4
‘நிகண்டு நூற்கள்’ என்னும் தலைப்பில் சொற் பொழிவாற்றுவதற்கு வேண்டிய குறிப்புக்களைத் திரட்டத் தொடங்கிய நான், செய்யுள் வடிவில் சொற்கட்குப் பொருள் கூறும் நிகண்டு நூற்களோடு மட்டும் நின்று விடாமல், சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக அகர வரிசையில் அடுக்கிப் பொருள் கூறும் இக்காலப் பலதுறை அகராதிகளிலுங்கூடக் கண்செலுத்தினேன். ஒரு திங்கள் பொழுது ஓடியாடி அயராது உழைத்து அளவற்ற குறிப்புக்களைத் திரட்டிவிட்டேன்.
அறிவு விருந்து
எனது அடங்காத அறிவுப் பசிக்கு விருந்தாகப் பல்வேறு நிகண்டுகளையும் அகராதிகளையும் அளித்து உதவிய அன்பர்களை இங்கே குறிப்பிடாமல் நன்றி மறந்து விட்டுவிடக் கூடாது. திரு. தேசிகப் பிள்ளையவர்கள், புதுவைத் தமிழறிஞர் திரு. குகா. இராச மாணிக்கம் பிள்ளையவர்கள், புதுவை மாநிலக் கல்வித் துறை இயக்குநர் திரு. ரொலான் பரஞ்சோதியவர்கள், கடலூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியாசிரியர் திரு. மகாலிங்க ஐயர் அவர்கள், புதுவை தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. அ. பாண்டுரங்கன் அவர்கள், புதுவை சித்த மருத்துவ அறிஞர் திரு. பரமதயாளம் பிள்ளை யவர்கள், புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகப் புரவுலர் திரு. சிங்கார குமரேசனார் அவர்கள், புதுவை பெத்தி செமினர் உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் திரு. க. அப்பர் அவர்கள் ஆகியோர், நான் பல நாட்கள் வைத்துப் பயன்படுத்திக் கொள்ளும்படி சிற்சில நிகண்டுகளும் அகராதிகளும் தந்துதவினார்கள். ஏற்கெனவே என்னிடமும் சில நிகண்டுகளும் அகராதிகளும் இருந்தன.