பக்கம்:திருவாசகத்தேன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 171

ஆன்மாவுக்கு நல்லன காண, நல்லன கேட்க வாய்ப்பளிக்காது; வாய்ப்பளிக்காதது மட்டுமல்ல- தடுக்கும். இந்த அளவில் அந்த இருள்- அறியாமை நின்றால் பரவாயில்லை. தீச்செயல்களைச் செய்யத் தூண்டும்; துணை போகும். அத்திச் செயல்கள் பிறவிக்கு வித்தாக அமைந்துவிடும். பிறவியின் நோக்கம் செயல். ஆனால் அச்செயல்- வினை இருள்சேர் இருவினையாக அமையாமல் ஒளி சேர் வினையாக, வாசனையாக அமையாத செயலாக- வினையாக அமைதல் வேண்டும்.

பிறவியின் நோக்கம் இருளை அகற்றுதல். இருள்சேர் இருவினையிலிருந்து விடுதலை பெறுதல் குறைவிலிருந்து நீங்கி நிறைவைப் பெறுதல்; குற்றங்களின்றும் விடுதலை பெறுதல்; குற்றங்களை நீக்கிக் குணங்களைக் கொள்ளல்; சிந்தையிலும் செயலுறுப்புக்களிலும் பூட்டப் பெற்றுள்ள விலங்குகளை உடைத்து விடுதலை பெறுதல்; பரிபூரணனுக்கு அடிமையாதல் முதலியனவாகும். இப்படிப் பிறவியின் நோக்கம் நிற்ைவேற, முதலில் அறியாமையிலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும். அறியாமை அகலுதலைத் 'தெளிதல்' என்று தேவாரம் கூறும்.

"சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினும் சிவமுமாகி" என்று அப்பரடிகளும், "தெயவத் தெளிவின் தெளித்தோரப் பேணுமின்!" என்று இளங்கோவடிகளும் அருளியுள்ளமை உணரத்தக்கன. துன்பங்களிலிருந்தும் துன்பத் தொடக்குகளிலிருந்தும் அறவே விலக வேண்டுமானால் இறைவனின் திருவருள் தேவை.

அறியாமையில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, இறைவனைத் தேடாது. தேடினாலும் அவன் அகப்படுவதில்லை. ஆதலால் கருணையுடைய இறைவன் உயிர்க்குயிரதாகப் புகுந்து நின்றருளி ஆட்கொள்கின்றவன். இறைவன் ஆன்மாவினுள் உயிர்க்குயிரதாக எழுத்தருள்வது. இருள்கடிந்து எழுகின்ற ஞாயிறு.