அங்கும் இங்கும்/புதுயுகத் தலைவர்

விக்கிமூலம் இலிருந்து
13 புதுயுகத் தலைவர்


'படி, படி, படி' ; இந்நல்லுரை, அறவுரை, ஊக்க உரை: எளிய அமைப்பும், உயரிய கருத்தும் நிறைந்த இவ்வுரை, சோவியத் நாட்டிலுள்ள எல்லா வயதினரையும் கவர்ந்தது இதுவே அந்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இன்றும் இருக்கிறது. கோடாலு கோடி மக்களைத் தொடர்ந்து உந்துகிறது.

இது எங்களுக்கு வியப்பாக இருந்தது. இவ்வெளிய உரைக்கு எங்கிருந்து வந்தது இத்தனைப் பேராற்றல் ? எப்போதோ ஒரு முறை எழுச்சியூட்டினாலும் பல்லாண்டுகளாக ஆற்றல் குறையாது ஊக்குவதன் இரகசியம் என்ன ?

இவ்வையப்பாடுகள் எழுந்தன. இவற்றை மெல்ல வெளியிட்டோம். விளக்கமும் பெற்றோம். அவற்றின் சாரத்தை உங்கள் முன் படைக்கின்றேன். இதோ :

இவ்வுரையை வழங்கியது யார் ? குழந்தையைப் படிக்க வைக்கப் பாடுபடும், சாதாரண தொடக்கப் பள்ளி ஆசிரியரா? இல்லை.

முதல் தலைமுறையாக ஏழை மாணவர்களுக்கு உயர் நிலைக் கல்வியளிக்க முயலும் பட்டதாரி ஆசிரியரா? இல்லை. 

‘கல்லூரிக்கு எப்படியோ வந்துவிட்டார்களே ! நமக்குத் தெரிந்தைச் சொல்லிப் பார்ப்போம்’ என்று நினைக்கும் பேராசிரியரா? அவரும் இல்லை.

கல்வி ஆய்வாளர்களா? கல்வித் துறைப் பெரியவர்களா? இல்லை. கல்வித் துறையினரல்ல, மேற் கூறிய அற, ஊக்க உரையை வழங்கியது. பின் யார் ?

“வறுமைப் பாதாளத்தில் வாடி, அறியாமைக் காரிருளில் நடுங்கி, கொத்தடிமைப் பிழைப்புப் பிழைத்து வந்த கோடானு கோடி மக்களுக்குப் புது வாழ்வு தந்த, புது யுகம் அமைத்த எங்கள் தலைவர் காட்டினார் இந்த இலட்சியத்தை” என்று பக்திப் பரவசத்தோடு கூறினார் சோவியத் கல்வியாளர்.

அத்தலைவர் யாரோ ? என்ன பேரோ ?

“அவர் லெனின் ; தோழர் லெனின்; சோவியத் நாட்டின் தந்தை லெனின் பெரியார் லெனின்” இவ்வகையிலே லெனினைப் பற்றிக் கூறக் கேட்டோரம்.

'படி, படி, படி' என்கிற இலட்சியத்தை யாருக்குக் கொடுத்தார் ? ஒரு பிரிவினருக்கா கொடுத்தார் ? இல்லை ! பலருக்கா கொடுத்தார் ? இல்லை. பல பிரிவினருக்கா கொடுத்தார் ? ஆம் அப்படியே.

மாபெருந் தலைவர் எச்சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார் தெரியுமா ?

பல்லாண்டுகளுக்கு முன், சோவியத் ஆட்சி அமைவதற்கு முன், பாட்டாளி ஆட்சிக்குத் திட்டம் தீட்டும் காலம், அது. இரகசியத் திட்டம் தீட்டும் காலம் பலப்பல குழுவினருக்குப் பலப்பல பொறுப்புகள் ஒதுக்கப்பட்ட மிக தெருக்கடியான காலம்.

அப்போது இளைஞர் சிலர், தோழர் லெனினை இரகசியமாகக் கண்டனர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துடிக்கும் ஆவலைத் தெரிவித்தனர். அவ்விளைஞர்கள், மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டார் ; அவர், அவர் களுக்கு ஒதுக்கிய பணி, படிப்பு ; வேறு பொறுப்புகள் அல்ல.

பிற பொறுப்புகளுக்குத் தேவைக்குமேல் ஆட்கள் கிடைத்துவிட்டதாலா ? இல்லையென்று கேள்விப்பட்டோம். பின் என்ன காரணத்தால் ?

லெனின் சிந்தித்தது இரஷ்யாவின் உடனடி எதிர்காலத்தைப் பற்றி மட்டுமல்ல; திட்டமிட்டதும் உடனடித்தேவைக்கு மட்டுமல்ல நீண்ட எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தார். நீண்ட எதிர்கால வளர்ச்சிக்கும் என்னென்ன தேவை என்று சிந்தித்தார், தெரிவித்தார்.

‘நவீன கல்வியே இரஷிய நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் வளத்திற்கும் துணை செய்யும். அக் கல்வி எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக, ஆழமாகப் பரவுகிறதோ, அவ்வளவிற்கே, இரஷிசியாவின் எதிர்காலம் நன்றாக இருக்கும் : உறுதியாக இருக்கும். எத்தகைய நிலையையும் தாங்கக் கூடியதாக இருக்கும்’ என்று உணர்ந்தார்.

‘மாணவர்களை அப்போதைய கிளர்ச்சிக்கு இழுத்து சிட்டுவிட்டால். புதிய இரஷியாவை, பொதுவுடைமை இரஷியாவை உருவாக்குவதற்கு வேண்டிய அறிவாளிகள், விஞ்ஞானிகள், தொழில் வல்லுநர்கள் பொறுப்பேற்கும், ஆற்றல் உடையவர்கள் ஆகியோருக்குப் பஞ்சம் ஏற்பட்டு விடும். அப்பஞ்சம் எல்லாத் துறைகளையும் பாதிக்கும’ என்று தெரிந்து மாணவர்களைக் கிளர்ச்சிக்காரர்களாக்காமல், ஆயத்தக்காரர்களாக இயங்கச் செய்தார்.

இப்படி அவர் நல்வழியில் நடத்தியதால், அதைப் பின்பற்றி எங்கள் மாணவ சமுதாயம் கற்கும் சமுதாயமாகவே இருந்து வருகிறது. கற்றது போதாது; மேலும் மேலும் கற்க வேண்டும் ; கற்றதைப் பயன்படுத்த வேண்டும் ; சமூக நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு, பெருநடை போட்டு வருகிறது . எங்கள் இளைய தலைமுறை யினரைப் பற்றி நாங்கள் பூரிப்படைகிறோம்" என்று சோவியத் கல்வியாளர்கள் கூறக் கேட்டோம்.

மாணவர்களை விதைநெல் போன்று கட்டிக் காத்த பெருத் தலைவரைப் பற்றி அவர்கள் பெருமை கொள்வதில் வியப்பில்லை. ஆனால் அவர் காட்டிய அறிவு வழியை, ஆக்க வழியை, பத்திய வழியை அவருக்குப் பின்னரும், பல்லாண்டு களாக, நாடு முழுவதும், கோடானுகோடி மக்களும், தொடர்ந்து பின்பற்றி வருவது எங்களுக்குப் பெரும் வியப்பாக, இருந்தது.

“என்னே ! உங்களுக்குத் தலைவரிடம் உள்ள பற்று” என்று பாராட்டினோம்.

“வாழ்வளித்த பெரியவருக்கு தாங்கள் செய்யக் கூடியது. வேறு என்ன இருக்கிறது ? தம் நன்மைக்காகப் பெருமைக்காக அல்லாது, மக்களின் நீண்ட எதிர்காலத்திற்காக, நாட்டின் நிலையான நல்வாழ்விற்காக வழிகாட்டினால், அதைக்கூடப் பின் பற்ற முடியாத மக்கள் இருந்தென்ன; போயென்ன ?” என்று பரவசத்தோடு ஒருவர் விளக்கக் கேட்டோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டோம். போற்ற மட்டும் கற்றுக்கொண்டு, பின்பற்றுவதற்கு வேண்டிய ஊக்கமும் உள் வலியும் அற்றுக் கிடக்கும் நம்மை எண்ணி நாணியதை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ !

“இளைஞர் சமுதாயம், மாணவர் சமுதாயம், பொதுச் சமுதாயத்தின் ஒரு பகுதி ; சிறு பகுதியும் கூட. சமுதாயம் முழுவதும், கல்வியின் தேவையையும், அருமையையும் பெருமையையும் உணர்ந்து, அதற்குத் துணை நின்றால் மட்டுமே, அப்படித் துணை புரியும்போதே, இளைஞர் கல்விப்பயிர் அழிக்கப்படாதிருக்கும்."

“ஆகவே மாணவர் சமுதாயத்தில் மட்டுமின்றி, பொதுச்சமுதாயம் முழுவதிலும் கல்விச் சூழ்நிலையை வளர்த்து விட்டார் லெனின்” என்றார்.