 மற்றும் சில வேளைகளில்
நீதியற்ற நாட்டின் விளைச்சலை அழிக்கவே
தண்ணீர் நடுவிலும் அந்நெருப்பு
முன்னைவிட மிகக் கடுமையாக எரிந்தது.


20 இவற்றுக்கு மாறாக உம் மக்களை
வானதூதரின் உணவால் ஊட்டி வளர்த்தீர்;
எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை,
அவர்களது உழைப்பு இல்லாமலே படைக்கப்பட்ட உணவை
வானத்திலிருந்து அவர்களுக்கு அளித்தீர்.


21 நீர் அளித்த உணவூட்டம்
உம் பிள்ளைகள்பால் நீர் கொண்டிருந்த
இனிய உறவைக் காட்டியது;
ஏனெனில் அந்த உணவு
உண்போரின் சுவையுணர்விற்கு ஏற்றவாறு மாறி,
அவரவர் விரும்பிய சுவை தந்தது.


22 கல்மழையில் கனன்றெரிந்து,
கடும் மழையில் சுடர்விட்ட நெருப்பே
பகைவர்களுடைய விளைச்சலை அழித்தது என்று
அவர்கள் அறிந்துகொள்ளுமாறு,
பனியும் பனிக்கட்டியும் உருகிடாமல்
நெருப்பின் அனலைத் தாங்கின.


23 ஆனால் அதே நெருப்பு,
நீதிமான்கள் ஊட்டம் பெறும்படி
தனது இயல்பான ஆற்றலை மீண்டும் மறந்துவிட்டது.


24 படைத்தவரான உமக்கு ஊழியம் புரிகின்ற படைப்பு
நெறிகெட்டோரைத் தண்டிக்க முனைந்து நிற்கிறது;
உம்மை நம்பினோரின் நலனை முன்னிட்டு
அது பரிவோடு தணிந்து போகிறது.


25 எனவே அந்நேரத்திலேயே
படைப்பு எல்லா வகையிலும்
தன்னை மாற்றியமைத்துக் கொண்டது;
தேவைப்பட்டவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப,
எல்லாரையும் பேணிக் காக்கும் உமது வள்ளன்மைக்குப் பணிந்தது.


26 ஆண்டவரே, மனிதரைப் பேணிக்காப்பது
நிலத்தின் விளைச்சல் அல்ல,
மாறாக, உமது சொல்லே
உம்மை நம்பினோரைக் காப்பாற்றுகிறது என
நீர் அன்புகூரும் உம் மக்கள் இதனால் அறிந்து கொள்வார்கள்.


27 நெருப்பினால் எரிபடாதது
காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றாலேயே
வெப்பம் அடைந்து எளிதில் உருகிற்று.


28 கதிரவன் எழுமுன்பே மக்கள் எழுந்து
உமக்கு நன்றி கூறவும்
வைகறை வேளையில் உம்மை நோக்கி மன்றாடவும் வேண்டும் என்று
இதனால் உணர்த்தப்பட்டது.


29 ஏனெனில் நன்றி கொன்றோரின் நம்பிக்கை
குளிர்காலத்து உறைபனிபோல் உருகிவிடும்;
பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்.


குறிப்புகள்

[1] 16:1 = 1 விப 8:1-15:3.
[2] 16:2 = விப 16:11-13; எண் 11:31-32.
[3] 16:5 = விப 8:16-24; 10:1-20.
[4] 16:6-7 = எண் 21:6-9; யோவா 3:14-15.
[5] 16:16 = விப 9:22-26.
[6] 16:20 = விப 16:13-36.
[7] 16:26 = இச 8:3; மத் 4:4; லூக் 4:4.


(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 17 முதல் 19 வரை